"சின்ன சின்ன பேய் கதைகள்"




"சின்ன சின்ன பேய் கதைகள்"
கதை 1: ("அப்பா ஒரு கதை சொல்லு")

(கதை, கற்பனை, எழுத்து :ரா.பிரபு)

பேய் கதைகள் என்கிற விஷயம் இருக்கே அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த ஒரு சமாச்சாரம்.
அதனால் இம்முறை சிறியவர்கள் முதல் அனைவரும் படிக்கும் படி அதிக கொடூரம் இல்லாமல் சில பேய் சிறு கதைகள் எழுத இருக்கிறேன்...
வாங்க முதல் கதைக்கு போவோம்..

(கதை 1 :  "அப்பா ஒரு கதை சொல்லு")

இருளும் குளிரும் கலந்து ஊரை போர்த்த தொடங்கிய நேரம் புஜ்ஜிமா என்று அழைக்க படும் சந்தியா தன் போர்வையை இறுக்கி போர்த்தி கொண்டாள்.. தயாரானாள்.

" அப்பா சீக்கிரம் வா ..பா ஐ ஏம் வெயிட்டிங் கம் பாஸ்ட் "

"ஜஸ்ட் 5 மினிட்ஸ் புஜ்ஜிமா "என்றது சமையல் அறை கதவு

"நோ 3 மினிட்ஸ் ஒன்லி" என்றாள் சந்தியா...

" ஓகே டன் " என்றது மீண்டும் சமையல் அறை.

சந்தியாவுக்கு பள்ளியில் நண்பர்கள் குறைவு ஆனால் வீட்டில் மனோஜ் முதலில் அவளுக்கு மிக சிறந்த நண்பன் பிறகு தான் அப்பா .
3 வருடம் ஆகி விட்டது அம்மா இறந்து ஆனால் அந்த வேதனை வந்து விடாமல் சந்தியாவை வளர்த்து வருவது மனோஜின் மிக பெரிய சாதனை..

சரியாக 7 நிமிடம் கழித்து கதவை திறந்து வந்தவன் "அப்பா ரெடி " என்று போர்வைக்குள் புகுந்தான்..

" நீ எத்தனை நிமிஷம் லேட்டோ அத்தனை கதை சொல்லணும் "
என்றாள்
முகத்தில் பொய் கோவம் காட்ட முயற்சித்து தோற்றாள்..

" புஜ்ஜிமா இது என்ன ஸ்கூலா லேட்டா வந்தா பனிஸ் பண்ண. அப்பா இன்ணைக்கு உனக்கு அருமையான கதை சொல்லுவேணா சரியா...? இணைக்கு புஜ்ஜிமாக்கு என்ன கதை வேணும் "?

சந்தியா வை பொறுத்த வரை இரவில் இந்த கதை நேரம் முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று ஆரம்பத்தில் தனக்கு தெரிந்த கதைகளை சொல்லி கொண்டு இருந்தவன் அதன் பின் தானே இட்டு கட்டி எதையாவது சொல்ல தொடங்கினான் ஏதோ ஒன்னு ஆக மொத்தம் அவளுக்கு தேவை தினம் கதை.

" இன்னைக்கு பேய் கதை சொல்லுப்பா " என்றாள்

"பேய் கதையா... பயமா இருக்குமே " என்றான் கண்ணை உருட்டி...

" அப்போ பயப்படாத மாதிரி சொல்லு "

"பயப்படாத மாதிரி பேய் கதைக்கு நான் எங்க போவேன் ம்ம் ஒன்னு பண்ணலாம் நான் சொல்லிட்டே வரேன் பயமா இருந்தா சொல்லு நான் நிறுதிடறன் சரியா"

" ஓகே பா"

அவன் கனைத்து விட்டு கதையை தொடங்கினான்

"ஒரு ஊர்ல ஒரு பேய் இருந்திச்சாம் "

"ஏம்பா ஊர்ல தான் பேய் இருக்குமா சிட்டில இருக்காதா"

அவளை முறைத்தவன் " அதுக்கு சிட்டி பிடிக்காது கதையை கேளு "

" அந்த பேய் அங்க சுடுகாட்டுல டெய்லி நைட்டு அதோடைய கல்லறை மேல வந்து உட்கார்ந்துக்குமாம்"

"அப்பா அதுக்கு பயமா இருக்காதா பா"

" நீ பேய் கு பயப்படற ....அது யாருக்கு பயப்படும்... அதனால நைட் ல உட்கார்துக்கும் நோ பிராப்லம்"

" அப்பா பேய் சாப்பிடுமாப்பா"

"அதை பேய் கிட்ட தான் கேக்கணும் நீ பேய் கதை கேக்க போறியா இல்லையா?"

" அப்பா பேய்ங்க எல்லாம் கூட பேய் கதைகள் கேக்குமா பா"

" இல்ல நாய் கதை மட்டும் தான் கேட்கும்
புஜ்ஜிமா உனக்கு கதை வேணுமா வேணாமா வேணும்னா இனி கேள்வி ஏதும் கேட்க கூடாது"

"ஏன் பா கேட்க கூடாது"

"புஜ்ஜி....."

"சரிப்பா இனி கேட்கலை " என்று வாயில் விரல் வைத்து கொண்டாள்
அவன் தனது சொந்த தயாரிப்பு கதை யை தொடங்கினான்..

" அந்த பேய் டெய்லி தனது சமாதியில் மேலே உட்கார்ந்து போற வரவங்களை எல்லாம் வேடிக்கை பார்க்குமாம் .
அதுக்கு ஊருக்குள்ள வரணும்னு ஆசையாம்.
ஒரு நாள் .....ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா போகும் போது அது கூடவே அதுக்கு தெரியாம அவ வீட்டுக்கு வந்துடிச்சாம். அவ வீட்ல ஓடிட்டு இருந்த டிவி யை பார்க்க தொடங்கிடிச்சாம்... அப்புறம் டிவி ல மெகா சீரியல் ஓடறதை பார்த்து அங்கேயே யாருக்கும் தெரியாம நின்னு பாத்துச்சாம்  . அப்புறம் நைட் திரும்ப கல்லறைக்கே வந்து தூங்கிடிச்சாம்.

அடுத்த நாள் அதுக்கு அந்த நாடகத்துல மீதி கதை என்னனு தெரிஞ்சிக்க ஆசை வந்துச்சாம் . அது திரும்ப அந்த வீட்டுக்கு போய் கதையை பாத்துட்டு வந்துச்சாம்.. அவ்வளவு தான்.
அதுக்கப்புறம் டெய்லி அந்த நாடகத்தை பார்க்க அவங்க வீட்டுக்கு போய்டுமாம் .
ஒரு நாள் அந்த சீரியல் கதை முடிஞ்சிடிச்சாம். அதனால பார்க்க முடிலேயேனு கோவதுல அந்த சின்ன பொண்ண பிடிச்சிகிச்சாம்..

"அப்பா"

" பேய் டிவி பாக்குமா னு கேக்க போறியா " என்றான் சிரிப்புடன்

"இல்ல பாத்ரூம் போகணும்"

ஹ்ம்ம் சரி வா... "இன்னும் கதைல பயமுறுத்தலா எதுமே சொல்லல அதுக்கே பாத்ரூம் வந்துடிச்சா.."

என்று பாத்ரூம் அழைத்து சென்றான்.
வெளியே இருள் நன்கு இறங்க தொடங்கி விட்டு இருந்தது..
குளிர் தனது கரங்களை பரப்ப தொடங்கி இருந்தது.

" அப்பா " என்றது பாத்ரூமுக்குள் குரல்

"புஜ்ஜி" என்றான் மனோஜ்

மீண்டும் "அப்பா"

மீண்டும் "புஜ்ஜி"

மீண்டும் "அப்பா"........

இது அவள் பாத்ரூம் போகும் போது பயப்படாமல் இருக்க வழக்கமாக செய்யும் செயல் தான்.

சிறிது நேரம் கழித்து "அப்பா" என்றாள் அருகில்  வந்து.

"ஹே வந்துடியா போலாமா கதை தொடரலாமா"

"போலாம்பா"

படுக்கை யில் விழுந்தவர்கள் மீண்டும் கதை குள் மூழ்கினார்கள்.

"அந்த பொண்ணுக்கு பேய் பிடித்து விட்டு 'டேய் எனக்கு அந்த சீரியல் போடு' னு சொல்லிச்சாம் அது முடிஞ்சி போச்சி னு சொன்னா கேக்காம திரும்ப திரும்ப அடம் பிடிசிச்சாம் .
அதுக்கப்புறம்...
அவங்க மந்திரவாதியை கூட்டி வந்து............."

"டொக் டொக் " யாரோ கதவை தட்டின சப்தம் கேட்டு மனோஜ் கதையை நிறுத்தினான்.
"யாரோ கதவு தட்டர சத்தம் கேட்டுச்சா புஜ்ஜிமா"

"எனக்கு ஏதும் கேக்களியே"

"அப்படியா ...எனக்கு கேட்டுச்சே"

"அப்பா பயமுறுத்தாத பா கதையை சொல்லு"

"சரி சரி கேளு அந்த மந்திர வாதி மந்திரம் போட்டு பூஜை பன்னானாம் .
ஆனா அப்பவும் அது போகளையாம்..
அப்புறம் அந்த மந்திரவாதி... தன்னை விட பெரிய மந்திர வாதி இடம் போய் ஐடியா கேட்டானாம்.
அதுக்கு அந்த சீனியர் மந்திர வாதி
'அந்த பேய் குடி இருக்கிற கல்லறை யை போய் உடைங்க அப்ப தான் அது பயந்து அந்த பொண்ணு உடம்பை விட்டு வெளியே வரும்' னு சொன்னானாம்"

அப்போது அவனை இடைமறித்த சந்தியா

"அட போங்கப்பா நீங்களா எதுனா உளராதிங்க உங்க கதை சுத்த பொய்....
பேய் ஆவிங்க எப்பவுமே தான் செத்த இடத்துல தான் சுத்திக்கிட்டு இருக்கும் அது உடலை புதைத்த இடத்துல லாம் இருக்காது.
 அப்படி இல்லனா அது ரொம்ப ஆசை பட்ட பொருள் அல்லது இடம் அல்லது ஆள் பக்கத்துல தான் இருக்கும்" என்றாள். குரலில் கொஞ்சம் தீவிர தன்மை இருந்தது.

அவன் அதிர்ந்து போய்...
"வந்து....இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் " என்றான் அதிர்ச்சியோடு..

அப்போது மீண்டும் கதவு தட்டும் சப்தம் மிக வேகமாக கேட்டது..
அது பாத்ரூமில் இருந்து தான் வந்தது..
அவன் பாய்ந்து சென்று பாத்ரூம் கதவை திறக்க உள்ளே அழுத வண்ணம் நின்றிருந்தாள் சந்தியா...

"டாடி நீ என்ன பண்ற.... என்ன உள்ள வச்சி பூட்டிட்டு இவ்ளோ நேரம் திறக்காம இருக்க உன் பேச்சு கா..... "

அவன் அதிர்ச்சியாக ஓடி பெட் ரூம் விளக்கை போடுவதற்கும்....
படுக்கையில் இருந்து ஒரு கருப்பு உருவம் புகையாக கிளம்பி ஜன்னல் வழியே களைந்து மறைவதற்கும் சரியாக இருந்தது..
சந்தியா குட்டி கேட்ட கேள்வி மட்டும் காதில் மீண்டும் ஒரு முறை ஒலித்தது...

"அப்பா பேய்ங்கெல்லாம் கூட பேய் கதைகள் கேட்குமா பா"


பேய் கதைகள் தொடரும்................




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~





"சின்ன சின்ன பேய் கதைகள்"

(கதை 2 :"பேய் பிடித்த காதலி")

ரா.பிரபு

கேரளாவின் ஒரு வானாந்திர பகுதி அது. அந்த இருவர் நீண்ட தூரம் காட்டுக்குள் நடந்ததில் ஏகத்திற்கு களைத்து இருந்தார்கள்.
இப்படி காட்டுக்குள் நடப்பது அவர்களுக்கு பழக்கம் இல்லை.
அதுவும் இப்படி பட்ட இருட்டு அவர்களுக்கு சுத்தமாக பரிச்சயம் இல்லை.
அவர்கள் ..சரவணன் மற்றும் திலிப் .

"ஹப்படா ஒரு வழியா வந்துட்டோம்" என்றான் திலிப் கொஞ்சம் மூச்சை விட்டு கொண்டான்

"அதோ நான் சொன்ன இடம்"

என்று திலிப் சுட்டி காட்டிய இடத்தில் ஒரு குடிசை இருந்தது உள்ளே ஒரு சின்ன விளக்கு ஏற்ற பட்டு இருந்தது.
'இந்த காட்டு நடுவில் ஒரு குடிசையா '
சரவணனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
கொஞ்சம் வியப்போடு நடந்து அந்த வீட்டை அடைந்தார்கள்.
உள்ளே ...
அந்த நம்பூதிரி உட்கார்ந்து ஏதோ பூஜையில் இருந்தார்..அவர் பார்க்க பயமுறுத்தும் விதமாக இருந்தார்.

"வந்தாச்சா....உட்காருங்க...."ஒலித்த குரலில் வெண்கல மணியின் கணீர் இருந்தது.

"இது தான் நீ சொன்ன பையனா"என்றார் திலிப்பை பார்த்து.

"ஆமாமங்க"

அதன் பின் நம்பூதிரி ஏதும் பேச வில்லை பக்கத்தில் இருந்த ஒரு சிண்ண பேழையை எடுத்தார் .அது ஏகப்பட்ட பொட்டுகள் வைக்க பட்டிருந்த சின்ன டப்பா... அதை திறந்து அந்த தாயத்தை எடுத்தார் .
அதை கையில் ஏந்தி கண்ணை மூடி மந்திரம் சொல்ல தொடங்கினார்.

சரவணனுக்கு இதை எல்லாம் நம்புவதா வேண்டாமா என்று இன்னும் குழப்பமாக தான் இருந்தது ..ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை.
ப்ரியாவுக்காக எதையும் செய்ய துணிந்திருந்தான்.

பிரியா???
அவனை கொள்ளை கொண்ட கொள்ளை காரி. தனது துறுதுறு குணத்தால் இவனை வளைத்து போட்ட அழகி. அவளிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு சரவணன் அடிமை.
காலேஜில் தனக்கு ஜூனியர். கடந்த 7 மாதமாக நிறைய கதை பேசி நிறைய ஊர் சுற்றி நிறைய கிளாஸ் களை கட் அடித்து ...நிறைய பழகி..
நன்றாக தான் போய் கொண்டு இருந்தது.
ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு வரை ....

அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ப்ரியாவிடம் மாறுதலை பார்த்தான்.
அவள் துறு துறு குணம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலக தொடங்கியது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தாள்.
ஆரம்பத்தில் ஏதோ பர்சனல் பிரிச்சனை போல என்று விட்டு விட்டான்..
ஆனால்.
அவளிடம் முரட்டு தனம் குடி கொள்ள தொடங்கியது.
பேச்சு மாறியது செயல்கள் மாறியது குறிப்பாக ரெஸ்டாரண்ட் அழைத்து சென்றால் 3 ஆள் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிட்டாள். சாதாரணமாக அவள் அதிகம் சாப்பிடாதவள் என்பது அவனுக்கு தெரியும்.
உடலில் ஏதாவது பிரச்சனையா என்று யோசித்தான்.
அன்று நடந்ததில் தான் அதிகம் அதிர்ந்து போனான் ...

டிராபிக் இல் பைக்கில் இருக்கும் போது பின்னால் வந்து இடித்தவனை இறங்கி சென்று கன்ணத்தில் பளார் என அரை விட்டதை பார்த்தவன் அதிர்சியில் உறைந்து போனான்.
யாரிடமும் அதிர்ந்து பேசாத பிரியாவா இது?

அப்போது தான் திடீரென ப்ரியாவை காண வில்லை.. திடீர் லீவ்.
அவளுக்கு ஊர் திருநெல்வேலி பக்கம் ஒரு கிராமம். காதல் விவகாரம் இரண்டு வீட்டுக்கும் தெரியும் என்பதால் இவனை அவர்கள் வீட்டில் நன்கு தெரியும்.
அவள் வீட்டுக்கு போன் செய்த போது தான் அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்கள்.

"ப்ரியாவுக்கு பேய் பிடிச்சிருக்குப்பா அவளை வீட்டில் தனி அறையில் கட்டி வச்சி டெய்லி பேய் ஒட்டிட்டு இருக்காங்க"

அதிர்ச்சியோடு நண்பன் திலிப்பை அழைத்து கொண்டு உடனே நெல்லை கு ட்ரெயின் ஏறினான்.
அவள் ஊருக்கு ஏற்கனவே வந்து இருக்கிறான்.
நண்பன் திலிப்பும் இவனும் அவர்கள் வீட்டை நெருங்கும் போது தூரத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் போதே அந்த அலறல் சப்தம் கேட்டது..
அது ஏதோ கொண்டு வந்தியா என்று கேட்பதை போல் இருந்தது வார்த்தை சரியாக புரியவில்லை.
அதிர்ச்சியோடு வீட்டை நெருங்கினான்.

கொஞ்ச பழைய டைப் அந்த காலத்து பெரிய வீடு அது அதில் கொஞ்சம் தள்ளி இருந்த தனி அறையை கையை காட்டினார்கள்.
கடந்த முறை இங்கே வந்த போது அது பழைய சாமான்கள் போட்டு வைக்கும்
ஸ்டோர் ரூம் என்பது நினைவு வந்தது.

இருவரும் அந்த கதவை தள்ளி உள்ளே எட்டி பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள் .
உள்ளே அவளை சங்கிலியில் கட்டி வைத்திருந்தார்கள். தலை முடி களைந்து உடல் இளைத்து.. இது ப்ரியா தானா என்று அவனாலேயே நம்ப முடியவில்லை.
உடல் முழுதும் ஒரு மாதிரி நீல நிறம் பாய்ந்து ..நரம்பு ஆங்காங்கே தூக்கி புடைத்து தெரிந்தது. கண்களில் இரண்டு சொட்டு ரத்தத்தை விட்டதை போல சிவந்திருந்தது.
இவனை பார்த்ததும் மீண்டும் அதே பயங்கர சப்தத்துடன் அலறினாள்..
இம்முறை வார்த்தை தெளிவாக புரிந்து

"ரத்தம் கொண்டு வந்தியாடா..ஆ....ஆ...ஆ.... ரத்தம்....."

அதிர்ச்சியோடு கதவை சாத்தி விட்டு பின் வாங்கினான்.

" இப்படியே தான் தம்பி ரத்தம் கேட்டுட்டே இருக்கா ..சாப்பாடு எதுவும் சாப்பிட்றது இல்ல...டெய்லி ஆட்டு ரத்தம் கொடுக்கிறோம். தொடர்ந்து குடிச்சிகிட்டே இருக்கா... வயிறு பத்தி எரி்து பா அவளை இப்படி பார்க்க முடில.
என்றாள் அவள் அம்மா.

அதன் பின் தான் திலீப் அந்த யோசனை யை சொன்னான்.
அவனுக்கு சொந்த ஊர் கேரளா.
"டேய் இதை எல்லாம் ஈஸியா சரி பண்ணிடலாம் டா எங்க ஊர்ல எனக்கு ஒரு நம்பூதரியை தெரியும் அங்க போனா எதுனா விடை கிடைக்கும்"

"இந்தா இதை பிடி"
நம்பூதரியின் வெங்கள குரல் கேட்டு நிகழ் காலத்திற்கு வந்தான் சரவணன்.

அந்த தாயத்தை கை நீட்டி வாங்கி கொண்டான்.. தாயத்து ஏதோ சூடா இருப்பதை போல உணர்ந்தான்.

" கவனமா கேளுங்க..
இந்த தாயத்து குள்ள பல சக்திகள் அடங்கி இருக்கு இது இருக்கிற இடத்துல எந்த துர் ஆன்மாவும் இருக்காது.
ஆனா.."

சொல்லி நிறுத்திய நம்பூதரியை உற்று பார்த்தார்கள் சரவணனும் திலிப்பும்.

" இப்ப நான் சொல்ல போறது தான் ரொம்ப முக்கியம்... இந்த தாயத்து துஷ்ட ஆன்மாவுக்கு எதிரான ஒன்னு இதை அவ கையில் கட்டும் பொது ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும் அவ தூங்கும் போது தான் கட்டணும்.. மொத்தம் நாலு முடிச்சி போடணும் ..போட்டு முடிக்கும் வரை எக்காரணத்தை கொண்டும் அந்தப்பெண்ணோடய கண்களை பார்த்து விட கூடாது.... முடிச்சுகளை பாதியோடு நிறுத்தி விட கூடாது...
கடைசி முடிச்சி போடும் வரை அந்த கெட்ட ஆன்மா ரொம்ப சக்தி வாய்ந்த நிலைல தான் இருக்கும்
இதுல ஏதாவது தப்பாச்சுனா .... அவ உயிருக்கோ அல்லது உங்க உயிருக்கோ கூட ஆபத்து வரலாம்...எச்சரிக்கை.."

அவர்கள் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.


         ~~~    *****     ~~~    ******

திருநெல்வேலி அருகில் அந்த கிராமத்தில்.

"டேய் பாத்துடா ஜாக்கிரதையா பண்ணு"

திலிப் எச்சரித்து அனுப்பினான்.

"ப்ரியாக்காக உயிரையும் கொடுக்க தயார்  ".
சரவணன் அந்த தாயத்தோடு அந்த தனி அறையை நெருங்கினான்.
கதவுக்கே தெரியாத படி மெல்ல கதவை திறந்தான்.. ...
உள்ளே......
அறையின் ஓரத்தில் அவள் படுத்திருந்தாள்.. மெதுவாக அவளை நெருங்கினான் மேலே பரணில் ஒரு சாம்பல் நிற பூனை ஒன்று மியாவ் என்றது.
அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கைகளை மெல்ல தூக்கி அந்த தாயத்தை கட்டதொடங்கினான். முதல் முடிச்சு போட்டான்..அவள் சுவாசம் மெதுவாக ஏறி இறங்கி கொண்டு இருந்தது.
இரண்டாவது முடிச்சை போட்டான்.
இதயம் திக் திக் என்று இருந்தது.
மூன்றாவது முடிச்சி போட்டான் இவன் சுவாசம் நின்று விடும் போல இருந்தது.
நாலாவது முடிச்சை போட போன அந்த சமயத்தில் தான்....
அந்த சாம்பல் நிற பூனை பரணில் பழைய சாமானை உருட்டி விட்டு அது தரையில் விழுந்து சலங் புலங் என்று ஏகத்துக்கு சப்தம் போட....
தி்டுக்கென விழித்த பிரியா தனது ரத்த கண்களால் அவனை முறைத்து பார்த்தாள்.... நேருக்கு நேராக...

   ~~~      ***    ~~~   ****    ~~~~

கதவு திறக்கும் சப்தம் கேட்டு அவர்கள் அந்த அறையை நெருங்கினார்கள்
மணி சரியாக இரவு 12.
அந்த கதவை திறந்து கொண்டு அந்த உருவம் வெளியே வந்தது ..தலை விரி கோலமாக ...பிரியா...
மெல்ல அச்சத்துடன் நெருங்கி அவள் தோலை தொட்ட போது.........

"அம்மா....." என்றாள் சாந்தமாக ..உடல் நிறம் சாமான்ய நிலை க்கு திரும்பி இருக்க கண்களில் சாந்தம் தெரிந்தது...

"அம்மா பசிக்குது மா....சாப்பாடு இருந்தா கொடு...." என்றாள்...
அவள் அம்மா அவளை மகிழ்ச்சியோடு அரவணைத்து கொள்ள....

திலீப் பாய்ந்து சென்று அந்த அறையை நெருங்கினான்.
கதவை திறந்து உள்ளே சென்றான்..
உள்ளே தரையில் சரவணன் முட்டி போட்டு அமர்ந்திருந்தான்..
நெருங்கி சென்று அவன் தோளில் தொட.... திடுக்கென நிமிர்ந்து பார்த்த அவனை கண்டு திடுக்கிட்டான்....
உடல் பூரா ஒரு மாதிரி நீலம் பாய்ந்து இருக்க ஆங்காங்கே நரம்புகள் புடைத்திருக்க ...கண்கள் ரத்த சிகப்பில்
சிவந்திருக்க ...பயங்கர சப்தத்துடன் அலறினான்..

"ரத்தம் கொண்டுவாடா ஆஆஆஆஆ ரத்தம்......"





~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






"சின்ன சின்ன பேய் கதைகள்"

கதை 3:( "இனி உன்னை விடமாட்டேன்")

(ரா.பிரபு)

ஸ்டெல்லா தனது அலமாரியில் இருந்து எடுத்து அந்த பிரத்தியேக கருப்பு உடையை அணிந்து கொண்டாள். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் மட்டும் அணியும் விசேஷ உடை அது. மீண்டும் ஒரு சாகசத்திற்கு தயாரானாள்.
முகத்தில் கொஞ்சம் கவலை பிரதிபலித்தது 'செபாஸ்டியன் அங்கிளுக்கா இந்த நிலை....' அவளால் நம்ப முடியவில்லை.

ஸ்டெல்லா ஒரு எக்ஸார்சிஸ்ட்... அதாவது பேய் ஓட்டுபவள். தனது அனுபவத்தில் எத்தனையோ சாத்தான்களை விரட்டி இருக்கிறாள்.
அதில் பலது சக்தி வாய்ந்த துர்ஆத்மா ..
சிலதை விரட்டும் போது மிக கவனம் தேவை சில நேரம் சாத்தான் தன்னை ஓட்ட வந்தவனை காலி பண்ணின சம்பவங்கள் உண்டு.
இருந்தும் ஸ்டெல்லா துணிந்து தான் இந்த வேலையை செய்து வருகிறாள்.
அவளை பொறுத்தவரை இது அவள் அப்பாவிற்கு செய்யும் சமர்ப்பணம்.

அப்பா ஜெபராஜ் ஒரு அந்த கால பிரபல எக்ஸார்சிஸ்ட். வெளி மாநிலங்களில் இருந்து கூட அவருக்கு அழைப்புகள் வந்த படி இருந்தது.
அதனால தான் அவர் இறப்புக்கு பின் அந்த தொழிலை இவள் கை கொண்டாள்.

சின்ன வயதிலேயே அப்பாவின் இறப்பு இவளை மிக பாதித்த ஒன்று. அது ஒரு அநியாயமான ரோடு ஆக்சிடெண்ட். கிரிஸ்மஷ்க்கு இரண்டு நாள் முன்பு டிசம்பர் 23 காரில் அப்பாவுடன் சென்று கொண்டு இருந்த ஒரு நாள் காலை.. ரோடு ஓரத்தில் ஆப்பிள் விற்கப்படுவதை பார்த்து கை காட்டினாள் ஸ்டெல்லா .
சிறுவயதில் ஆப்பிள் அவளுக்கு மிக பிடித்தம்.
காரை நிறுத்தி விட்டு காசை கொடுத்து சென்று வாங்கி வர சொன்னார்.
ஆப்பிள் வாங்கி கொண்டு திரும்பிய போது தான் அந்த லாரி அந்த காரை அடித்து அரைத்து கொண்டு சென்றதை பார்த்தாள்.

அன்றைய காட்சிகள் அவள் மனதில் அப்படியே பிரேம் போட்டார் போல பதிந்திருந்தது..
மக்கள் கூட்டம் ஓடி வந்தது.... கார் நசுங்கி கிடந்தது...ரோட்டில் ஆப்பிள் உருண்டோடியது.... அப்பாவின் ரத்தகளரி உடல்..... எல்லாமே அவளுக்குள் அப்படியே பதிந்திருந்தது.
ஸ்டெல்லா என்ற பெயரை கொஞ்சம் மாற்றி அப்பா செல்லமாக கூப்பிடும் பெயர் ஒன்று அவள் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது...
அந்த காலை 10 .25 மணி க்கு அவள் வாழ்க்கையே மாறி போனது.

ஒரு விஷயம் ஸ்டெல்லவை உறுத்தி கொண்டே இருந்தது அதாவது ஏதோ ஒரு சக்தி தன்னிடம் இருந்து தனக்கு நெருக்கமானவர்களை எல்லாம் பிரிக்க பார்க்கிறது.
அப்பாவின் மரணத்திற்கு சில வருடங்கள் கழித்து அம்மா நோய் வாய் பட்டு இறந்து போனாள்.
அந்த நேரத்தில் தனக்கு மட்டும் ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது என்று நொந்து போனாள் ஸ்டெல்லா.

அந்த நேரத்தில் அப்பா விட்டு சென்ற பிசினஸ்.. மற்றும் அனாதையாக விட்டு சென்ற தன்னை எடுத்து வளர்த்து பராமரித்து ஆளாக்கினவர்கள் தான் செபாஸ்டியன் அங்கிள் மற்றும் இமாகுலேட் ஆண்ட்டி. தனக்கு அடுத்த தாய் தந்தை இவர்கள் என்று நம்பி இருந்த போது தான் இமாகுலேட் ஆண்ட்டி யின் போன் கால் வந்தது.
"அங்கிளுக்கு பேய் பிடிச்சி இருக்குமா ரொம்ப கொடூரமான ஆத்மா உள்ள புகுந்து இருக்குனு பாத்தவங்க எல்லாம் சொல்றாங்கமா....நீ வந்தா தான் முடியும் சீக்கிரம் வாம்மா"

தன்னிடம் இருந்து எல்லா வற்றையும் பிரிக்கும் அந்த சக்தியின் அடுத்த காலடி இது.. ஸ்டெல்லா ஒரு முடிவுக்கு வந்தாள். பைபிள் ..புனித நீர் ... புனித சின்னங்கள் ..எல்லாவற்றையும் எடுத்து பேக்கில் வைத்தாள்.
"தனக்கு தீங்கு விளைவிக்க பார்க்கும் சக்தியே நீ யாராய் இரு ஏதுவாய் இரு...ஆனால்...இனி உன்னை விட மாட்டேன்"

                    *     *      *       *

கார் அந்த பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்த போது இமாகுலேட் ஆண்டியும் சிம்சனும் வாசலில் வந்து வரவேற்றார்கள். சிம்சன் அவர்களது ஒரே பய்யன். ஸ்டெல்லா மேல் பாசமும் மரியாதையும் கொண்டவன்.

"அக்கா ரொம்ப பயமா இருக்கு கா"
என்றான் ஓடி வந்து.

"அவர் உடம்புல சின்ன கீறல் கூட விழ விட மாட்டேன் கவலை படாத" என்றாள் ஸ்டெல்லா.

இமாகுலேட் அழுது அடங்கி இருந்தது தெரிந்தது. இவளை பார்த்ததும் முகத்தில் ஒரு ஆறுதல் தெரிந்தது.

"நாம நேரத்தை வீணாக்காம உடனே செயல் படனும் அந்த பேக்கை எடுத்துவா" என்று சிம்சனுக்கு சொல்லி விட்டு விறு விறு என வீட்டுக்குள் நுழைந்தாள்.

மாடியில் உள்ள அறையில் செபாஸ்டியன் பூட்டி வைக்க பட்டிருந்தார். அவரை பார்த்த மாத்திரத்தில் ஸ்டெல்லவுக்கு புரிந்து போனது.. இமாகுலேட் இடம் திரும்பி சொன்னாள்.

"மிக தீவிரமான ஆவி இவர் உடலுக்குள்
புகுந்து இருக்கு உடனே ஓட்டலைனா இவர் உயிருக்கே ஆபத்து.."

"என்னமா இப்படி சொல்ற" இமாகுலேட் மீண்டும் ஆழ தொடங்கினாள்.

"கவலை படாதீங்க ஆண்ட்டி நான் இருக்கன் இல்ல...ஊர்ல எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கன் அங்கிளை விட்டுடுவேணா.... சிம்சன்... அவர் கையாலேயே அவர் உடலை அவர் காய படுத்தி கொள்வார் அதனால உடனடியாக அவர் கையை கட்டி போடு சீக்கிரம்  வேலையை ஆரம்பிக்கலாம் "

"அக்கா காலைல பீங்கான் தட்டை எடுத்து தலையிலேயே அடித்து கொண்டார். அதனால் முன்பே கட்டி போட்டு விட்டேன்" என்றான் சிம்சன்

"குட் ..ரொம்ப கூர்மையான பொருள் இரும்பு பொருள் இப்படி எதுவும் அவர் பக்கத்துல வைக்க கூடாது" என்ற போது அந்த சிரிப்பு சப்தம் கேட்டது.. ஸ்டெல்லவுக்கு மிக பரிச்சயமான பேய் பிடித்தவர்களின் அட்டகாச சிரிப்பு..

"இவனை காப்பாற்ற போறியா......ஹா..ஹா..ஹா...."

குரல் உப்பு காகிதத்தில் தேய்த்து போல அப்படி ஒரு கரகரா.... பழங்காலத்து ரேடியோ வில் வருவதை போல இருந்தது.

"இவனை இனி உங்க கர்த்தரால் கூட காப்பாற்ற முடியாது....ஹா ஹா ஹா ஹா"

அதன் திமிர் பேச்சு ஸ்டெல்லாவை உசுப்பேற்றி விட..

"சிம்சன் அந்த பேக்கை திற"
அவள் சில பொருட்களை எடுத்து வெளியே வைத்தாள் அந்த சிறப்பு ஊது வத்தியை ஏற்றினாள்.
படுகைகளை சுற்றி மெழுகை ஏற்றினாள் கையில் பைபிளை எடுத்து ஜபம் செய்ய தொடங்கினாள்.

அந்த பிரத்தியேக ஜெபத்தின் போது செபாஸ்டியன் உடல் முருக்குவதை கவனித்தாள்.

"வேணாம் .....நிறுத்து......தேவை இல்லாம முயற்சி பண்ணாத.... சொன்னா கேளு நிறுத்து....ஆஆஆஆஆஆ"

என அலறியது அது. இமாகுலேட் காண சகிக்காமல் கண்ணை மூடி கொண்டாள்.
ஸ்டெல்லா தொடர்ந்து ஜெபம் செய்தாள் உக்கிரமாக ... பின் சிம்சனிடம் திரும்பி அந்த பாக்ஸை எடு என சைகையிலேயே சொன்னாள்.
அதை திறந்து அதில் இருந்த புனித சின்னத்தை எடுத்தாள்.

செபாஸ்டியன் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தது ..

"சொன்னா கேளு இவனை காப்பாற்ற முயற்சி செய்யாத... என் கூட பேசு என் கிட்ட வா....."

"ஆவி நம்மள ஏதோதோ பேசி டைவர்ட் பண்ண பார்க்கும் நாம இதை பாதில எந்த காரணத்தை கொண்டும் நிறுதிட கூடாது புரிதா"

என்று சொல்லிவிட்டு அந்த புனித சின்னங்களை எடுத்து அவர் நெற்றியில் வைத்து அழுத்தினாள்..
ஓ ஓ ஓ....என்ற ஒலமிட்ட படி கண்ணை மூடியது அது..
அப்போது திடீரென புனித சின்னம் நெருப்பில் காட்டிய மெழுகை போல உருகி ஊற்றியது .
ஸ்டெல்லா அதிர்ந்து போய் அடுத்ததாக அந்த சிலுவையை எடுத்து அவர் நெஞ்சில் வைத்து அழுத்த அதன் அலறல் கூரையை பிய்க்கும் வண்ணம் இருந்தது.
இமாகுலேட் ஆண்ட்டி முட்டி போட்டு ஜெபித்து கொண்டு இருந்தாள்.

"கர்த்தரே என்னை கைவிடாதேயும் "
என்றாள் உருக்கமாக.

இரண்டு நிமிடத்திற்கு பின் ஸ்டெல்லா வைத்த சிலுவை பக் கென்று  தீ பிடித்து எரிந்து கையை சுட்டது.
ஆவியின் ஆக்ரோஷம் அவளை அச்சுறுத்தியது.
மேலும் சப்தமாக வாசகங்களை படிக்க தொடங்கினாள்
சிம்சனை இடம் பேக்கை திறந்து புனித நீரை எடுக்க சொன்னாள்.
'இதுக்கு அஞ்சாத ஆத்மா இந்த உலகத்திலேயே இல்லை'

அதை சில துளி கையில் ஊற்றி அவர் மேல் தெளிக்க அந்த தெளிக்க பட்ட இடம் ஆசிட் துளி பட்டதை போல புகையுடன் எரிந்து தீய்தது.
அது துடிப்பு அதிகம் ஆகியது.

"ஆஆஆஆஆஆ......"என கூச்சல் இட்டது
"என் கூட பேச போறியா இல்லையா...
ஆஆஆஆ"

அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் மொத்த புனித நீர் பாட்டிலை அவர் தலையில் ஊற்றி குளிப்பாட்டினாள்..
அவ்வளவு தான்..
ஏதோ மின்சாரம் வைக்க பட்டதை போல அவர் உடல் துடித்தது.
ஆவி இந்த உடலில் இருக்க முடியாமல் சிரம படுவது தெரிந்தது.

திடீரென.....

அந்த அறை நிசப்தமாக இருந்தது.
ஒரு சின்ன பூகம்ப அதிர்ச்சி போல லைட்டாக அந்த வீடு குலுங்கியதை போல் இருந்தது. செபாஸ்டியன் அசைவு அற்று படுத்து கிடந்தார்.
அறை ஓரத்தில் வைக்க பட்டிருந்த டிஜிட்டல் காலண்டர்  23 என்று தப்பான தேதியை காட்டியது.
அவள் கையில் உள்ள கைக்கடிகாரமும் 10.25 என்ற தப்பான நேரத்தை காட்டியது.
சுவரில் உள்ள கடிகாரம் 12 ஐ காட்டியது ஆனால் அதுவும் தவறான நேரம் தான்.
அங்கே இருந்த ரேடியோ தானாக உயிர்பெற்று ஏதோ ஒன்று ஒலித்தது அதை உற்று கவனித்த போது "ச்செல்லா...ச்செல்லா....ச்செல்லா..."
என்று சொல்வது கேட்டது.
பழ கூடையில் இருந்து உருண்டு வந்த ஆப்பிள் ஒன்று அவள் காலை தொட்டது.

அப்போது .....

திடீரென ..இமாகுலேட் வாய் பிளந்து பார்க்க சிம்சன் அதிர்ந்து போய் நிற்க..
அந்த பழ கூடையில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்த ஸ்டெல்லா பாய்ந்து சென்று செபாஸ்டியன் கழுத்தை அறுத்து எறிந்தாள்..
ரத்தம் தெறிக்க உடல் துடிக்க ..இவளை அதிர்ச்சியாக பார்த்த படி துடித்து அடக்கினார் செபாஸ்டியன்..

'அவரை ஒரு கீறல் கூட விழாம பாத்துக்கறேன்' ஸ்டெல்லவின் வார்த்தைகள் இமாகுலேட் க்கு நினையுவில் வந்து சென்றது.

                      *    *      *     *

தனது கை கடிகாரத்தை பார்த்தாள் ஸ்டெல்லா..

"எங்க அப்பா இறந்த 10.25 மணி"
என்றாள்.

டிஜிட்டல் காலண்டரை பார்த்தாள்..

"அப்பா இறந்த 23 ஆம் தேதி"

சுவர் கடிகாரத்தை பார்த்தாள்..

"12.. அப்பா இறந்த மாசம்"

மெதுவாக நடந்து சென்று அந்த ரெடியோவை அணைத்தாள்..

"ஸ்டெல்லா என்ற என் பெயரை அப்பா செல்லமாக ச்செல்லா என்று தான் கூப்பிடுவார்"

கீழே உருண்டு இருந்த ஆப்பிளை எடுத்து கூடையில் வைத்தாள்.

" ஆவிகளின் குறிப்புகளையம் ..அவைகள் சொல்ல வருவதையும் மிக சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியும் ..தனது பிசினஸ் பார்ட்னரை கொன்னது இவன் தான் என்பதை எனக்கு தெளிவாக அந்த ஆத்மா உணர்த்தி விட்டது..
இவர் உடலுக்குள் வந்தது வேறு யாரும் அல்ல..... என் அப்பா" என்றாள்.

மெதுவாக நடந்து சென்று காவல் துறைக்கு போன் செய்ய தொடங்கினாள்.

பேய் கதைகள் தொடரும்...................

.




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






"சின்ன சின்ன பேய் கதைகள்"

கதை4 : ("மோகினி என் காதலி")

(ரா.பிரபு)

அது ஒரு அடர்ந்த காடு. அதன் நடுவில் இருந்தது அந்த பாழடைந்த மண்டபம்.
பகலில் மாடு மேய்க்க வருபவர்கள்..விறகு பொறுக்க வருபவர்கள்..நிழலுக்கு, மழைக்கு, அந்த தூண் மண்டபத்தில் ஒதுங்குவது உண்டு.
ஆனால் இப்படி அர்த்த ராத்திரியில் அந்த காட்டுக்குள் யாரும் வருவது இல்லை. அந்த இருவரை தவிர...

"நிலா" என்றான் ராம்..
மண்டபத்தில் மேடையில் படுத்திருந்தான்.

"ம்" என்றாள் நிலா.. வசீகர குரல் அவளுக்கு. அவன் அருகில் முகம் மட்டும் அருகே இருக்கும் படி உடலை அவனுக்கு எதிர் திசையில் நீட்டி படித்திருந்தாள்.

கொஞ்சம் இடைவேளைக்கு பின் மீண்டும்

"நிலா" என்றான் அவன்

"ம்..ம்...ம்..." எத்தனை முறை கூப்பிடுவீர்கள்.... காதல் மயக்கத்தில் நிலா என்பதை தவிர மற்ற வார்த்தைகள் மறந்து விட்டதா காதலரே?

"அப்படி இல்லை... அனால் உன் பெயரை கூப்பிட்டு கொண்டு இருந்தாலே போதும் போல் இருக்கிறது இவ்வளவு வசீகரமான பெயரை யார் வைத்து உனக்கு"

"வேறு யார் அப்பா தான்"

"ஹ்ம்ம் அதோ அதை பார் அதை விட நீ தான் அழகு " அவன் சுட்டி காட்டிய இடத்தில வானத்தில் நிலா உலா வில் இருந்தது.

"உன் பெயர் ஏன் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது"

"காதல் மயக்கம் அப்படி" சொல்லிவிட்டு க்ளுக் என்று சிரித்தாள்..யாழ் மீட்டிய ஜிலிர் அவர் சிரிப்பில்..

"சரி காதல் ஏன் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது நிலா"

"அதுவா... மழலை ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா"

"அதற்கும் .....இதற்கும்........."

"சம்பந்தம் இருக்கு காதலனே.... மழலையிடம் இருப்பது மகிழ்ச்சி அல்ல அதன் பெயர் ஆனந்தம்...இரண்டுக்கும் வித்யாசம் உண்டு...மகிழ்ச்சிக்கு ஏதாவது காரணி...அல்லது வெளி பொருள் தேவை..ஆனந்தம் தனக்குள்ளாகவே தோன்றும் ஒன்று. அதற்க்கு எந்த வெளி பொருளின் உதவியும் தேவை இல்லை...தானாகவே... ஏதும் இல்லாமலே நிறைவில் வாழ்வது ஆனந்தம்... குழந்தையின் ஆனந்ததிற்கு காரணம் அதற்கு கடந்த காலம் இல்லை.. எதிர் காலமும் இல்லை அது அந்த கணத்திற்கு வாழ்கிறது.
உண்மையான காதலர்கள் பல கணங்களில் எதிர் காலம் கடந்த காலம் மறந்து விடுவதை கவனித்தாயா... அவர்களும் நிகழ் காலத்தில் வாழும் தபஸிகள் ரிஷிகள் போல பல நேரத்தில் இந்த கணத்தில் வாழ்கிறார்கள் தெரியுமா அதான் காதல் இவ்வளவு வசீகரிகிறது"

"அடடே அப்போ பெரிய தியாணிகளும் காதலர்களும் ஒரே நிலையில் இருப்பவர்களா.. பரவா இல்லையே"

"உண்மையான காதலர்கள் என்ற வார்த்தையை பயன் படுத்தி இருப்பதை மறக்காதீர்கள்"

"உனக்கு மனோ விஞ்ஞாணம் எல்லாம் தெரிகிறதே நிலா"

"இது ஒன்னும் மனோ விஞானம் அல்ல இது எதார்த்தம்"

"எதை கேட்டாலும் பதில் தருகிறாய் சரி சொல் நீ ஏன் எனக்கு இவ்வளவு வசீகரமாக தெரிகிறாய்"

"நாங்கள் இயல்பிலேயே மனிதர்களை விட அதிக வசீகரமானவர்கள்"

ராம் அதிர்ந்து தலையை நிமிர்த்தி பார்த்தான்.

"மனிதர்களை விட வா அப்போ நீ யார்"

"அது ...வந்து நீங்கள் தானே என்னை ஒரு முறை தேவதை என்றீர்கள்"

"ஓஹோ...அதை சொல்கிறாயா" என்று சிரித்தான் பிறகு கொஞ்சம் நேரம் இருவரும் பேச வில்லை..இரவு பறவைகள் சப்தம் மட்டும் தான் எதிரொலித்தது.

"நிலா நீயும் நானும் நிலவும் ஒளியை போல....நிலவும் மேகமும் போல எப்போதும் ஒன்றாக இருப்போம் சரியா"
என்றான் ராம்.

"தவறு .....நிலவும் அதன் கறையும் போல என்று வேணா சொல்லுங்கள்"

"என்ன ரசனை பா இது....நிலவின் நேர்மறை பக்கங்கள் ஏதும் உனக்கு தெரியவில்லையா அதன் கறை தான் தெரிந்ததா"

"ஒளி நிலவுக்கு சொந்தம் இல்லை....
மேகத்திற்கும் நிலவிற்கும் சம்பந்தமே இல்லை.... நேர்மறையோ எதிர் மறையோ... நிலவின் கறைகள் அதற்கு சொந்தமானது நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன்"

"நிலா நீ ஒரு பேச்சாளரும் கூட....ஹ்ம்ம்..சரி ஒன்று சொல் ...ஏன் இவ்வளவு மர்மமாய் இருக்கிறாய்... ஏன் உன் குடும்பத்தை பற்றியோ ...உன் இருப்பிடம் பற்றியோ ஏதும் சொல்ல மாட்டேன் என்கிறாய்... ஏன் தினம் இரவில் மட்டும் தான் சந்திக்கிறாய்...
உன்னை இந்த காட்டில் சந்தித்த 6 மாதத்தில் ஒரு நாளும் ஊருக்குள் உன்னை பார்தது இல்லை...
பழகிய புதிதிதிலேயே உன்னிடம் 6 மாதம் நான் கேள்வி ஏதும் கேட்க கூடாது என்று ஏன் சொன்னாய். எனக்கு உன்னை பற்றி விவரங்கள். நாளை சொல்லியாக வேண்டும்....நினைவு படுத்துகிறேன் . இன்றோடு 6 மாதம் முடிந்தது."

நிலா மீண்டும் அந்த சிரிப்பை உதிர்த்தாள்.

"நிலா என்பதே மர்மமானது தான் தெரியுமா.... நிலவின் அடுத்த பக்கம் ...அதன் அடுத்த முகத்தை யாரும் பார்த்தது இல்லை தெரியுமா... அது தன்னை தானே சுற்றும் காலமும் பூமியை சுற்றும் காலமும் ஒன்றாக இருபதால் அப்படி ....நடக்கிறது.."

"நிலா உனக்கு அறிவியலும் தெரியுமா"

"ஆம் மனிதர்களை விட எங்கள் அறிவு திறன் அதிகம்"

"சரி ...சரி...தேவதையே..." மீண்டும் நீண்ட நேரம் மௌனத்திலும் இரவிலும்.. ஏகாந்ததிலும் மூழ்கி கிடந்தார்கள்.. பிறகு

"சரி நான் வருகிறேன் நிலா ....நாளை நினைவு இருக்கட்டும்" என்று எழுந்தான் ராம். அவளை அணைத்து பிரியாவிடை கொடுத்து விட்டு கிளம்பினான்.

                          *    *    *     *

அவன் சென்ற பின் நிலா தனக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த இடது கையை வெளியே எடுத்தாள் அதில் பளபளப்பாக... நன்கு வளர்ந்த ஒரு ராஜ நாகத்தை அழுத்தி பிடித்திருந்தாள்.
அதை தன் முகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்தாள்..

"ஏய்... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் காதலனையே தீண்ட பார்த்து இருப்பாய் ... அதான் உன்னை இவ்வளவு நேரம் அழுத்தி பிடித்தேன்... நான் இருக்கும் வரை அவனுக்கு எந்த தீங்கும் வர விட மாட்டேன் புரிந்ததா...
இனி அவன் இருக்கும் பக்கமே நீ வர கூடாது சரியா...?"

அதை குழந்தையை போல் அதற்றினாள்.. பின் பாசமாக அதை தடவி கொடுத்து புதருக்குள் அனுப்பினாள் " போ போ" என்றாள் குழந்தை போல

அப்போது....

காற்றின் அதிர்வலைகளில் ஏதோ மாறுதல் தெரிந்தது..
மண்டபத்தின் ஒரு மூலையில் காற்றில் சிறு ஒளி பிழம்பு ஒன்று தோன்றி...
சுழன்று ...சுழன்று பெரிதாகியது... நதியில் ஏற்படும் நீர் சூழலை போல அந்த ஒளி சூழல் ..ஒரு கதவை போல தோன்றியது.... அந்த ஒளி குகை ஒரு போர்டல்...வேறு பரிமானத்திற்கான வாயில் கதவு....
அதிலிருந்து 3...4.. ஒளி பொருந்திய உருவம் வெளி பட்டது அந்த வாயில் தானே மூடி கொண்டு ஸ்ஸ்விக்.... என சூனியத்தில் காணாமல் போனது..
அந்த ஒளி பெண்கள் அநியாயத்திற்கு வசீகரமாக இருந்தார்கள். ஆனால் கண்களில் கோபம் இருந்தது.

"என்ன முடிவு பண்ணி இருக்க நிலா"

"முடிவு நான் ஏற்கனவே சொன்னது தான் .அதில் உறுதியாக இருக்கிறேன் இனி முடிவு நீங்கள் தான் சொல்ல வேண்டும்"

அவர்கள் அதிருப்தியோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

"உனக்கு மூளை குழம்பி விட்டதா போயும் போயும் ஒரு அற்ப மானுட பிறவி தான் கிடைத்தானா காதலிக்க ...
நம்மைவிட அறிவில் தொழில் நுட்பத்தில் எத்தனையோ நூற்றாண்டு பின் தங்கி உள்ள ஒரு தாழ்ந்த இனம் தான் உனக்கு பிடித்திருக்கிறதா.... இது நம் இனத்திற்கே செய்யும் துரோகம்...
மனிதர்களை பொறுத்த வரை வேறு பரிமாணத்தில் வாழும் நாம் யார் தெரியுமா... அவர்களுக்கு நாம் பேய்.. பிசாசு...மோகினி...காட்டேரி.."

"இல்லை ...நாம் தேவதைகள்...மனிதர்கள் நம்மை கொண்டாடுகிறார்கள்... அவர்கள் காதல் எனக்கு மிக பிடித்து இருக்கிறது.
நம்மை போல நிறைவாக இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது... மனிதர்களை போல குறை பட்ட மனம் இருந்து அதில் உத்தமானாக வாழ்வது தானே சிறப்பு.
நமக்கு மனதை படிக்கும் திறமை உண்டு என்று உங்களுக்கு தெரியும்... என் காதலன் ராம் மனதை படித்து பார்த்தேன்...அவன் அழகிய பெண்களை கண்டால் கொஞ்சம் மயங்கும் ஆள் தெரியுமா..பார்க்கும் பெண்களிடம் எல்லாம் மயங்குவான். ஆனால் அப்படி பட்டவன் மனதில் நான் வந்த பின் கடந்த 6 மாதமாக அவன் மனதை படிக்கிறேன் அதில் என்னை தவிர வேறு யாரும் இல்லை...அவன் மனம் முழுக்க நிலா நிலா நிலா தான்.."

"அப்போ இதான் உன் முடிவு என்றால் எங்கள் முடிவை கேட்டுக்கொள்...
இன்று முதல் உன்னை எங்கள் இனத்தில் இருந்து நீக்குகிறோம் உனது சக்திகள் அனைத்தும் பறிக்க படுகின்றன. இனி நீ நினைத்தாலும் எங்கள் இனத்தில் இணைய முடியாது... சாதாரண மனித பெண்ணாக கிடந்து மனித பெண்ணாக வாழ்ந்து.... வயதாகி சாவு ...மேலும் நீ மனிதர்களால் ஏமாற்ற பட்டு அற்பமாக தான் சாக போகிறாய்.. நீ ஒரு இன துரோகி"

நிலா மனதில் வேதனையோடு கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க ...அவர்கள் ஒளி வாயிலில் நுழைந்து சூனியத்தில் மறைந்து போனார்கள்..
நிலா மண்டபத்தில் முட்டி போட்டு அழ தொடங்கினாள்.

                   *     *     *     *

அடுத்த நாள் இரவு.....அதே மண்டபம் ..
அதே இருவர்...
"ஏன் சோர்ந்து போய் இருக்கிறாய் நிலா"

"நேற்றிலிருந்து சாப்பிட வில்லை... இந்த இரவுக்காக இங்கேயே காட்டில் காத்திருக்கிறேன்"

"ஏன் நிலா..."என்றான் அதிர்ச்சியாக
"உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்...இன்று சொல்வதாக சொன்னாயே"

" வீட்டை விட்டு வந்து விட்டேன் ஒரே அடியாக ...இனி உங்களுடன் தான்... தயவு செய்து ஏதும் கேக்காதீர்கள்...உங்கள் மடியில் கொஞ்சம் தூங்கி கொள்கிறேன்... காலை என்னை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள்...இனி நான் உங்களில் ஒருவள்...."

அவளை இபோது ஏதும் கேட்க வேணாம் என ராம் முடிவு செய்தான் அவள் அப்படியே தூங்கி போனாள்...

அவள் நன்கு தூங்கிய பின் அதை உறுதி செய்து கொண்ட ராம் மெல்ல அவள் தலையை எடுத்து கீழே வைத்து விட்டு எழுந்தான்.
விறுவிறு வென நடந்து மண்டபத்தின் பின் புறம் காட்டுக்குள் கொஞ்சம் தூரம் நடந்தான்.

அங்கே திடீரென்று........

காற்றில் ஒளி சூழல் தோன்றி சில ஒளி மனிதர்கள் அவன் முன் வெளியே வந்தார்கள்.

"என்ன முடிவு பண்ணி இருக்க ... "

" நான் அந்த மானிட பெண்ணை கை விடுவதாக இல்லை.... நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்... நான் யார் என்பதை அவளிடம் சொன்னால் அவள் என்னை வெறுக்க கூடும்.. நான் கடைசி வரை ஒரு சாமான்ய மனிதனை போல் வாழ போகிறேன்.... அவளுடன்... சந்தோஷமாக....."

அவர்கள் எரித்து விடும் பார்வையால் அவனை குளிப்பாட்டினார்கள்..

" இன துரோகி.... இனி மனிதனை போல அல்ல ....மனிதனாகவே தான் நீ வாழ வேண்டும்... உன் சக்திகள் அனைத்தையும் பறிக்கிறோம்...."
என்றார்கள் சூனியத்தில் மறைந்து போனார்கள்.

அவன் அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று இருந்தான். பிறகு வேதனையை விழுங்கி விட்டு...
பக்கத்தில் மரத்தில் ஏறி நிலா உண்ணுவதற்காக சில பழங்களை சேகரித்தான்.....
அந்த மண்டபத்தை நோக்கி...புது வாழ்க்கையை நோக்கி நடக்க தொடங்கினான்.......

இரண்டு சாதாரண மனிதர்களின் அசாதாரண தேய்வீக காதல் கதை தொடங்கியது............



இணைக்க பட்ட பின்னுரை:

அவர்கள் இருவரும் வேறு பரிமாணத்தை சார்ந்தவர்கள் என்பதை இருவருமே உணராமல் போனது ஏன்?

மனிதன் வாழ்வில் ஆர்வம் கொண்ட இருவரும் தங்கள் சக்திகளை ஒதுக்கி வைத்துவிட்டு மனிதனை போல அவன் ஆசாபாசங்களுடன் அவ்வபோது  வாழ்ந்து பார்த்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் காட்டில் மனித உறுவில் நடமாடும் நிலா வை கண்டான்.
தாங்கள் வேற்று இனத்தவர் என்பது ஒரு போதும் வெளி பட்டுவிட கூடாதே என்று இருவருமே தங்கள் சக்திகளை பயன் படுத்த வில்லை..(நிலா ஒரே ஒரு முறை அவன் மனதை படித்ததை தவிர)

(சின்ன சின்ன பேய் கதைகள் ....
'முற்றும்..')




அன்பு நண்பன்.
 ரா.பிரபு.

கதை பற்றிய பின்னூட்டத்தை வாட்சப் இல் தெரிவிக்க... 9841069466






Comments

  1. 2017 kathaigalaiye naan ippothu thaan (2021) padikkiraen... Enavae, enathu pinnoottam ingayae...Arumaiyaana ezhuthaalaraiyaa neer...

    Kurippaaga koorum kathaigal atthanaiyilum ariviyal irukkirathu/ariviyal othu kathai koorugireer....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"