"மனம் எனும் மாய பிசாசு''




''மனம் எனும் மாய பிசாசு"

(பாகம் -1)

(எழுத்து: ரா.பிரபு)

இந்த மனம் எனும் மாய பிசாசு கட்டுரை தொடரை நீங்கள் படிக்க போகும் முன் நான் வெகு நிச்சயமாக சில முன்னுரைகளை தந்தாக வேண்டும் முதலாவதாக நீங்கள் எனது" சார்பியல் எனும் சமுத்திரம் "போன்ற அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்தவர் எனில் இதில் அதை எதிர்பார்த்து வராதீர்கள்..இது ரத்தமும், குற்றமும், பகீர் உண்மை சம்பவங்களும் நிறைந்த தொடர்.

உங்களுக்கு நன்கு தெரிந்த நீங்கள் அப்பாவி என நம்பும் ஒரு மனிதர் மிக பெரிய குற்றம் செய்தவராக பிடிப்பட்டால் உங்கள் மனநிலை என்ன?
இவர் ஏன் எதற்கு எப்படி இப்படிபட்டவராக மாறினார்? என்ற கேள்விதான் நம்மை குடையும் ..திடீரென பிடிபடும் குற்றவாளிகளின் பக்கத்து அக்கத்து வீட்டார் பல பேர் இப்படி திகைத்து போவதை நாம் பார்க்கிறோம்..

சமூகத்தில் பிள்ளை பூச்சிகளாக திரியும் எத்தனை பேருக்குள் எத்தன விதமான குற்றவாளிகள் ஒளிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏன் எதற்கு எப்படி உருவாகிறார்கள் ?என்ன விதமான மனநிலை இப்படிபட்டவர்களை ஆட்க்கொண்டிருகிறது? இந்து கேள்விகளால் பிறந்தது தான் இந்த கட்டுரை தொடர்.

 எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது ,ஒருவனை நல்லவனாகவும் மிக நல்லவனாகவும் கெட்டவனாகவும் மிக கெட்டவனாகவும் மாற்றும் மந்திர சக்தி மனம் தான் அது சரியாக பயன்படுத்த பட்டால் மாய தேவதை தவறாக பயன்படுத்த பட்டால் அது ஒரு மாய பிசாசு..

இக்கட்டுரை தொடரில் நாம் காண இருக்கும் சில நிஜ கதாபாத்திரங்கள் மாய பிசாசை வளர்த்து அதன் பிடியில் சிக்கி கொண்டவர்கள். மாய பிசாசு எப்படி உருவாகிறது எப்படி செயல் படுகிறது எப்படி தனது கோர பற்களை கொண்டு தன்னை வளர்த்தவரையே முழுங்குகிறது இப்படி பட்ட curiosity தான் இக்கட்டுரையின் ஆணி வேர். நம்மை சுற்றி ஒளிந்துள்ள பல விதமான க்ரைம் வளையம் மற்றும் அது தொடர்பான உண்மை எப்படி பட்டது..?
வாருங்கள் பிசாசை சந்திப்போம்....

"மனம் எனும் மாய பிசாசு"

நீண்ட நாட்களுக்கு முன் மதன் அவர்களின் மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகம் படித்தேன். மனித வரலாற்றில் வெளிப்பட்டுள்ள பல மிருக முகத்தை தோல் உரித்து காட்டி இருப்பார். ஆனால் கலிகுலா, செங்கிஸ்கான்,நீரோ மன்னன், மற்றும் சிக்காடிலோ ,டெட்பாண்டி ,ஜாக் தி ரிப்பர் போன்ற சைக்கோ கொலையாளிகளை பற்றி ஒரு உலக சுற்றுலா சென்று விவரித்திருப்பார் (மாணவர்கள் படிப்பதாய் இருந்தால் அந்த புத்தகம் சிபாரிசுகல்ல மாறாக அவரது 'வந்தார்கள் வென்றார்கள்' மிகவும் சிபாரிசுகாணது ஒவ்வொரு மாணவனும் படிக்க வேண்டியது)
ஆனால் அப்படி பட்ட பிசாசு மனம் உலகில் எங்கியோ ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என நினைப்பது தான் முட்டாள் தனம். இங்கயே நம்ஊரிலேயே உள்ள மனம் எனும் மாய பிசாசு உங்களை திகைக்க செய்யும்..

ஒரு பகீர் க்ரைம் சம்பவத்தை யார் செய்தார்கள் என சொல்லாமல் சஸ்பென்ஸாக விளக்கி விட்டு கடைசியாக இவ்வளவையும் செய்தது வெறும் பள்ளி மாணவர்கள் என சொன்னால் நீங்கள் திகைப்படைவீர்கள் .ஆனால் இப்போது ஒரு சம்பவத்தை முன்கூட்டியே சொல்லிட்டே விவரிக்கிறேன் இவர்கள் பள்ளி மாணவர்கள்....ஆனால் உங்களால் திகைக்காமல் இருக்க முடியாது.

கதை இது தான்.......

பல நாட்களுக்கு முன்னாள் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் வந்தது என்பதால் பெயர் ஊர் நினைவு இல்லை இப்போதைக்கு அவர்கள் பெயர் திலிப், உமா ,மற்றும் சுந்தரி.
திலிப் ஒரு 12 வது படிக்கும் மாணவன் உமா மற்றும் சுந்தரி உடன் படிக்கும் மாணவிகள் .. இதில் உமா திலீபின் காதலி இருவரும் பள்ளி பாடம் படிக்கும் போதே காதல் கொண்ட பிஞ்சில் பழுத்த கேஸ். சுந்தரி உமாவும் உயிர் தோழி .இவர்கள் லீலை அறியாத அப்பாவி . உமா வீட்டில் சுந்தரி இன்னொரு மகள் மாதிரி உமா வீட்டார் களிடம் சொந்த வீடு போன்ற பழக்கம் .உமாவை கூட பிறந்த சகோதரியாக பாவிக்கும் ஒரு பாசமுள்ள தோழி...

இன்பமாக காதலித்து வந்த திலிப் உமா ஒரு கட்டத்தில் சீரியஸ் ஆனார்கள் .
 "நாம இப்படியே இருந்தால் எப்படி எப்போ ஒன்னு சேர்றது எப்போ கல்யாணம் பண்றது எப்போ ஒண்ணா வாழ்றது.?"

அதிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு அவர்கள் பேச்சு இதையே சுற்றி சுற்றி வந்தது ... ஓடிப்போவதில் அவர்களுக்கு விருப்பம் இருந்தது ஆனால் கூடவே பயமும் ..ஓடி போனால் நம்மால் தப்பிக்க முடியாது கண்டிப்பாக நம்மை தேடி பிடித்து விடுவார்கள் இதை இருவரும் உணர்ந்திருந்தார்கள்.
அவ்வபோது வாழ்கை ....ஒண்ணாவாழ்றது ...கல்யாணம் ...ஓடிப்போறது போன்ற வார்த்தைகள் அவர்கள் பேச்சில் அடிபட்டது.

"ஏண்டி கொஞ்ச நாளா ஒரு மாதிரியா இருக்க " கேட்ட தன் தோழி சுந்தரியை பார்த்து சிரித்தாள் உமா ச்சீ ச்சீ அதெல்லாம் ஒன்னும் இல்லை என்றாள்.

அன்று ஒரு நாள்.... தன்னை உமா பார்த்த பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் சுந்தரி
 "என்னடி என்ன ஒரு மாதிரியா உத்து பாத்துட்டு இருக்க" என்றாள் திகைத்து போய்.. "இல்லை ஒன்னும் இல்லைடி". உமா கண்ணில் தெரிந்த அந்த உணர்ச்சி என்னவித மானது என்று சுந்தரிக்கு புரியவில்லை ஆனால் இதுவரை அவளுக்கு பரிச்சயம் இல்லாத ஒன்று.

சில தினங்களுக்கு பின் ஒருநாள். உமா வீட்டில் .. வெளிஊருக்கு சென்று திரும்பி இருந்த உமாவின் பெற்றோருக்கு ஒரு மரண அதிர்ச்சி காத்திருந்தது..உமா படுக்கையில் கிடந்தாள்... பிணமாக ...தற்கொலை செய்து கொண்டு எரிந்து போய்.....
காவல் துறைக்கு தெரிவிக்க பட்டு வந்து விசாரித்தார்கள் உமா கைபட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியது காவல் துறை அதில் தெள்ள தெளிவரமாக தான் வாழ விரும்பாததை குறிப்பிட்டு இருந்தாள் உமா .தன் குழந்தைக்கு என்ன குறை வைத்தோம் என புரியாமல் குழம்பினார்கள் உமாவின் பெற்றோர்..

அதை தாண்டி அங்கு எல்லாரையும் குழம்பதில் ஆழ்த்திய ஒரு மர்ம சம்பவம் இருந்தது உமா தற்கொலை செய்து கொண்ட அந்த தினத்திலிருந்து இரண்டு நபர்களை காண வில்லை ஒன்று திலிப் இன்னொன்று சுந்தரி..
உமா வீட்டிற்கும் திலிப் வீட்டிற்கும் அவ்வளவு தொடர்பு இல்லை என்பதால் திலீப் காணாமல் போனது உமா வீட்டால் கவனிக்க பட வில்லை. சுந்தரி வீட்டில் அவளை தேடி தேடி குழம்பி போனார்கள்..

மேலே நடந்த சம்பவங்களை வைத்து உண்மையில் என்ன நடந்தது என யூகிக்க உங்களால் முடிகிறதா?
உண்மையையை ஆராய்ந்து போலீசார் வெளிகொண்டு வந்த போது அவர்களே அதிர்ந்து போனார்கள்... உண்மையில் உமா இறந்திருக்கவில்லை..போலீசார் அவளை உயிரோடு பிடித்தார்கள்..சுந்தரி??  உமா வீட்டில் இறந்து கிடந்தது வேறு யாரும் அல்ல ......சுந்தரி.
நடந்தது இது தான்....

சம்பவத்திற்கு முந்தய நாள் காதலர்கள் திலீப் மற்றும் உமா பேசிகொண்டது...

 "டேய் நாம ஓடியும் போகணும் ஆனா எங்க வீட்ல என்ன தேடவும் கூடாதுடா அப்படி எதுனா ஐடியா சொல்றா"

 "அப்படினா நீ செத்து போகணும்.."

 "என்னடா சாக சொல்ற"

 "சாகறதுனா உண்மையா சாக வேணாம் ...சாக போறேன்னு உன்கைப்பட ஒரு லெட்டர் எழுது போதும் உனக்கு பதிலா சாக போறது உன் தோழி சுந்தரி"

அவர்கள் திட்டமிட்ட படி அன்று சுந்தரி குடித்த பானத்தில் தூக்க மாத்திரையை கலந்தார்கள்..மயங்கிய பின் அவளுக்கு உமாவின் ஆடையை அணிவித்தார்கள்..பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள்..பின் இருவரும் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஓடி போனார்கள்.

இந்த சம்பவத்தை விவரிக்கும் போது அவர்கள் சொன்னது அந்த பெட்ரோலை வாங்கி கொண்டு வரும்போது அதை மடியில் வைத்து கொண்டு வண்டியில் அமர்ந்து கொண்டு எடுத்து வந்ததே சுந்தரிதானாம் இது தன்னை எரிக்க போகும் பெட்ரோல் என்றே தெரியாமல்.... இதை கேள்வி படும்போது அவள் பெற்றோர் மனநிலை எப்படி இருந்திருக்கும் சிந்தித்து பாருங்கள்.

பின்னால் உமா உயிரோடு திரும்பியும் அவள் வீட்டில் இந்த பாதகத்தை செய்த அவளை யாரும் ஏற்று கொள்ளவில்லை எங்கள் மகள் செத்தது செத்தாகவே இருக்கட்டும் என்று அவளை விரட்டி விட்டார்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறேன்_
 'இவ்வளவையும் செய்தது வெறும் பள்ளி சிறுவர்கள்.'

பள்ளி வயதில் இவ்வளவு பெரிய பிசாசு மனம் கொண்டவராக அவர்கள் மாறியது எப்படி காதலை தவறாக சொல்லி கொடுக்கும் திரைப்படங்களா அல்லது அவர்கள் செயலுக்கு அவர்களே முழு பொறுப்பா அல்லது இந்த சமூகமா அல்லது அவர்களை பெற்றவர்களா நீங்கள் யாரை குறை கூற விரும்புவீர்கள்?
சரி பிறகு யோசிக்கலாம்...

 இப்போதைக்கு சென்னையை விட்டு விட்டு டெல்லியில் ஒரு பிசாசை சந்தித்துவிட்டு வருவோம் வாருங்கள்.
அது ஒரு ஓங்கி உயர்ந்த அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்.. ஒல்லியாய் ஓடிசலாய் தேகம் கொண்ட அவன் அந்த அப்பார்ட்மென்டின் வாட்ச்மேன் அவ்வப்போது அப்பார்ட்மெண்ட் வாசிகள் சொல்லும் சில்லறை வேலைகளை செய்து விட்டு சில்லறைகளை பெற்று கொள்வான். அவன் யாரிடமும் அதிகம் பேசாதவன். அவனை யாரும் சிரித்தே பார்த்தது இல்லை..
அந்த அப்பார்ட்மென்டில் குறிப்பிட்ட பிளாட்டில் இருந்தவர்கள் துயரத்தில் ஆழ்ந்து இருந்தார்கள் காரணம் அவர்கள் ஆறே வயதான செல்ல மகள் ஒருவாரமாய் காணவில்லை போலீசில் தகவல் கொடுத்தாயிற்று... எங்கெல்லாமோ தேடி பார்த்து இன்னும் கிடைக்கவில்லை..
அவர்கள் அழுது கொண்டிருந்த அதே நேரம் அந்த அபார்ட்மென்டிலேயே ஒரு மூலையில் இருந்தது கார் ஷெட் மாதிரியான ஒரு அறை.. அந்த வாட்ச்மேன் முகத்தில் அன்று முதல் முறையாக புன்னகை தெரிந்தது....அந்த ஷெட்டின் மூலையில் அந்த 6 வயது சிறுமி அழுது கொண்டிருந்தாள் அவள் கைகால் மற்றும் வாய் கட்ட பட்டிருந்தது................


பகீர் தொடரும்........




               *        *        *          *





"மனம் எனும் மாயபிசாசு"
பாகம் -2
(ரா_பிரபு)

கபாலி என்பவர் முறுக்கு மீசை வைத்து கொண்டு ,லுங்கி கட்டிக்கொண்டு ,முகத்தில் மருவுடன் இருப்பார் என்று சொல்ல முடியாது அவர் கோட் சூட் போட்ட டீசண்ட் மனிதராக இருக்கலாம்.. என்பதை போல தான் கொடூர, கொலையாளி சீரியல் கில்லர் , என்பவர்(ன்) படத்தில் காட்ட படுவதை போல பயமுறுத்தும் பார்வை கொடூர முகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என சொல்ல முடியாது.. ஆள் பார்க்க அரவிந்த சாமி போல இருக்கலாம் ஆனால் பண்ணுவது 'அசால்டா'க இருக்கலாம்.

இன்றைய பிசாசு மனங்களை சந்திக்கும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி.. உலகில் நரமாமிசம் உண்பவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் அவர்கள் இன்னும் இந்த உலகில் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம் என்றால் உலகில் எந்த பகுதியில் அப்படி பட்ட மனிதர்கள் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்..?

யோசித்து வையுங்கள் ..இப்போதைக்கு கடந்த பாகத்தின் கடைசியில் சொன்ன அந்த டெல்லி வாட்ச்மேனை பின் தொடர்வோம்..

அந்த டெல்லி அப்பார்ட்மென்டில் அந்த குடும்பம் ஒரு வாரமாக சாப்பாடு தூக்கம் இல்லாமல் அழுது கொண்டு இருந்தது.. அவர்கள் அழுத போது ...அவ்வபோது விசாரித்த போது ..கவலை பட்டபோது ..பதட்டமாக இருந்த போது ....அந்த வாட்ச்மென் அவ்வபோது அவர்கள் முன்னாள் வெகு இயல்பாக நடமாடி கொண்டு தான் இருந்தான். அந்த அப்பாவி முகத்தை யார் தான் சந்தேகிக்க முடியும்? ஆனால் அந்த கார் ஷெட்டில் சென்ற பின் மட்டும் தான் தனது நிஜ கோர முகத்தை காட்டுவான் அந்த விலங்கு. அதுவும் எதிர்த்து போராட முடியாத கட்டிவைக்க பட்ட 6 வயது குழந்தை இடம்.
இடையில் சில சம்பவங்களை சென்சார்   சேய்து விட்டு போலிஸ் அந்த பெண்ணை மீட்ட காட்சிகு வந்து பார்த்தால் அந்த குழந்தை மிக தவறான முறையில் பயன் படுத்த பட்டிருந்ததாள். நடந்த சம்பவத்தை பத்திரிக்கைகள் விரிவாக விளக்கி இருந்தது என்றாலும் எனனால் அதிகம் விளக்க முடியவில்லை அதற்கு காரணம் இரண்டு...

ஒன்று விளக்குவதில் எனக்கே பதட்டம் தயக்கம் உள்ளது(இடையில் திடீர் சென்சாருக்கு காரணம் அதுதான் ) இரண்டாவது எனது இந்த தொடரை படிப்பவர் எந்த வயதானவராகவும் இருக்கலாம் ஒரு மாணவராகவும் இருக்கலாம்...அதை நான் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் சமரசம் செய்து கொண்டு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன் அந்த குழந்தை உடலில் இருந்து சிறு தேங்காய் எண்ணெய் பாட்டில் ... மெழுகுவர்த்தி... மற்றும் சின்ன சின்ன வீட்டு பொருட்களை டாக்டர்கள் அகற்றினார்கள். அந்த பொருட்கள் எதுவுமே....... வாய் வழியாக செலுத்த பட்டவை அல்ல.......

பண்பாட்டிற்கும் ஒழுக்கத்திற்கும் பேர்போன இந்தியாவில் national crime record beoro வின் anual report 2013 படி 2012 ஒரு வருடத்தில் ரெக்கார்ட் ஆன மொத்த கற்பழிப்பு வழக்கு 24923 .அதாவது மாதத்திற்கு கிட்ட தட்ட 2000 பேர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட70 பேர். நிபுணர்கள் கருத்து படி மற்ற நாட்டை ஒப்பிடும் போது இந்தியாவில் கற்பழிப்பு வழக்கு குறைவாக பதிவிடுகிறார்கள் அதற்கு காரணம் கற்பழிக்க பட்டவர் சமுதாய கூச்சம் பயம் ஒழுக்கம் மற்றும் வெட்கம் காரணமாக வெளியே சொல்ல தயங்குவதாம்.

மனச்சாட்சி அற்ற இப்படி பட்ட கொடூர விலங்குகள் எப்படி உருவாகிறார்கள் என்பது ஒரு வகையில் கணிக்க முடியாததாகவே இருக்கிறது. இந்த பிசாசை உருவாக்கும் மூலக்கூறுகள் எத்தனையோ இடத்தில இருந்து தொடங்கி இருக்கலாம் அது அவன் சிறுவயதில் நடந்த அவன் தன்மானத்தை இழக்க செய்த ஏதாவது நிகழ்வாக இருக்கலாம் .அடக்கி ஒடுக்கி வைக்க பட்ட உணர்வு காரணமாக இருக்கலாம். சிறு வயதில் அன்பு கிடைகாமை அல்லது புறக்கணிப்பு ..இப்படி ஏதாவது இருக்கலாம் என யோசித்தால் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட பல மனிதர்கள் மனதில் பிசாசு ஆக்ரமிப்பதை பார்க்க முடிகிறது.

அமேரிக்காவில் மிக வசதியாக வாழ்ந்த ...எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்த ஒருவனை தொடர் கொடூர கொலை வழக்கில் போலிஸ் பிடித்தது 'உனக்கு என்னையா குறை ஏன் இவ்வளவு கொலைகள் 'என்று கேட்ட போது என்னால் நினைத்ததை வாங்க முடிகிறது நினைத்தபடி வாழ முடிகிறது எல்லாம் இருந்தும் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லை ஒரே விரக்தியாக இருக்கிறது கொலை செய்த போது தான் எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தது என்றான். என்னத்த சொல்ல..

பொதுவாக குற்றம் செய்வதில் உள்ள குறுகுறுப்பிற்காக சின்ன சின்ன குற்றங்களை உலகெங்கும் மக்கள் செய்கிறார்கள் பணத்திற்கு பஞ்சம் இல்லாத பல பேர் சூப்பர் மார்க்கெட்டில் சின்ன சின்ன பொருட்கள் திருடி பிடிப்படுவது உலகமெங்கும் நடக்கிறது. எனது சின்ன வயதில் பள்ளி செல்லும் சாலையில் ஒரு சிறுவனை பார்த்த ஒரு சிறு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவன் வரிசையாக மின்கம்பங்களில் உள்ள tube light களை ஒன்று விடாமல் கல்லால் அடித்து உடைத்த கொண்டு சென்றுகொண்டிருந்தான். அவனுக்கு பைசா புண்ணியம் இல்லாத செயலை அவன் ஏன் செய்தான் ? இந்த குறுகுறுப்பு நல்லதா கெட்டதா? சின்ன வயதில் பட்டாம் பூச்சியை பிடித்து ரெக்கை பிய்த்து ரசிப்பது கிராம புற சிறுவர் ஓணான் அடிப்பது இதெல்லாம் சைக்கோ தனத்தின் வெளிப்பாடா அப்படி இருந்தால் நாடே 90 சதம் சைகொகளால் நிரம்பி இருக்குமே காரணம் சின்ன வயதில் சரி தவறு உணரமுடியாத காலத்தில் உயிர்கைளை துன்புறுத்துவது கிட்டத்தட்ட எல்லா சிறுவர்களும் செய்யும் தவறுகளில் ஒன்று .
இந்த குறுப்புப்பு எதனால் வருகிறது .இது எதன் வெளிப்பாடு இதை நல்ல விதத்தில் பயன் படுத்த முடியுமா என்பதை போக போக விளக்குகிறேன்.

இபோது நமக்காக அடுத்த பிசாசு காத்திருக்கிறது..

ஒரு 10 அல்லது 15 பேரை கொன்றவனை எப்படி பார்ப்பீர்கள் எப்படியா மனசாட்சி இல்லாம இதனை பேரை கொன்ண என கேட்க தோன்றும் அல்லவா அதுவே 50.. 60 பேர் என்றால் 100 ...150 என்றால்.. அவனிடம் கேட்க ஒன்றும் இல்லாமல் ஒருவகை அருவருப்பு கலந்த பிரமிப்பாக பார்ப்பீர்கள் .. இன்னும் கொஞ்சம் மேலே போயி 900 பேரை கொன்ற மனிதன் என்று சொன்னால் அப்படினா அது செங்கிஸ்கான் .. நீரோ ..மாதிரி வெளிநாட்டு ராஜாவா இருக்கும் அந்த காலத்துல நடந்திருக்கும் என யோசிப்பீர்கள் .

ஆனால் ..உங்களுக்கு அடுத்ததாக நான் அறிமுகம் செய்யப்போகும் பிசாசு மனதிற்கு சொந்தமான தக் பெஹ்ராம் (thug beharam)  எனும் ஜமீன்தார் மத்திய பிரதேசத்தை சார்ந்தவர்.
1800 களில் பெஹ்ராம் எனும் பெயர் சுற்று வட்டாரங்களில் பயத்துடன் உச்சரிக்க பட்டது காரணம் அவன் நினைத்தால் கிராமத்திற்கு நுழைந்து நினைத்த பெண்ணை தூக்கி செல்வான் அவனை எதிர்க்க ஆள் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை..
சயீத் அமீர் அலி என்பவன் பஹ்ராமின் இளையகாலதிலிருந்து நண்பன். இந்த terror வாழ்க்கையை பெஹ்ராமிற்கு அறிமுக படுத்தியது அவன்தான் என்று சொல்ல படுகிறது .ஆனால் பிற்காலத்தில் பெஹ்ராமின் தளபதியாக செயல் பட்டான் இந்த அலி.
அராஜகம் அட்டூழியம் பண்ணி திரியும் ஒரு ரவுடி என்ற அளவில் தான் மக்கள் இவர்களை பற்றி நினைத்து வந்தார்கள்.

ஆனால் ..
1790 தொடங்கி பல மனிதர்கள் காணாமல் போனதை ஆராய பிரிட்டிஷ் தலைமை 5 திறமையான டிடெக்ட்டிவ் கொண்ட ஒரு குழுவை அனுப்பியது அந்த 5 பேரும் தடயம் தெரியாமல் மாயமாகி விட்டார்கள்.. இதற்கு காரணம் தக் பெஹ்ராம் என்று பிரிட்டிஷ் தலைமைக்கு தகவல் கிடைத்தது... பெஹ்ராம் பெயரில் உள்ள தக் என்பது கொள்ளை ஏமாற்று என்று பொருள்படும் படி ஒரு கும்பலை குறிக்கிறது இவர்கள் பரம்பரை பரம்பரையாக வழிப்பறி கொலை கொள்ளையில் கைதேர்ந்தவர் அந்த குடும்ப வழக்கில் வந்த ஜமீன்தார் தான் இந்த பெஹ்ராம்.
அவனை கண்டுபிடிக்க மேலும் சில படையை அனுப்பியது பிரிடிஷ் அரசாங்கம். அவர்கள் எல்லோருமே வழக்கம் மாறாமல் காணாமல் போனார்கள் ...எந்த தடயமும் இல்லாமல்..அவர்கள் எலும்புக்கூடுகள் பல மாதங்களுக்கு பின் ஆங்காங்கே கன்டெடுக்கப்பட்டன.
கடைசியாக அரசாங்கத்தால் அனுப்ப பட்ட கேப்டன் வில்லியம் சீமென் என்ற சிங்க குட்டி அதிகாரி 11 வருட உழைப்புகு பின் (இடையில் 3 முறை உயிருக்கு ஆபத்தை சந்தித்து..) கடைசியில் பெஹ்ராமை 1839 இல் கைது செய்த போது பெஹ்ராமிற்கு வயது 75 . இவன் பிடிபட காரணமாக இருந்தது முதலில் பிடிபட்ட இவனுடைய் தளபதி அலி தான் .அவனை பிடித்து சித்ரவதை செய்து விசாரித்ததில் உண்மையை அவன் கக்கி இருந்தான்.
தக் பெஹ்ராம் ஒரு கொலை விரும்பி.. அவன் கொலை சேய்யும் போது மற்றவர்கள் அதை வேடிக்கை பார்க்கவேண்டும் என விரும்புவான்... அதற்கு அவன் தேர்ந்தெடுத்தது ஊர் விட்டு ஊர் செல்லும் பயணிகளை. மொத்தமாக தன் வாழ்நாளில் பெஹ்ராம் 956 பேர் இறக்க காரணமாக இருந்தான் அதில் ஒரு 150 பேரை தான் சொந்த கைகளால் கொன்றான். மற்றவர்கள் இவன் கட்டளை ஏற்று இவன் ஆட்களால் கொல்ல பட்டவர்கள். கடைசியாக 1839 இல் பிரிட்டிஷ் அரசு அவனை தூக்கில் இட்டு கொன்றது. அவன் பிரேதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க பட்டது.

கிட்ட தட்ட 1000 பேரை கொன்ற பெஹ்ராம் பார்க்க எப்படி இருப்பான் தெரியுமா? மீசை என்னமோ வீரப்பன் ரேஞ்சுக்கு வைத்திருந்தாலும் பார்க்க மிகவும் சாதுவான ..மிருதுவான குழந்தை தனமான முகத்தை கொண்டவன் பெஹ்ராம் .அவன் முகத்தை பார்த்து நீங்கள் கற்பூரம் அடித்தாலும் கொலையாளி என நம்ப மாட்டீர்கள்.(படம் இணைத்திருக்கிறேன்)

18 ஆம் நூற்றாண்டிலிருந்து நமது கால வண்டியை கிளப்பி வெகு சமீபத்தில் 2012 இல் இறங்குவோம்.
உங்களுக்கு அடுத்த அறிமுகம் அலாகாபாதை சேர்ந்த ராம் நிரஞ்சன் .
வெகு சமீபத்தில் ஒரு நபர் இந்த ராம் நிரஞ்சனை பகைத்து கொண்டிருந்தார் அவரை தான் கொஞ்ச நாளாக ஆலையே காணோம்.... எங்கே போனார்னே தெரில ... அவனை ராம் நிரஞ்சன் கொன்று விட்டான் என்று நீங்கள் யூகித்ததில் எந்த தவறும் இல்லை ஆம் அவனை கொன்று சில துண்டாக்கி இருந்தான் ராம் நிரஞ்சன். அவனது கை கால் போன்ற சில பாகங்களை ஆற்றில் வீசினான் மற்ற சில பாகங்களை புதைத்து விட்டான்.. என்றாலும் மீதி சில உறுப்பை என்ன செய்தான் என சரியாக தெரியவில்லை  இப்போது நிம்மதியாக ராம் நிரன்ஜன் தனது டின்னரை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தார் அவர் எதை அப்படி ருசித்து சாப்பிடுகிறார் என உற்று கவனித்தால்.... அது... அந்த புதைக்காமல் மிச்சம் மீந்து போன மனித உடல் உறுப்புக்கள்... ராம் நிரஞ்சனின் அந்த கதை.. அடுத்த பாகத்தில்......


பகீர் தொடரும்.......




                *       *        *         *






"மனம் எனும் மாய பிசாசு
(பாகம்:3)

(ரா_பிரபு)

சைக்கோ கொலையாலிகளில் பல வகை கேள்வி பட்டிருப்பீர்கள். சில பேர் சின்ன வயதில் அவர்களுக்கு நேர்ந்த அவமானம் புறக்கணிப்பு போன்ற வற்றால் உண்டானவர்கள் ,சில பேருக்கு மனநிலை பாதிப்பில் மூளை குறுகுறுப்பில் சைக்கோ தனம் செய்பவர்கள்.
 உங்களிடம் ஒரு கேள்வி.. உங்களுக்கு தெரிந்து மிக குறைந்த வயது சைக்கோ கொலையாளி யார் அவனுக்கு எண்ண வயதிருக்கும்? யோசித்து வையுங்கள் அதற்குள் கடந்த பாகத்தில் கடைசியில் நமக்கு அறிமுகமான ராம் நிரஞ்சனை கவனிப்போம்.

மனிதனை உண்ணும் cannibal இனம் என்று சொன்னால் நமக்கு ஏதோ பழங்காலத்து ஆப்ரிக்க காட்டுவாசி நினைவுக்கு வரலாம். அப்படி பட்ட ஆட்கள் உலகில் எங்கோ மூலையில் வாழ்வதாக நாம் நினைக்கலாம் ஆனால் 1998 முதல் 2000 க்குள் 14 பேரை கொன்று தின்ற ராம் நிரஞ்சன் மிகவும் நாகரீக உலகை...... அலாஹாபாதை சார்ந்தவர்.

அவர் சீரியல் கில்லரா என்றால் ஆம் என்று சொன்னாலும் சைக்கோவா என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டி உள்ளது.
 காரணம் மூளையில் கொலை வெறி தூண்ட பட்டு தன்னை அடக்க முடியாமல் மக்களை கொன்றவன் அல்ல ராம் நிரஞ்சன்.
 நம்மிடம் யாரவது வம்பு பன்னால் அல்லது நமக்கு பிடிக்காதவர் யாராவது என்றால் நாம் ஒன்று அவர்களிடம் சண்டையிடுவோம் அல்லது அதிக பட்சம் அவரை அடித்து விடுவோம்.. ஆனால் ராம் நிரஞ்சன் கொன்று விடுவான் அதான் வித்யாசம்.
என்ன...... அநியாயத்துக்கு சாதாரண விஷயதுக்கெல்லாம் கொலை பண்ணிவிடுவான்.

ஒரு முறை அலஹாபாத்திலிருந்து லக்னோ செல்ல காத்திருந்தான் ராம் நிரஞ்சன். வந்த ஒரு டாக்சியில் லிப்ட் கேட்க அவர்கள் தர மறுக்க....அவளவுதான் வந்த கோபத்தில் டாக்சியில் இருந்த 3 பேரையும் அடித்து கொன்று விட்டான் ராம் நிரஞ்சன்.
அவர்களும் அந்நியன் படத்தில் லிப்ட் தர மறுத்த ஒருவரை அந்நியன் கொல்லும் போது 'இதுக்கெல்லாமயா கொல்லுவீங்க' என கேட்பாரே அப்படி பரிதாபமாக கேட்டுக்கொண்டு இறந்து போனார்கள். (எதற்கும் அடுத்த முறை உங்களிடம் யாரவது லிப்ட் கேட்டால் அவர் சைக்கோவா என்ன எது என்று கேட்டு கொள்ளுங்கள்)

ராம் செய்த முதல் கொலை அவருடன் பாக்டரியில் வேலை செய்த கொலீக். அவர் ராமிடம் ஏதோ தகராறு பண்ண அவரை கொன்று தின்று விட்டான் ராம். இவ்வளவு அழகாக ராம் என்று பெயர் வைத்து கொண்டு இப்படியாடா பன்னுவ என கேட்க தோன்றுகிறதல்லவா .

நம்ம ராம் நிரஞ்சனுக்கு 'மானிக்கத்தை' போல இன்னொரு பெரும் இருக்கு ராஜா கொலண்டர். ராம் நிரஞ்சனை வெறும் ஒரு கொலை வெறி பிடித்த திமிர் பிடித்த முரட்டு தனமான அரக்கன் என வர்ணிக்கலாம் என்று பார்த்தால் கொன்றவர்கள் பிணத்தை கொண்டு அவன் செய்த சில விசித்திர வேலைகள் தான் அவனுக்கு சைக்கோ தகுதியை பெற்று தருகிறது..

குறிப்பாக கொன்றவர்கலின் பல உடலுறுப்புகளை துண்டாக்கி தின்றான். ஆனால் குறிப்பாக சில பேரை மட்டும் மூளையை ரசித்து சமைத்து தின்றான் பின்னாளில் அதற்கு அவன் கொடுத்த விளக்கம்.... அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் மூளை நன்றாக வேலை செய்கிறது என்கிறார்கள் அதான் அவர்களின் மூளை மட்டும் தின்றேன்.

அவனை பிடித்த பின் அவன் வீட்டை சோதனை போட்ட போலீஸ் அதிர்ந்து போனது காரணம் அவன் வீட்டில் மண்டை ஓடுகள் வரிசையாக அடுக்கி வைக்க பட்டிருந்தன.. அதிலும் ஏதோ ஒரு வரிசைகிரமம் படி அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தோன்றவே விசாரித்ததில் இறந்தவர்களின் ஜாதி அடிப்படையில் அவர்களை வரிசை படுத்தி அடுக்கி இருந்தான் ராம் நிரஞ்சன் .(ஜாதி வெறி சைக்கோவையும் விட்டு வைக்க வில்லை)

 தனது அணைத்து செயலையும் எதோ சாகசம் போல தனது டைரியில் குறித்து வைத்தான் ராம் நிரஞ்சன்.
எல்லா கொலைகளையும் ராம் தனியாக செய்யவில்லை அவனுக்கு ஒரு பார்ட்னரும் இருந்தான் அது அவன் மச்சான் வக்சாராஜ் . இந்த கொலை கூட்டணி போலீசிடம் மாட்டியது எப்படி என்று பார்ப்போம்..

தீரேந்தர் சிங் என்பவரை காணாமல் போலிஸ் தேட தொடங்கியதில் தான் ராம் கூட்டணிக்கு கெட்ட நேரம் தொடங்கியது .தீரேந்தர் சிங் ஒரு பத்திரிக்கை காரர் . ராம் பற்றிய தகவலை வெளியிட்டுவானோ என்ற பயத்தில் ராம் தீரந்தரை கொன்று உடலை துண்டாக்கி அங்கங்கே வீசி இருந்தான்.  தீர்ந்தர் சிங் செல்போனை ஆராய்ந்த போலிஸ் அவனுக்கு வந்த கால் களை ஆராய்ந்தது ..அதில் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்....பூலான் தேவி என்கிற பெண்மணி (பிரபல கொள்ளை காரி பூலான்தேவி யுடன் குழப்பி கொள்ளாதீர்கள் ) அந்த பெண்மணி வேற யாரும் அல்ல ராம் நிரஞ்சனின் மனைவி.

அவரை பிடித்து விசாரித்ததில் அவரது கணவன் பற்றிய எல்லா தகவலையும் கண்டுகொண்டது போலிஸ்.
2000 தில் அவனை போலிஸ் கைது செய்தது அந்த டீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடவே போனசாய் ஆளுக்கு 10000 அபராதமும் விதித்தது நீதிமன்றம்.

மனசு பிசாசாக மாறியவர்கள் தினுசு தினுசாக கொடூரத்தை வெளிப்படுவதை வரலாற்றில் பார்க்க முடிகிறது சில கொலையாளிகள் பக்கா பிளான் கொலைகாரர்கள் என்றால் சில பேர் திடீர் கொலைகாரர்கள்.. சில பேர் பெண்ணை மட்டும் கொல்பவர்கள் என்றால் சில பேர் குழந்தையை மட்டும் கொல்பவர்கள்.

இன்னும் சில சீரியல் கொலையாளிகள் பணத்துக்காக கொல்பவர்கள்.. உதாரணத்திற்கு ஆனந்த் குல்கா அல்லது மோகன் குமார் இவனுக்கு இன்னொரு பெயர் சயனைடு மோகன். திருமணம் ஆகாத மற்றும் கல்யாணம் தடை படுகிற அப்புறம் ஆதரவு அற்ற பெண்களுடன் பழகி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பான் மோகன் .
திருமணம் மிக ரகசியமாக ஏற்பாடு செய்வான் தான் ரகசிய திருமணம் செய்வதாக பெண்களை நம்ப வைப்பான். திருமணத்திற்கு முந்தின நாள் அந்த பெண்களுடன் ஒன்றாகி இருப்பான் அப்போது அவர்களுக்கு பாணங்களில் சயனைடு மாத்திரையை கலந்து கொடுப்பான். துடித்து விழுந்து இறந்ததும் அவர்கள் கொண்டு வந்த நகை பணத்துடன் எஸ்கேப்பாகி இன்னுமொரு அப்பாவி இரைக்காக காத்திருப்பான்.

மனம் எனும் மாய பிசாசு மனிதர்களை கொண்டு செல்லும் நரக பாதை தான் எவ்வளவு கொடூரமானது.. மனம் வளர்ந்த பின் அது செய்யும் கொடுமைகள் காட்டும் தவறான வழிகள் தான் எத்தனை.. இதை எல்லாம் பார்க்கும் போது பேசாம குழந்தையாகவே இருந்து விடலாம் பா என உங்களுக்கு தோன்றுமேயானால்.... மன்னிக்கணும் நான் அடுத்ததாக காட்ட போகும் பிசாசு மனம் உங்களை அதிர்ச்சி அடைய செய்யும்..
ஒரு நிமிடம்....

கொஞ்சம் இருங்கள்... ஒரு சைக்கோ கொலையாளி கொலை செய்ய போகிறான் வாருங்கள் அவனை பின்தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் ..

அது பீகாரில் உள்ள ஒரு சின்ன கிராமம் ..ஒரு தாய் உறங்கி கொண்டிருக்கிராள்.. அவள் மடியில் அவளது 6 மாத குழந்தை... அந்த சைக்கோ மெல்ல நெருங்கி அந்த குழந்தையை கொஞ்சம் கஷ்டப்பட்டு தூக்குகிறான் குழந்தை தூங்கி கொண்டிருக்கிறது... சைக்கோ முகத்தில் கொலைவெறியெல்லாம் இல்லை மாறாக ஒரு அப்பாவி தனமான புன்னகை .அதை தூக்கி கொண்டு ஊருக்கு வெளியே வயல் வெளிக்கு கொண்டு சென்று படுக்க வைக்கிறான். சுற்றி யாரும் இல்லை என்பதை ஒரு முறை உறுதி படுத்தி கொள்கிறான் முகத்தில் மீண்டும் அந்த அப்பாவி சிரிப்பு... பக்கத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அந்த குழந்தையை ஓங்கி ஓங்கி அடிகிறான் .அது துடிக்க துடிக்க..அதை பார்த்து ரசிக்கிரான். குழந்தை முகம் நசுங்கி கோரமாக ரத்த பிண்டமாக நசுங்கி கிடக்க... மத்தாப்பை பார்த்த குழந்தை போல அவன் முகத்தில் ஒரு குதுகளிப்பு ... உற்சாகம் ...கையை தட்டி தனது கொலையை கொண்டாடுகிறான் அவன்.

ஒரு நிமிஷம்.....

உங்களுக்கு தெரிந்த மிக குறைந்த வயது தொடர் கொலையாளி யாரோ தெரியாது ஆனால் மேலே விவரித்த கொலை சம்பவத்தை செய்து விட்டு அங்கே ரசித்து சிரித்து கொண்டு இருப்பது ஒரு 8 வயது சிறுவன்...நம்ப கடினமாக இருக்கும் ஆனால் அவன் ஒரு seriel killer தொடர் கொலையாளி...
அமர்தீப் சதா என்கிற பீகாரை சார்ந்த அந்த திகில் ..பகீர்..கொலையாளி குழந்தை பற்றி ... அடுத்த பாகத்தில்.


பகீர் தொடரும்.................




                *     *      *       *





 "மனம் எனும் மாய பிசாசு "

(பாகம் 4 )

(ரா.பிரபு)

கடந்த பாகத்தின் இறுதியில் நான் குறியிட்ட அமர்தீப் சதா இரண்டு அர்தங்களிலும் ஒரு 'குழந்தை சீரியல் கில்லர்' (அதாவது குழந்தையை மட்டும் கொல்பவன்... அதே நேரம் கொலையாளியே ஒரு குழந்தை தான் என்பதால்)

வெறும் 8 வயதான அமர்த்தீப், 'குஸ்பு' எனும் 6மாத குழந்தையை கொன்றதுக்கு பிடிபட்டு விசாரித்த போது தான் அவன் மேலும் இரண்டு குழந்தையை ஏற்கனவே கொன்றிருக்கிறான் என்ற உண்மை அறிந்து திடுகிட்டார்கள்.
அதில் இன்னோரு திடுக் அவன் இரைகளில் ஒன்று 8 மாதம் ஆன அவன் சொந்த தங்கை..இனொன்று அவன் கசின்.
விசாரணையின் போது அந்த பழைய இரண்டு கொலைகளும் அவன் வீட்டுக்கு தெரிந்திருந்தது வெளியே சொல்லாமல் மறைத்து விட்டிருந்தார்கள் என்ற உண்மையும் தெரிய வந்தது.
சைக்கோ குழந்தை பார்க்க மற்ற குழந்தைகளை விட எப்படியும் மாறுப்பட்டதல்ல... அவனை விசாரித்த அதிகாரிகள் கூறுகையில் "நிறைய சிரித்து கொண்டே இருக்கிறான் பிஸ்கட் கேட்டு கொண்டே இருக்கிறான் " என்றார்கள்.
இது போன்ற உண்மை சம்பங்களை அடிப்படையாக வைத்து அவ்வபோது பல படங்கள் கூட உலகமெங்கும் எடுக்க படுகின்றன (Mikey எனும் ஆங்கில படம் நினைவு இருக்கலாம்)

மனதை பிசாசு ஆக்குவது அவனது சந்தர்ப்பங்கள் தான் அல்லது அவனது சிந்தனைகள் தான் என்றால் இவைகள் இரண்டும் அதிகம் கிடைக்க பெறாத குழ்நதைகள் இப்படி ஆவது எப்படி ?
மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகத்தில் மதன் அவர்கள் இதன் காரணத்தை பல கோணங்களில் அலசி இருப்பார் ஆனால் அவரும் தீர்க்கமாக சொல்ல முடியாமல் முடித்திருப்பார்.

உலகம் எங்கும் நடக்கும் கிரைம் களில் செக்ஸ் கொலைகள் மிக பிரதானமானதாகவும் மற்றும் மிகவும் மனித தன்மை அற்றதாகவும் இருக்கிறது.
எங்கோ  ஒ்துக்கு புரமான இடங்களில் ஒதுங்க பார்க்கும் நல்ல காதல் மற்றும் கள்ள காதல் ஜோடிகளை குறிவைத்து அந்த காதலனை தாக்கி விட்டு அந்த பெண்ணை கற்பழித்து பின் கொலை செய்ததை தொடர்ச்சியாக செய்து வந்த கும்பல் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள்.
வடக்கே ஒரு ஊரில் புளிய மரத்தில் தாழ்த்த பட்ட இரண்டு பெண்கள் தூக்கில் தொங்க விட பட்டது நீங்கள் செய்தியில் பார்த்திருக்கலாம் அவர்கள் இருவரும் அக்கா தங்கைகள் . அவர்கள் இருவரையும் கிராமத்தில் சில மிருகங்கள் சீரழித்து பின் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றிருந்தார்கள்.

'விக்டிம்' ஐ உயிரோடு விட்டால் நமக்கு ஆபத்து என்று கற்பழிக்க பட்ட பெண்கள் உடனே கொல்ல படுகிறார்கள் என்பதை விட மனித தன்மை அற்ற செயல் என்னவாக இருக்க முடியும்.
தீவிர வாத பகுதிகளில் குடி இருக்கும் ஒரு சிறுமி பல தீவிர வாதிகளால் கொடூரமாக கற்பழிக்க படுகிறாள். பிறகு தப்பித்து கிராமத்திற்கு வருகிறாள். அதன்பின் நடந்தது தான் அதை விட கொடுமை .அவள் சார்ந்திருந்த குறியிட்ட மத பிரிவு ஊறார்கள் இவள் கலங்க பட்டவள் இவள் உயிரோடு இருக்க தகுதி இல்லாதவள் என்று சொல்லி அவளை கல்லால் அடித்தே கொன்றார்கள். இந்த செய்தியை நீண்ட நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் சின்ன் பெட்டி செய்தியாக பார்த்தேன் அனால் அது கொடுத்த பெரிய அளவு அதிர்ச்சியை மறக்க முடியாது.

மனம் எனும் மாய பிசாசின் கரங்கள் நாம் நினைபதை காட்டிலும் பெரிய அளவில் பரவி நம்மை தனது பிடியில் இறுக்கி வைத்துள்ளது. சாதாரணமாக ஒத்த கருத்து உடையவர்கள் முக நூலில் ஒத்த கருத்து உடைய பேஜ் தொடங்கி ஒன்று சேர்ந்து பேசி கொள்வதை போல மிக விபரீத எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து பகிரங்கமாக பேசி கொள்கிறார்கள்.
ஒரு முறை முக நூல் அதிகாரிகள் பார்த்து அதிர்ந்து போய் ஒரு பக்கத்தை முடக்கினார்கள் அந்த பக்கத்தின் தலைப்பு சொன்னால் நீங்களும் அதிர்வது உறுதி .அந்த தலைப்பு..."சிறுமிகளை கற்பழிப்போம்"

இந்த கட்டுரை எழுதி கொண்டிருக்கும் இந்த கணத்திற்கு மிக சமீப எடுத்து காட்டுகளும் இரண்டு மனிதாபிமானம் அற்ற இரண்டு செக்ஸ் கொலைகள் தான்.
முதல் சம்பவம் :
சென்னை போரூர் அடுக்குமாடி குடியிருப்பில் ஹர்ஷினி எனும் 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி காணாமல் போகிறாள் . விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தஸ்வன்த் எனும் தகவல் தொழில் நுட்பத்தில் பணிபுரியும் soft ware engineer முன்னுக்கு பின் முரணாக பேசி மாட்டுகிறார். அவரிடம் விசாரித்ததில் கிடைத்த பகிர் தகவல் படி அவன் அந்த சிறுமியை கடத்தி வன்புணர்வு செய்து பிறகு தலையணையை வைத்து கொன்று இருக்கிறான். பிறகு பிணத்தை பையில் போட்டு ஊருக்கு ஒத்துக்கு புறமாக கொண்டு போய் எரித்து இருக்கிறான்.

இரண்டாவது சம்பவம் ;
அரியலூர் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலிக்கிறான் கற்பமும் அக்குகிறான் ஒரு உயர் சமூக ஆன்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவளை கடத்தி தனது நண்பர்கள் உடன் கூட்டு வன்புணர்வு செய்கிறான். பிறகு அவள் உயிரோடு இருக்கும் போதே அவள் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து குழந்தையை வெளியே எடுத்து அவள் துபாடாவில் வைத்து அதை எரிக்கிறான். பிறகு அவளை காலில் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி இருக்கிறார்கள்.  அந்த பெண்ணுக்கு வயது வெறும் 16 தான்.( இந்த சம்பவத்தை பொறுத்த வரை செக்ஸ் கொலை என்பதை விட ஜாதிய ஆணவ கொலை... ஆணாதிக்க மிருக கொலை என்று சொல்லலாம் )
அமைதிக்கும் சமாதனத்திற்கும் கலாச்சாரத்திற்கு பேர் போன இதே நாட்டில் தான் கொடூர தனத்தின் உச்சத்தை கொண்ட இதுபோன்ற பிசாசுகளும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆமாம்....இந்த பிசாசுகள் ஏன் உருவாகின்ற தடுக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா...?

அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.


தொடரும்...




                  *       *      *       *





"மனம் எனும் மாய பிசாசு "
(பாகம் 5)

ரா.பிரபு

நாட்டில் மிக தவறாக பொருள் கொள்ளும் படியான வார்த்தையாக மாற்ற பட்டு விட்ட இரண்டு வார்த்தைகளில் ஒன்று செக்ஸ் (இனொன்று அரசியல்).
உங்கள் கண்களை மூடி கொண்டு செக்ஸ் என்ற வார்த்தையை ஒருமுறை உச்சரித்து உங்களுக்குள் அது ஏற்படுத்தும் எண்ண அலைகளை கவனியுங்கள். பிறகு பூந்தோட்டம் அல்லது இயற்கை அல்லது ஓவியம் போன்ற வேறு வார்த்தையை உச்சரித்து அது ஏற்படுத்தும் எண்ணங்களையும் கவனியுங்கள்.
செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே நமக்குள் கற்பழிப்பு.. கொடூர கொலை... அருவருப்பு...  குற்ற உணர்வு.. திருட்டு தனம் போன்ற உணர்வுகள் உலாவருவதை தடுக்க முடிய வில்லை அல்லவா.
அனால் உண்மையில் இயற்கை.... ஒன்றினைவு... இன்பம்... பேரானதம்..  இனப்பெருக்கம் போன்ற எண்ணங்கள் அல்லவா வந்திருக்க வேண்டும்.

செக்ஸை கெட்ட வார்த்தை ஆக்குவது பிசாசு மனம் கொண்ட சிலரின் செயல் தான் என்றாலும் அந்த  பெருமை சமூகத்தில் சினிமா துறை தொடங்கி மீடியா வரை இன்னும் பல பேரை சாரும்.
சரி பிசாசை அழிக்க முடியாதா அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நிறைய செய்ய வேண்டும் ஆனால் அதற்கிறல்லாம் முதலில் நாம் அதை கல்வியில் இருந்து தொடங்க வேண்டும்.

இதை போய் என்னத்த பள்ளியில் சொல்லி தருவது அதை அவனே தெரிந்து கொள்ள மாட்டானா என்று கேட்கும் கணத்தில் தான் நாம் தவறிழைகிறோம்.. சாப்பிடுவது எப்படி நடப்பது எப்படி உட்காருவது எப்படி ..பேசுவது எப்படி என்பதை எல்லாம் அவனே கால போக்கில் கற்று கொள்வான் ஆனால் அதை தான் நாம் மும்மரமாக சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட பருவத்தில் செக்ஸ் நமது உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன .. அது மிக இயற்கையானது அதை எப்படி கையாளுவது போன்ற விஷயங்களை.. பெண்களை மதிப்பது உளவியல் ரீதியாக தீய எண்ணங்கள் வந்தால் அதை எப்படி எதிக்கொள்வது போன்றவற்றை எல்லாம் நாம் சொல்லி தரவேண்டும்.  செக்ஸ் பற்றி நாம் சொல்லி தராவிட்டால்  அவன் அதை இன்டர்நெட்டிலோ நண்பர்களிடமோ சென்று அதை மிக மிக தவறான முறையில் கற்று கொள்வான்.

குறிப்பாக பெண் குறித்த தேவைக்கு அதிகமான கற்பனை  ....மயக்கம்... மோகம் போன்றவை தான் அவனை பல தவறுகள் செய்ய தூண்டு கின்றன... பெண் குறித்த தேவைக்கு புறம்பான தவறான சிந்தனைகளை அவனுக்குள் தொடர்ந்து  உருவாக்குவதில் முக்கிய பங்கு பள்ளிகளுக்கு உள்ளது என்று நான் சொன்னால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பள்ளிகளில் மட்டும் அல்ல சமூகத்திலும் ஆணுக்கு பெண் குறித்தும் பெண்ணுக்கு ஆன் குறித்தும் போதிய தெளிவு இல்லை என்பது தான் உண்மை . பள்ளியில்  ஆன் பெண்களை பிரித்து அமர வைப்பது அவர்கள் பேசிக்கொண்டால் கண்டிப்பது போன்றவைகளில் தொடங்குகிறது தவறான படிப்பினைகள். இவைகள் தான் உளவியல் ரீதியாக பல பிரச்னை வர காரணமாகிறது .
எதை மறைத்து தடை செய்து வைத்திருக்கிறோமோ அதை பற்றி தான் தொடர்ந்து மனம் சிந்தித்த படி இருக்கும் (அதுவும் குறிப்பிட்ட பருவத்தில் மிக அதிகமாக ) என்ற சாதாரன உளவியல் உண்மையை கூட புரிந்து கொள்ளாத கல்வி முறை இவனுக்கு என்னத்த வாழ்க்கை முறையை சொல்லி கொடுத்து விட போகிறது.

பெண்களிடம் பேசுவதை தடுக்க பட்ட ஆன்...ஒரு முறை பேசி விட்டால் அதையே பெரிய விஷயமாக நினைக்கும் ஆன்.. பெண் உடலை இயல்பாக தொடுவதையே குற்றமாக கற்பிக்க பட்ட ஆன்.. பெண்கள் உடன் இயல்பாக பேசி பழகுவதை செய்ய முடியாத ஆன்... அப்படி ஒரு முறை பேசிவிட்டால் அதை உலக அதிசயமாக நினைக்கும் ஆன் ..தொடர்ந்து பெண் சிந்தனையாகவே இருப்பான். அவனை போன்றவன் தான் பேருந்தில் நெருக்கமாக பெண்ணை பார்க்கும் போது பெண்மையின் அண்மை என்பதை ஆசாதரணமான ஒன்றாக நினைக்கவும் ..அதை தொடர்ந்து தேவைக்கு முரணாக  செயலாற்றவும் தூண்ட படுகிறான்.

நான் சொல்வதில் உடன்பாடு இல்லை எண்றால் நீங்கள் ஒரு thought experiment செய்து பாருங்கள் ஒரு கற்பனை பரிசோதனை பண்ணுங்கள்.
அதாவது நீங்கள் ஒரு குழந்தையை வளர்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. எப்படி என்றால் அவனுக்கு பிறந்ததில் இருந்து ரோஜா பூ வை தடை செய்ய வேண்டும். அவன் வளர வளர அதில் மிக கடுமை காட்ட வேண்டும் தப்பி தவறி எங்காவது ரோஜா பூ பக்கம் திரும்பி பார்த்து விட்டால் அவனை கடுமையாக தண்டிக்க வேண்டும்." ரோஜா பூவை எங்கேயாவது பார்த்தே னு தெரிஞ்சிது ...தோலை உறிச்சிடுவேன் " என்று மிரட்டி வைக்க வேண்டும்.
ரோஜா பூ கடவுளுக்கு எதிரானது அதை பார்ப்பது தொடுவது பாவம் என்று அவனுக்கு போதிக்க வேண்டும். ஏதாவது ஆவலில் புத்தகங்களில்  நாலெடுகளில் அவன் ரோஜாவை பார்த்து விட்டால் அவனை பாவி என்று சொல்லி குற்ற உணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அவன் வளர்ந்த பின்  ரோஜா பூக்களை கவர்ந்து வர பல கிலோ மீட்டர் பயணிப்பாண். எங்காவது பக்கத்து வீட்டு தோட்டத்திலோ...கீழே கிடக்கும் படத்திலோ ரோஜா வை பார்த்தால் அதை தேவை கு அதிகமான ஆர்வத்தோடு உற்று பார்ப்பான் தனது வாழ்நாளில் ரோஜாவை பார்க்கும் எந்த சந்தர்பத்தையும் அவன் தவற விடவே மாட்டான். அவன் அதிகமாக ரோஜாவை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பான் .அவன் மனதில் ரோஜா தான் அதிக இடத்தை பிடித்து இருக்கும்.
பிறகு ஒரு கட்டத்தில் அவன் ஒரு ரோஜா திருடனாக மாறுவான். பக்கத்து அக்கது தோட்டங்ககில் ரோஜா கவர்ந்து வந்து தனி அறையில் அதை கசக்கி பார்த்து மகிழ்வான். இதழ் இதழாக பிய்த்து பார்த்து ரசிப்பான்.

ரோஜா என்பது ஒரு அழகிய பூ என்றும் அதை ரசிப்பது எப்படி என்றும்  சொல்லி தர நாம் தவறி விட்டால்.. பூவை பற்றிய தவறான புரிதலுக்கு நாம் அவனை ஆளாக்கி விட்டால் அவன் ஒரு ' ரோஜா குற்றவாளி ' யாவதை யாராலும் தடுக்க முடியாது.

'மனம் எனும் மாய பிசாசு ' இல் உடன் பயணித்த நண்பர்களுக்கு......

மனம் என்பது ஒரு மாய பிசாசு என்பது நாணயத்தின் ஒரு பக்கம் தான்.
மனதை சரியாக பயன்படுத்த தவறிய ஆட்களின் பிசாசு தரிசனத்தை தான் இந்த கட்டுரை தொடரில் நீங்கள் பார்த்தது .ஆனால் அதை சரியாக பயன்படுத்தினால் அது ஒரு தேவதை என்பது தான் மிக பெரிய உண்மை.
அந்த தேவதையை வசமாக்கி கொண்டு இந்த உலகில் ஜொலித்தவர்கள் பலர்.

அவர்கள் எப்படி தேவதையை வசமாக்கி
கொண்டார்கள் . ?
மனதை சரியான முறையில் பயன் படுத்துவது எப்படி..?
சிந்திப்பதற்கென ஏதும் வழிமுறை உள்ளதா..?
ஆழ்மனம் பிரபஞ்ச அறிவுடன் தொடர்புடையது என்கிறார்களே அதை பயன்படுத்தி மகா அறிவை அடைய முடியுமா..?
போன்ற கேள்விகளுக்கு விடை தேடி தான் எனது "மனம் எனும் மாய தேவதை " கட்டுரையை எழுத திட்டம் இட்டு உள்ளேன்..
(உண்மையில் இந்த பிசாசை பல பாகங்களுக்கு திட்டமிட்டேன் ஆனால் பிசாசை சந்திப்பது அயற்சியை கொடுத்து விட்டதால் 5 பாகங்களோடு முடித்து கொள்கிறேன்.)

விரைவில் தேவதை உடன் விரிவாக  சந்திக்கிறேன்.


அன்பு நண்பன் ரா.பிரபு.





Comments

  1. மனம் எனும் மாய தேவதை " கட்டுரையை எப்பொழுது எழுதுவீர்கள்.

    ReplyDelete
  2. Really nice... Thanks for your service 🙂

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"