மயக்கும் இரவு (சஸ்பென்ஸ் தொடர்)




#மயக்கும்_இரவு

அத்தியாயம் 1 (மேலே பாய்ந்த கருப்பு உருவம்)

(--கதை கற்பனை எழுத்து --#ரா_பிரபு )

மயக்கும் மாலை நேரம் அது....
அந்த கார் அந்த மலை பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
உச்சியில் இருந்து பார்க்க ஏதோ திருவிழாவில் வாங்கிய பொம்மை போல் அது மினியேச்சர் மயக்கம் தந்தது..

காரில் டிரைவிங் சீட்டில் இருந்தவன் இளைஞன்.. அழகன்... உடல் மொழியில் .. அணிந்திருந்த உடையில் 'சிட்டி' தெரிந்தது.
சாலை இருபுரங்களில் இருந்த பள்ளத்தாக்கு எதிரே தெரிந்த மலை உச்சி... கார் ஜன்னல் வழியே கசிந்து வந்து அவனை அரவனித்த குளிர் .. இவைகளை அவன் மிகவும் ரசித்து கொண்டிருந்தான் என்பதை ஸ்டியரிங்கில் அவன் கைகள் போட்டு கொண்டிருந்த தாளம் காட்டி கொடுத்தது...
பின் சீட்டில் அமர்ந்திருந்தவன் தலையில் முண்டாசு கட்டி இருந்தான்.
பாமர முகம் பெரிய மீசை.. ஆனால் அதை பார்த்து பயம் வர வில்லை...

"மாரியப்பன் " என்று அழைத்தான் இளைஞன்.

"அய்யா" குரலில் பயமா பவ்யமா என அடையாளம் காண முடியவில்லை.

"இன்னும் எவ்ளோ தூரம் போகணும் மாரியப்பன்"

"அய்யா இதோ வந்தாச்சுங்க... இன்னும் மிஞ்சி மிஞ்சி போனா நூறு மீட்டர்"

தூரத்தில் சூரியன் மலை வாயில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள வேகமாக சென்று கொண்டு இருந்தான்.. அந்த பயத்தில் முகம் சிவந்திருந்தான்..

"அய்..யா....." இம்முறை தயக்கமான இழுவை கொண்ட 'அய்யா'

"என்ன மாரியப்பன்"

"அய்யா நான் முன்னாடியே சொன்ன மாதிரி எஸ்டேட் ஆரம்பிக்கிற இரும்பு கேட் வரைக்கும் தான் வருவேன்..
அப்புறம் உங்களுக்கு இடத்தை காட்டிட்டு போயிடுவேன் .. உள்ள வர மாட்டேன் "

அவன் சிரித்து விட்டு
"சரி சரி இடத்தை காட்டு போதும் "என்றான்..

அடுத்த பத்து நிமிடத்திற்கு பின்.. தூரத்தில் பனி மூட்டத்திற்கு பின்னால் அந்த பிரமாண்ட இரும்பு கதவு தெரிந்தது ... மாலை நேர மெல்லிய ஒளியில் ஏதோ படம் வரைந்து வைத்ததை போல அது இருந்தது.
அதன் அருகில் சென்று காரை நிறுத்திய உடன் மாரியப்பன் இறங்கி சென்று அந்த இரும்பு கேட் ஐ திறந்து விட்டான்.
பிறகு இவனை நெருங்கி...
"அய்யா இதோ போகுது பாருங்க மண் ரோடு இதுலயே ஒரு 500 மீட்டர் போனீங்கனாகா நீங்க கேட்ட பங்களா வரும்"

"ரொம்ப நன்றி மாரியப்பன் "

என்று அவருக்கு கை கொடுத்தவன் டாஸ் போர்ட் ஐ திறந்து  பர்ஸை எடுத்து உள்ளே இருந்து ஒரு புது பிங்க் நிற ...மங்கள்யான் படம் போட்ட..ஒற்றை
2000 ரூபாய் தாளை நீட்டினான்..
இந்த உதவிக்கு இவ்வளவு தொகையை எதிர் பார்த்திராத மாரியப்பன் கோல்கேட் விளம்பர மாடல் போல 32 உம் தெரிய சிரித்தான்..
பிறகு மெல்லிய குரலில்..

"அய்யா பாக்க நல்லவங்களா தெரிரிங்க... அதனால சொல்றன்...
அந்த பங்களாவுல நைட் நேரத்துல போகாதீங்க  ஏன்னா அங்க...... "

என்று சொல்லி தயக்கதோடு  நிறுத்தினான்

"மாரியப்பன் அந்த பங்களா பற்றிய கதை எனக்கு தெரியும் நீங்க கவலை படாமல் பத்திரமா போங்க.." என்றான்

"அய்யா ரொம்ப நல்லதுங்க நான் உத்தரவு வங்கிகரன்"
என சொல்லிவிட்டு விறு விறு வென வந்த வழி நடக்க தொடங்கினான்..
அவன் நடையை பார்த்தால் இருட்டுவதற்குள் எப்படியாவது இந்த இடத்தை காலி செய்து விட வேண்டும் என்ற பரபரப்பு தெரிந்தது.

அவன் காரை கிளப்பி உள்ளே நுழைந்து காரை விட்டு இறங்கி அந்த காம்பவுண்ட் கேட்டை கஷ்ட பட்டு சாத்தினான் பிறகு காரை கிளப்பி மண் ரோடில் வேகமாக விரைந்தான்..

அடுத்த ஐந்து நிமிடம் கழிந்த பின்
அந்த பங்களா பார்வைக்கு கிடைத்த போது ஆச்சர்ய பட்டான்...
இந்த இடத்தில் இவ்வளவு பெரிய பங்களாவா..
அந்த பங்களா பாழடைந்த நிலையில் இருந்தாலும் மிக உறுதியாக இருந்தது .. அதன் சாயம் இழந்த கண்னாடிகளில் மாலை நேர மங்கிய ஒளி மெதுவாக பிரதி பலித்தது..
கட்டிய போது என்ன வண்ணம் அடித்திருப்பார்கள் என்பது யூகிக்க கடினமாக இருந்தது...
காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு கொண்டு வந்த சூட்கேஸை எடுத்து கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தான்..
சாவியுடன் போராடி கதவை திறந்த போது அது அடிப்பட்டவன் ஜுரத்தில் முனகுவதை போல ஒரு முனகல் உடன் திறந்தது ...
போராடி தள்ளிய போது ஒரு ஆணி சரேலென்று கையில் குத்த முழங்கையில் ரத்தம் எட்டி பார்த்தது.
ச்சே என நொந்து கொண்டு உள்ளே நுழைந்தான்..

உள்ளே பிரமாண்ட ஹாலில் ஆங்காங்கே அலங்கார விளக்குகள்.. எல்லாமே மெழுகு வர்த்தியால் ஒளிரகூடிய விளக்குகள்.
அந்த பங்களாவின் ஜன்னல் களில் திரை சீலைகளில் ...சுவற்றில் மாட்டி இருந்த மிருகங்களின் தலையில்...
அமானுஷ்ய தன்மை குடி கொண்டிருந்தது...
இது எதுவும் அவனை பாதித்ததாக தெரியவில்லை...

அவன் எந்த தயக்கமும் இல்லாமல் சூட்கேஸை எடுத்து கொண்டு மாடிக்கு போகும் படியில் ஏறினான்..
மாடியில் பரந்த மனசு வராண்டாவை கடந்து ஒரு ஓரமாய் இருந்த பெட் ரூமை அடைந்து சூட்கேஸை வைத்து விட்டு பெட்டில் தொம் என்று விழுந்தான்...
'இபோது மனோவிற்கு கால் பண்ண வேண்டும்'
செல் போனை எடுத்து நம்பரை அழுத்தினான்.. சிக்னல் மிக குறைவாக இருந்த காரணத்தால் 4 ..5 முறைக்கு பின் இணைப்பு கிடைத்து "ஹெலோ" என்றது எதிர் முனை...

"மச்சி மனோ ... இப்போ அய்யா எங்க இருக்கன் தெரியுமா... நீ சொன்ன அந்த எஸ்டேட் பங்களாவுல..."

"வாட் ?ஆர் யு ஃபூல் நீ செத்து போய்டுவடா.... நீ செத்து போய்டுவ...."
என்று கதறினான் எதிர் முனை மனோ..

                            * * * *

அதீத வெளிச்சத்தை வாரி இறைக்கும் விளக்கு ஒளியில் அந்த பெண்கள் போட்டிருந்த மேக் அப் இல் பளிச் இருந்தது...
அதில் மருமகள் தட்டில் இருந்த சோறை எடுத்து சாப்பிட்டு கொண்டிருக்க ..
மாமியார் ஆசையாக ஊட்டி விட்டாள்..
பிறகு கை கழுவ போன போது தனது மகளிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டி சக்ஸஸ் என்றாள்.
"நாம போட்ட பிளான் படி மருமக சோத்துல விஷம் வச்சிட்டோம் இனி யாருக்கும் சந்தேகம் வராது "
என்றுவிட்டு சிரித்தார்கள்

"கட் ....கட்" என்றான் மனோ...
இந்த தங்கமான மருமகள் சீரியலின் டைரக்டர்...
வானவில் டிவி யின் ஆஸ்தான மெகா தொடர் அது..
போன் மணி அடித்த போது திரை யில் தெரிந்த நம்பரை பார்த்து பரபரப்பு ஆனான் அது அவனுடன் வேலை செய்யும் அவன் நண்பன் விக்னேஷ் நம்பர்..அவனை தான் நெற்றிலிருந்து காண வில்லை போன் செய்தால் ரெஸ்பான்ஸ் இல்லை..
எனவே சற்று பரபரபோடு போனை எடுத்து ஹெலோ என்றான்...

"மச்சி மனோ ... இப்போ அய்யா எங்க இருக்கன் தெரியுமா... நீ சொன்ன அந்த எஸ்டேட் பங்களாவுல..."
என்று எதிர்முனையில் விக்னேஷ் சொன்னதை கேட்டு அதிர்ந்தான்..

"வாட் ?ஆர் யு ஃபூல் நீ செத்து போய்டுவடா.... நீ செத்து போய்டுவ"
என்று கத்தினான்

மனோ இப்படி பதற காரணத்தை தெரிந்து கொள்ள நாம் ஒரு வாரம் பின்னாடி செல்ல வேண்டும்...

வீக் எண்ட் இல் நண்பர்கள் இருவரும் மனோ வீட்டில் கூடி தண்ணி அடித்து கொண்டிருந்த நேரம் அது..
"மச்சி புதுசா 'அமிட்லு' னு  ஒரு  ரஷ்ய சரக்கு வந்திருக்கு அதை ட்ரை பன்றியா... செம்மையா இருக்கும்.."
நண்பர்கள் கதைத்து கொண்டிருந்த போது...
கதை அடித்து வம்பு வளர்ந்த போது பேச்சு வாக்கில் " நாணெல்லாம் எதற்கும் பயந்தவன் இல்லை மச்சி.. ரொம்ப தைரியமான ஆளு "
என்று விக்னேஷ் சொன்ன போது அதற்கு பதிலுக்கு மனோ
"ஆமா ஆமா எங்க தாத்தாவோட எஸ்டேட் பங்களால தங்கற அளவு தைரிய சாலி நீ" என சொன்ன போது தான் அது தொடங்கியது..

"தாத்தாவோட எஸ்டேட் பங்களாவா அதுல என்ன மச்சி இருக்கு"

சற்றே போதையில் தள்ளாடிய மனோ

"அதுல பேய் இருக்கு மச்சி நியூஸ் பேப்பர்ல கூட வந்துச்சே பாக்கல?.".என்றவன் தொடர்ந்தான்..

"எங்க தாத்தா கட்டின் அந்த பங்களா ரொம்ப நாளா சும்மா தான் இருந்திச்சி..
அந்த பக்கம் டூரிஸ்ட் மாதிரி ஏரியான்றதுநால சரி சும்மா தான் இருக்கே னு வாடகைக்கு விட்டோம்...
அப்போ தான் அங்க பபிதா னு ஒரு வட நாட்டு பொண்ணு பெட் ரூம்ல கை நரம்ப ப்ளேடால அறுத்து செத்து கிடந்தது.
 அவள் காதலன் படிக்கட்டு கீழ தலைல அடிபட்டு செத்து கிடந்தான் .. இன்னோரு ரூம்ல இமானுவேல் னு ஒரு கார் மெக்கானிக் தூக்கு மாட்டி செத்து போய் இருந்தான் .
இதெல்லாம் ஒரே நைட்ல .... நான் சொல்ற வெப்சைட்ல போய் பாரு ஒரு ஆர்டிக்களே இருக்கு.

அதுக்கப்புறம் அங்கு தங்க போனவர்களுக்கு நடந்த விசித்திர அனுபவங்கள் விசித்திர மரணங்கள் பத்தியெல்லாம் வெளில வரல..
அதனால..யாரவது தைரியம் னு சொன்னா நான் உடனே அவன் கிட்ட சொல்றது... ' அப்போ வாடா வந்து என் தாத்தா பங்களாவுல தங்குடா னு தான்"

"மச்சி அப்படி நான் அந்த பங்களால ஒரு வாரம் தங்கிட்டா"

" என்னோட புது பல்சர் பைக் உனக்கு தான்...பங்களா சாவி வேணுமா இந்தா வச்சிக்க..."

இப்படி தான் தொடங்கி இருந்தது அவர்கள் கதை....

மனோ அதிர்ச்சியிலிருந்து மீளாமல்...
"அன்னைக்கு ஏதோ போதைல சொல்றனு நினைச்சன் இப்படி நிஜமாவே கிளம்பி போய்ட்டியேடா"

"மச்சி என்னை பயமுறுத்தர சக்தி இன்னும் இந்த உலகத்துல பிறக்கல..."

"டேய் விக்னேஷ் ஒன்னு சொல்றன் அதையாவது கேளு .. அங்கு ரத்தம் எதுனா வராம பாத்துக்க.. ஏன்னா ரத்த வாசனை அங்கு உள்ளவற்றை உசுபேத்திவிடும் னு கேள்வி போட்டிருக்கன்.."

விக்னேஷ் தன் புறங்கையில் தெரிந்த ரத்த துளியை பார்த்து கொண்டான்.. சிரித்தான்..

" நீ என்ன பயமுறுத்தினாலும் நான் பயப்பட மாட்டேன்..நீ கவலை படாம இரு... நம்ம ஹிந்தி வாலா பாஸ் ஜிதேந்தர் சிங் ஐ எப்படியாவது சமாளி நான் ஒரு வாரம் கழித்து உன்ன பாக்கரன்....
உன் பைக்கை நல்லா துடைச்சு வை"

சொல்லி சிரித்து விட்டு மொபைலை பாக்கெட்டில் வைத்தான்...

                           * * * *

விக்னேஷ் பேசி விட்டு மொபைலை பாக்கெட்டில் வைத்த சமயம்.... மிக சரியாக.....
அந்த கணத்தில்...
அந்த கரிய உருவம் அவன் மீது பாய்ந்தது...
என்ன ஏது என அவனால் சிந்திக்க முடியவில்லை...
ஆனால்..
தனது பின்னங்கழுத்தில் கூறிய பற்கள் பதிந்ததை உணர்ந்து திடுக்கிட்டான்"

தொடரும்...






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~








#மயக்கும்_இரவு
அத்தியாயம் 2 (யார் இவள்)

(எழுத்து : ரா.பிரபு)

"ஓகே சார் ..""ஓகே சார்...""ஓகே சார்..."

என கேட்டு கொண்டிருந்தான் மனோ... போன் வெடித்து விடும் சூழலில் இருந்தது.
போனில் அவன் பாஸ் ஹிந்திவாலா ஜிதேந்தர்.
நடுத்தர வயது தங்க மனிதர்.. ஆட்களை பாராட்ட தொடங்கினால் சரமாரியாக புகழ்வார்.
திட்ட தொடங்கினால் அதை விட சரமாரியாக செய்வார்..
இப்போது திட்டி கொண்டிருந்தார்...
'தமிழ் ' அவரிடம் மாட்டி திணறி கொண்டிருந்தது...

"இங்கே பாரு மேன்.. நீ ஒரு தண்டம் உன் பிரண்ட் ஒரு தண்டம்...
ஒரு வேலை உறுபடி இல்லை.. உங்களுக்கு நான் வெட்டி சம்பளம் கொடுக்குறான்... இப்போ இன்னா சாதிச்சிடிச்சு ... இன்னத்துக்கு அவனுக்கு ஒன் வீக் லீவ்.....
நீ அவனுக்கு ரெக்கமண்டா மேன்... எப்போ பார் நாட் ரீச்சபல் நாட் ரீச்சபல் ..இன்னா நாசாலே வேலை பாகுதா உன் பிரண்டு...
நல்லா கேட்டுக்கோ நாளை கு அவன் என் முன்னாடி இருந்தாகனும் இல்லைனா அவனுக்கு வேலை காலி கிளீரா சொல்லிடு பாய்".

ஹிந்திவாலா ..தவுசண்ட் வாலா போல பொரிந்து விட்டு வைத்து விட..
மனோ முகம் 'வார்த்தா' புயலில் அடிபட்ட வாகனம் போல் இருந்தது..
'ஹிந்திவாலா வை எப்படியாவது சொல்லி சமாளி' -
எவ்வளவு எளிதாக சொல்லி விட்டான் விக்னேஷ் பயல்.
'டேய் லூசு சாகச காரா நாளைக்கு வரலைனா உனக்கு வேலையே இல்லை நீ என்னடான்னா அங்க பேயை தேடி போய்ட்டியா '
ஜிதேந்தர் சொன்னால் செய்ய கூடிய ஆசாமி...
தீர்மானத்திற்கு வந்தவனாய் போனை எடுத்து விக்னேஷ் நம்பருக்கு அழுத்தினான்..

                            * * * *

மாலை ஒளி குறைந்து கொண்டு வந்தது...
சுற்று சூழலில் கொஞ்சம் குளிர் ஆரம்பித்தது ..
விக்னேஷ் அந்த ஹாலில் இருந்த பியானோவை கவனித்தான்.. கொஞ்சம் தூசு படிந்து இருந்தது அதை அணுகி அதில் அமர்ந்தான்.. சும்மா கை போன போக்கில் ட்ரைங்ங்ஙங்ஙங்ங ....... என வாசித்தான்...
தனது லேப் டாப் ஐ எடுத்து உயிர்பித்தான்... சார்ஜ் இருக்கும் வரை தான் இதை பயன் படுத்த முடியும் இறங்கி விட்டால் சார்ஜ் போட இங்கே மின்சாரம் இல்லை என்ற உண்மை அவனுக்கு ஓரத்தில் உறுத்தியது... கீழே ஊருக்கு சென்றால் தான்.. அதற்கு முக்கால் மணிநேரம் ஆகும்.
தூரத்தில் படிகளின் உச்சியில் கருப்பு உருவம் சோம்பல் முறிப்பது தெரிந்தது ..
இவனை பார்த்து 'மியாவ் ' என்றது ..

"சூ.... தூர போ " என விரட்டினான்..
சைத்தான் கொஞ்ச நேரத்தில் எப்படி பயமுறுத்தி விட்டது இந்த பூனை.. தன் புரங்கழுத்தில் அது பதித்து இருந்ததை தடவி பார்த்தான்
'நல்ல வேலை பெரிசாக ஏதும் இல்லை'
லாப் டாப்பில் விரல்களால் தட்டினான் அந்த குறிப்பிட்ட சைட்டில் எழுத பட்டிருந்த கட்டுரையை எடுத்தான்.

"பங்களாவில் பயங்கரம்"..

டைட்டிலை எங்க இருந்து யா புடிக்கிறாங்க என நினைத்து கொண்டான்.
தொடர்ந்து படடித்தான்..
பிணங்கள் கிடைத்ததாக சொல்ல பட்ட அன்றிரவு என்ன நடந்தது என்பதை இன்னோரு முறை விரிவாக படித்து தெரிந்து கொண்டான்..

பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்க வந்த ஒரு இளைஞன் வழியில்  'பபிதா அரோரா 'என்ற வட நாட்டு பெண்ணுக்கு லிப்ட் தருகிறான் .
அவள் தனது கார் பஞ்சர் ஆகிவிட்டதாக சொல்கிறாள் அவளை பேசி இரவு தங்க இந்த பங்களாவுக்கு அழைத்து வருகிறான்..
அவள் வந்து குளித்து விட்டு மஞ்சள் நிற புடவை கட்டி கொண்டு வருகிறாள் .. இவனுக்கு காப்பி போட்டு தருவதாக சொல்கிறாள்..
பிறகு
இருவரும் பால்கனியில் இயற்கை அழகை பார்த்து கொண்டு காபி சாப்பிடுகிறார்கள் மனம் விட்டு கதைக்கிறார்கள். .பிறகு திடீரென அந்த பெண் இவனை காதலிப்பதாக சொல்கிறாள்..
பிறகு
இமானுவேல் என்ற மெகக்காணிக்கும் அங்கு வந்ததாக தெரிகிறது..
நள்ளிரவில் அந்த பெண் கையை பிளேடால் அறுத்து கொண்டு இறந்திருக்கிறாள்.
சரியாக அன்று நடந்தது என்ன என்பது சரியாக சொல்ல படவில்லை.
பதட்டத்தில் அவன் அந்த மெக்கானிக் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்க்கிறான் அவனும் தூக்கு மாட்டி கொண்டு இறந்திருக்கிறான்..
இவன் அதிர்ச்சியில் மயக்கம் அடித்து படியில் இருந்து உருண்டு பயத்தில் இதயம் நின்று இறந்து போய் இருக்கிறான்'

இதை படித்து முடித்ததும் விக்னேசுக்கு எழுந்த முதல் கேள்வி எல்லாமே செத்துட்டா இங்க நடந்தது இதான் என்று இந்த கட்டுரை ஏழுதியவனுக்கு சொன்னது யாரு..
'சும்மா கதை விட்டு கொண்டு' என்று நினைத்து கொண்டான்.

 எழுந்து நின்று சுத்தி பார்த்தவன் அப்போது தான் அதை யோசித்தான்.
அடடா இருட்டி விட்டால் இங்க வெளிச்சம் இல்லை.
வரும் போது மெழுகு வர்த்தி வாங்காமல் வந்தது பெரிய தப்பு..
என்ன பண்ணலாம்.. மேலும் சில சில்லறை சாமான்கள் கூட வாங்க வேண்டுமே..
ஒரு வாரம் தங்க திட்டமிட்டுளேன்.. கண்டிப்பாக நிறைய பொருள் தேவை படும்.
விக்னேஷ் மணியை பார்த்தான் அது 7 ஐ நெருங்கி கொண்டிருந்தது..
போக முக்கால் மணிநேரம் வர முக்கால் மணிநேரம் ... ஒரு 9 மணிபோல வந்துடலாமே ..
சரி என முடிவுக்கு வந்தவன்.. பங்களாவை மீண்டும் பூட்டி விட்டு காரை கிளப்பி மலை சரிவில் பயணித்தான்.

                         * * * *

மணி 8.15....
மெழுகு வர்த்தி மற்றும் சில அடிப்படை பொருட்களை வாங்கி கொண்ட விக்னேஷின் கார் இப்போது மலை சரிவில் ஏறி கொண்டிருந்தது..
சுற்றி கருப்பு பெயின்டில் முக்கி எடுத்தாற்போல வானம் இருண்டு இருந்தது...
சூரியனை முற்றிலும் டெபாசிட் இழக்க செய்த நட்சத்திரங்கள் நிலவை ஒருமனதாக தேர்ந்தெடுத்து இருந்தன நிலவின் ஆட்சி தொடங்கி செம்மையாக நடந்து கொண்டு இருந்தது.
காரை வேகமாக செலுத்தி கொண்டிருந்த போது போன் மணி அடித்தது எடுத்து பார்த்தான் ..
நண்பன் மனோ

"சொல்லு மச்சான்"

" டேய் நீ பந்தயம் கட்டி எஸ்டேட் போனது போதும் உடனே கிளம்பு"

"ஏன் ...என்னாச்சு... பெட் ல நான் ஜெயிச்சுடுவேணு பயம் வந்துடிச்சா"

"இல்லை இங்கே என்னை ஜிதேந்தர் பேய் அடிச்சிடிச்சி ... நாளைக்கு நீ இங்க இல்லைனா உன் வேலை காலி அவ்ளோ தான் நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்"

"டேய் .. உன்னை பேசி சமாளிக்க தான டா சொன்னேன் என்ன டா பண்ணி வச்சிருக்க நீ.."

"சாரி மச்சான் ஹிந்திவாலா கூட என்னால சமாளிக்க முடியாது நீ உடனே கிளம்பி வா"

 சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

விக்னேஷ் சிந்தனையில் ஆழ்ந்தான்..
பங்களாவில் பேய் பிசாசு எல்லாம் வெறும் கட்டு கதை அது எனக்கு நல்லா தெரியும்..
அதை இந்த உலகத்துக்கே நிரூபித்து காட்டலாம்னு இல்ல நினைச்சேன்...
ச்ச இப்போ கான்சல் பண்ணிட்டு போகனுமா..?
கொஞ்சம் சிந்தித்தான் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான்..
நாளை தானே அந்த மூதேவியை பார்க்கணும் ...பார்த்துடலாம்..  'பங்களாவில் ஒரு வாரம்'  என்ற பிளான் கேன்சல்.. ஓகே..
ஆனால் உடனே இப்போவே எல்லாம் கிளம்ப போவதில்லை ...இன்றிரவு இங்கே தங்க தான் போகிறேன்..
ஓர் இரவு அந்த பங்களாவில் தங்குவதை யாராலும் தடுக்க முடியாது   என நினைத்து கொண்டான்.
தீர்மானமாக காரை தொடர்ந்து செலுத்தினான்..

கார் வெளிச்சத்தில் பாதைகள் வேக வேக மாக நகர்ந்து கொண்டிருந்த போது .. விக்னேஷ் சிரித்து கொண்டான்..
'ஏதோ பேய் இருக்குன்றாங்க ... பிசாசு இருக்குங்ராங்க....' என சந்திரமுகி வடிவேலு போல சொல்லி கொண்டான்..
ஆக்சுவளா இங்க எனக்கு போர் அடிக்குது என நினைத்து கொண்டான்..
எதிர் பாரத்தளவு  த்ரில் இல்லையே..
ச்ச அட்லீஸ்ட் பேச்சு துணைக்காவது ஒரு பேய் வந்திருக்கலாம்...'என நினைத்தான் ...சிரித்தான்.
பிறகு,
சுற்றி இருந்த இருள் ...குளிர் ..தனிமை இவைகள் ஒன்னு சேர்ந்து..
'பேச்சு துணைக்கு ஒரு பெண் இருந்தால்......." என்ற ஒரு எண்ண ஓட்டத்தை அவனுக்குள் கொண்டு வந்தது...

தலையை சிலுப்பி கொண்டான்.
'அத்துவான இடத்தில் அழகிய  பெண்ணா .. நோ சான்ஸ் டா விக்னேஷ்' என தனக்கு தானே சொல்லி கொண்டான்.
அந்த சிந்தனை அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த நிமிஷத்தில் தான்...
கார் வெளிச்சத்தில் அதை பார்த்தான்.
ஒரு பெண் நன்கு உடை அணிந்த ஒரு நாகரிக பெண்.
லிப்ட் கேட்கும் அடையாளமாய் கட்டை விரலை கவிழ்த்து காட்டி நின்று கொண்டிருந்த ஒரு பெண்..
விக்னேஷ் தனது அதிர்ஷ்டத்தை எண்ணி சந்தோஷ பட்டு கொண்டு நம்ப முடியாத பார்வை பார்த்தான்.
 அவள் அருகில் சென்று நிறுத்தினான் அவள் புன்னகைப்பது தெரிந்தது..
பேரழகியாக இருந்தாள் அவள்.
தனக்கு சம்பந்தமில்லாமல் கொஞ்சம் பழங்காலத்து தோடுகளை காதில் மாட்டி இருந்ததாள்.
'இந்த மயக்கும் இரவில் ஒரு மயக்கும் பேரழகி வாவ்'
விசிலடித்த விக்னேஷ்
கார் கண்ணாடியை இறக்கி..

"யெஸ் ஹவ் கென் ஐ ஹெல்ப் யு மிஸ் "
என்றான்..

"ஆ... ஆக்சுவளி என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு.. மெக்கானிக் கு போன் பண்ணி இருக்கேன்... இங்க தனியா பயமா இருக்கு ஹெல்ப் மீ ப்ளீஸ் " என்றாள்
விக்னேஷ் கொஞ்சம் திகைத்து..பின்..
ஓகே கார்ல ஏறுங்க என்றான் அவள் முன் சீட்டில் ஏறி அவனுடன் அமர்ந்து கொண்டு "தேங்ஸ்" என்று சிரித்தாள்..
அழகிய பல் வரிசை...
விக்னேஷ் காரை கிளப்பி ஒட்ட தொடங்கினான்...
சிந்தனை கொஞ்சம் குழப்பம் அடைந்திருந்தது... இந்த நேரத்துல ஒரு பெண்னால் எப்படி தனியாக வர முடிகிறது.. அந்த பங்களா கதைல கூட அந்த பொண்ணு வந்தாளே.
5 நிமிடம் சென்ற பின் விக்னேஷ் அவளிடம் திரும்பி...
"உங்க பேர் என்னனு தெரிஞ்சி்கலாமா "
என்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்து சிரித்தாள் சிரிப்பில் எதோ அமானுஷ்யம் இருந்தது..

"பபிதா.....பபிதா அரோரா " என்றாள் மெதுவாக.....

சொல்லிவிட்டு தலையில் முன் வந்து விழுந்த முடியை பின்னுக்கு தள்ளினாள்..
அதற்கு கையை உயர்த்திய போது மணிக்கட்டில் ஏதோ வெட்டு காயம் இருந்து....
 பின் ஆறியதற்கான தழும்பு தெரிந்ததை கவனித்தான் விக்னேஷ்..

தொடரும்................






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






#மயக்கும்_இரவு

அத்தியாயம் 3 (குழப்பும் இரவு)

(எழுத்து : #ரா_பிரபு)

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது.
விக்னேஷ் ஆச்சர்யம் விலகாமல்

"பேர் என்ன சொன்னிங்க .."  என்றான்

"ஏன் ...!  பபிதா...! "

"இல்லை ... சும்மா தான் கேட்டன்."

"அந்த பெயரில் யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா"

"இல்லை இல்லை " என்றான் விக்னேஷ்..

கையில் உள்ள வெட்டு தழும்பு குறித்து கேட்கலாமா என்று நினைத்து வேண்டாமென்று தவிர்த்தான்.
"நான் உங்கள எங்க டிராப் பண்ணனும்"

" டிராப் இல்லை .. நான் மெக்கானிக் கு போன் செய்து இருக்கேன் அவர் வரும் வரை உங்களுடன் தங்க அனுமதித்தால் போதும்.."

பாபிதா பெயர் தற்செயலாக இருக்கலாம் ஆனால் அந்த பங்களா கதையில் கூட ஒரு மெக்கானிக் வந்தானே...

சற்றே குழம்பியவனாய் காரை வேகம் எடுத்து ஓட்டினான்... அடுத்த அரைமணி நேரம் கழித்து பங்களாவை அடைந்து காரை நிறுத்தி விட்டு இறங்கினான்..
பங்களாவை சுற்றி ஒரு முறை பார்வையை சுழற்றினான்...
மாலை பார்த்ததற்கும் இப்போதைக்கு நிறைய வித்யாசம் இருந்தது...
கண்ணுக்கு எட்டிய தூரம் அந்த மலை பிரதேசத்தில் வீடுகளோ செயற்கை பொருட்களோ கண்ணுக்கு தெரியவில்லை...
கதவை திறந்து உள்ளே நுழைந்தவர்களுக்கு முகத்தில் கப்பென்று அடித்தது இருட்டு...

"கொஞ்சம் பொறுங்கள் நான் விளக்கை ஏற்றுகிறேன்"

என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த விளக்கில் மெழுகை பொருத்தி தீ யை காட்டி வெளிச்சமாக்கினான்..
அரை குறை வெளிச்சத்தில் பங்களாவின் உட்புறம் அமானுஷ்யத்தை வாரி இறைத்தது..
அருகில் இருந்த மேலும் சில விளக்குகளை பொருத்தி விட்டு மேலும் கூடுதல் வெளிச்சம் ஆக்கி விட்டு நிமிர்ந்தவன் அதிர்ந்தான்..
அருகில் அந்த பெண்ணை காண வில்லை...

"பபிதா " என்றான் சத்தமாக..

பக்கத்தில் தானே நின்றிருந்தாள் அதற்குள் எப்படி மாயமாக மறைந்தாள்
"பபிதா" என்றான் மேலும் சப்தமாக..
திடீரென கண்ணாடி உருட்டியதை போல சிரிப்பு சப்தம் வந்தது... மாடி படிக்கட்டு மேல் இருந்து..

" நான் இங்க இருக்கன் ஏங்க கத்தறீங்க.."

"வாட்... இருட்டுல அங்க எப்படி போனீங்க...
மொதல்ல அங்க படிக்கட்டு இருக்குனு எப்படி தெரியும்" என்றான் அதிர்ச்சியாக

" எனக்கு இருட்டு எப்போதும் பிரச்னை இல்லை " என்றாள் அவள்..
விக்னேஷ் விளக்கை ஏந்திய படி மாடிக்கு நடந்தான்..
அங்கே அந்த பெண் முகத்தை விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான் அதில் தெரிந்த உணர்ச்சியை இனம் காண முடியவில்லை..
கண்களில் ஒரு விசேஷ ஜொலிப்பு இருந்ததை போல இருந்தது..
லென்ஸ் அணிந்திருப்பாள் போல என நினைத்தான்.
மாடியில் பல இடங்களில் வைக்க பட்ட விளக்குகளை ஒவொன்றாக பொறுமையாக ஏற்றினான்.. இப்போது பங்களா முழுக்க ஓரளவு ஒளி வெள்ளம் நிறைந்து காண பட்டது...

"இங்க பாத்ரூம் எங்க இருக்கு " என்றாள் அவள்

"அதோ அங்க " என்று மூலையில் கைகாட்டினான்

"தப்பா நினைகல னா .. நான் ஒரு சின்ன குளியல் போட்டுக்கலாமா... பயங்கர டையர்ட்.."

"தாராளமா" என்றான் விக்னேஷ்

"அவள் தேங்க்யூ " என அழகாய் சிரித்து விட்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தாள்...
இவனுக்கு மனோ உடன் பேச வேண்டும் போல இருந்தது போனை எடுத்து முயற்சிதான் அங்கே துளி அளவு கூட சிக்னல் இல்லை..

விக்னேஷ் கீழே இறங்கி சென்று தன் லேப் டாப்பை எடுத்தான்..
பக்கத்தில் உள்ள பியானோவில் தடங்க்க்க்க் என்று யாரோ வாசிப்பதை கேட்டு அதிர்ந்தான்..
அதிர்ச்சியாக விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான்
பக்கத்தில் பியானோ மேல் அந்த கருப்பு பூனை நடமாடி கொண்டிருந்தது..
திடீரென
மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று கத்தியது..
இது வேற ஒருபக்கம் ..ச்ச என்று நொந்து கொண்டான்.

மீண்டும் மாடிக்கு சென்று தனது லேப் டாப்பை உயிர்ப்பித்து அந்த ஆர்டிக்ள் ஐ தேடி பிடித்து அதில் அந்த பெண்ணின் போட்டோவை தேடினான்...
அதில் அந்த புகைப்படத்தில் முகம் மட்டும் மங்களாக்க பட்டு இருந்தது.. ச்ச என மூட போனவன் அதில் இருந்த போட்டோவில் தெரிந்த கழுத்தில் உள்ள மச்சத்தை கவனித்து வைத்து கொண்டான்.
லேப் டாப் இல் பாட்டரி லோ சிம்பள் காட்டியதை பார்த்து கவலை பட்டான்.
சில நிமிடங்களுக்கு பின்..
பாத்ரூம் கதவை திறந்து வெளியேறிய அவளை கண்டதும் வியப்பில் ஆழ்ந்தான். அவள் மஞ்சள் நிற புடவை கட்டி இருந்தாள்.

"உங்களுக்கு இந்த மஞ்சள் சாரி எப்படி கிடைச்சது திடீர்னு " என்றான் அதிர்ச்சியாக ..

"நான் தான் கொண்டு வந்தேன்"

"என்ன விளையாடுறீங்களா நீங்க பேக் ஏதும் கொண்டு வரல எனக்கு நல்லா தெரியும்"

"அட என்னங்க நீங்க ... இருட்டுல கவனிச்சு இருக்க மாட்டீங்க நான் கையோட கொண்டு வந்தேன்" என்றாள் அவள்...

"கார் ?" என்றான் அவன் திடீரென..

"என்னது கார்" என்றால் அவள் வியப்போடு புரியாமல்....

"வேர் இஸ் யுவர் கார் ... நீங்க ரிப்பேர் ஆனதா சொன்ன கார் நான் வழில எங்கேயும் பார்க்கல அந்த கார் எங்க"

"ஹெலோ நீங்க மொதல்ல நல்ல கண்ணாடியை வாங்கி போடுங்க என் கார் அங்கேயே தான் நின்று இருந்தது நீங்க பார்களையா.."

என்னை சுற்றி இப்போ என்ன நடக்குது ..,?
யாரவது வேணும் னே விளையாடுறாங்களா ... இல்லியே அதற்கு வாய்ப்பு இல்லையே... நான் இங்கு வந்தது மனோவிற்கு கூட தெரியாதே... யாரிடமும் சொல்லாமல் திடீரென தானே நானே முடிவு செய்து கிளம்பி வந்தேன்.

ஆனால் இங்கு ஏதோ விசித்திரம் இருக்கே... கிட்ட தட்ட 15 ..20 வருடத்திற்கு முன் நடந்ததா ஒரு ஆர்க்டிகல்ல சொல்ல பட்ட சம்பவங்கள் இபபோ திரும்ப நடக்குற மாதிரி இருக்கே..

இல்லை.....

அதற்கு வாய்ப்பே இல்லை...
இது தற்செயல் களின் ஒரு கலவை அவ்வளவு தான்..
அந்த கட்டுரையில் அவள் குளித்து விட்டு மஞ்சள் புடவை கட்டி வந்தாள்...
இவளும் கட்டிவந்தாள்...
அதனால் என்ன ? அவள் காபி போட்டு சாப்பிட்டாள் ...இவள் சாப்பிடலையே...
இப்படி நினைப்பு அவனுக்குள் ஓடி கொண்டிருக்க...

"என்னங்க எதுனா பிரச்சனையா"
 என்றால் அவள் கரிசனத்தோடு..

"ச்ச ச்ச ... அதெல்லாம் ஒன்னும் இல்லை கொஞ்சம் டயர்ட அவ்வளவு தான்" என்றான் பதிலுக்கு...

"அவ்வளவு தானே கவலை படாதீங்க அப்படி கொஞ்ச நேரம் உக்கார்ந்து ரெஸ்ட் எடுங்க நான் காபி போட்டு கொண்டு வரன் "

" வாட்"  என்று அதிர்ந்தான் விக்னேஷ்..

"என்னங்க ....இப்போ என்னங்க சொல்லிடன்... காபி போட்டு தரேனு தானே சொன்னேன் ... உங்களை கொலை பண்ண போறேன்னு சொன்ன மாதிரி அளர்றீங்க"

"வாட் கொலை யா"

"அட என்னங்க நீங்க எதுகெடுத்தாலும் அதிர்ச்சி அடைஞ்சி கிட்டு"

சொல்லி விட்டு அவள் இவன் வாங்கி வந்த பொருட்களில் காபி கு தேவையானதை எடுத்து கொண்டு சமையல் அறை நோக்கி நடந்தாள்..

விக்னேஷ் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான்...
தனது போனை எடுத்து கால் செய்ய முயன்றான்... சிக்னல் ஒரு துளி கூட இல்லை...
இவனுக்கு வியப்பை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது...
ஒரு கட்டுரை யில் இருப்பது அப்படியே மீண்டும் நடக்க முடியுமா...
அப்போ அடுத்ததா இனி பபிதா என்னை பால்கனிக்கு அழைத்து செல்வாளா... என்னை காதலிப்பதாக சொல்லுவாளா... அது எப்படி முடியும் என்னை சந்தித்தே இன்னும் 2 மணி நேரம் கூட ஆகளையே...
அதை விட முக்கியம் இன்றிரவு அவள் மணிக்கட்டு அறுக்கப்பட்டு இறந்து போவாளா..?
விக்னேஷை குழப்ப மேகம் சூழ்ந்தது...
நீண்ட யோசனைக்கு பின்.....

விக்னேஷ் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்...
தனது தீர்மானத்தை செயல் படுத்த தயாரானான்........

  தொடரும்....






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






#மயக்கும் இரவு..
அத்தியாயம் 4 ( விபரீதம் ஆரம்பம்)

விக்னேஷ் காத்திருந்தான்..
கிச்சனில் அவள் காபி போட சாமான்களை உருட்டும் சப்தம் கேட்டது.
ஐந்து நிமிடம் கழித்து அவள் வெளியே வந்து காப்பி யை நீட்டினாள் ..
அவன் தயங்காமல் வாங்கி கொண்டு இரண்டு வாய் குடித்தான்..
பின் தீர்மானமாக சொன்னான்..

" இப்போ அடுத்ததா என்ன பால்கணிக்கு கூப்பிட போற அதானே"
சொல்லி விட்டு அவள் முகத்தை கூர்ந்து கவனித்தான்

அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது

"மை காட் உங்களுக்கு மைண்ட் ரீடிங் வருமா.... அதுவும் இவ்வளவு துல்லியமா நான் நிஜமா பால்கனிக்கு தான் கூப்பிட இருந்தேன்"

"அப்படியா சரிவாங்க பால்கனிக்கு போவோம் .. அடுத்து நடக்கறதையும் பரிசோதிப்போம்.."

அவளை அழைத்து கொண்டு பால்கனிக்கு நடந்தான்.
பால்கனியில் இருந்து இரவு வேளையில் நீண்ட தூரம் பார்க்க முடிந்தது...
தூரத்தில் ஊருக்குள் எரியும் விளக்குகள் சிறு புள்ளிகளாக தெரிந்தது..
மலை சரிவும் காடுகளும் தவிர வேறு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை..

"எனக்கு வியப்பா இருக்கு விக்னேஷ்  எப்படி என் மனசுல இருக்கிற எண்ணத்தை சொல்ல முடிஞ்சிது"..

"மை காட் "என்றான் விக்னேஷ்...

"உங்களுக்கு என் பேரு எப்படி தெரியும் நான் சொல்லவே இல்லையே"

 அவள் கொஞ்ச நேரம் சலனம் இல்லாமல் பதில் பேசாமல் நின்றாள்..
விளக்கு சுடர் கொஞ்சம் அவள் மேல் பிரதிபலித்த போது அவள் கழுத்தில் உள்ள மச்சத்தை கவனித்தான்..
அந்த புகை படத்தில் இருந்த அதே மச்சம்...

"பதில் சொல்லுங்க பபிதா உங்களுக்கு என்னோட பெயர் எப்படி தெரியும்"

"அதானே ... எப்படி தெரியும்?? " என்று சொல்லி யோசித்து
"நீங்க தான் சொன்னிங்க... "  என்றாள்

"நான் சொல்லவே இல்ல உங்களுக்கு எப்படி தெரியும் சொல்லுங்க"

"அட நிஜமா நீங்க தான் சொன்னிங்க"

விக்னேஷ் ஒரு முறை கண்மூடி யோசித்து பார்த்தான்... இல்லை இது வரை அவளுக்கு என்னோட பெயரை சொல்லவே இல்லை
தனக்கு முன் நிற்பது ஆவியா அல்லது அமானுஷ்ய பெண்ணா அல்லது தன்னை பற்றி எல்லாம் தெரிந்த ஒரு சாதாரண பெண்ணா என முதல் முதலில் சந்தேகம் வந்தது அவனுக்கு

"ஹலோ இங்க பாரு இனிமே மரியாதை இல்லை ஒழுங்கா சொல்லிடு " என்றான் கோபமாக...

"அட என்னங்க இப்படி கோப படறீங்க...
அடிக்கடி கத்தறீங்க"
சொல்லி விட்டு சிரித்தாள்..
பிறகு மெல்லிய இடைவேளை விட்டு குனிந்து ...பார்வையை மட்டும் உயர்த்தி சொன்னாள்.......

"ஆனா பாருங்க நீங்க என்ன கோப பட்டாலும் உங்க மேல எனக்கு கோபமே வரல "

"அப்போ வேற என்ன வருது"

"ஒரு ஆசை...ஒரு அன்பு" என்று சொன்னதை கேட்டு மேலும் அதிர்ந்தான் விக்னேஷ்...

"என்ன விளையாடுறீங்களா அந்த ஆர்டிகள்ல இருக்கிற மாதிரியே பேசி என்ன பயமுறுத்த பார்க்கறீங்களா"

"என் மனதில் பட்டது சொன்னேன் ... தவறு என்றால் மன்னிக்கவும்..... ஆமாம்.... ஏதோ ஆர்டிகள் னு சொன்னிங்களே என்னது அது"

"இங்கே வா" என்று அவளை அழைத்து கொண்டு சென்றவன் தனது லேப் டாப்பை ஆன் செய்து காட்டினான்...
அது....
 பேட்டரி கடைசி புள்ளியில் தவித்து விட்டு ஆப் ஆகி விட்டது..

அவள் இவனை பார்த்து சிரித்தாள்... எதற்காக என்று புரியவில்லை..

நீங்க சும்மா சும்மா ஏதோ சொல்றீங்க ... பொண்ணுங்களா முன் வந்து ஒரு ஆணை பிடிச்சிருக்குன்னு சொன்ன இதான் பிரச்னை... கண்டுக்க மாட்டீங்க ..உங்களுக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்டில் நம்பிக்கை இல்லையா?
நாங்க பிகு பண்ணா தான் பின்னாடி அலைவீங்க.... ஆனா நாம லவ் பண்றது அப்படி இருக்க போறதில்லை..."

"ஹெலோ என்னது லவ் ஆ... போதும் விளையாட்டு"

"அட போங்க சும்மா எதுகெடுத்தாலும் அதிர்ச்சி அடைஞ்சிக்கிட்டு " சொல்லி விட்டு அவள் அயாசமாக நடந்து வாங்கி வந்த ஆப்பிளை கத்தியை எடுத்து வெட்டினாள் ஒன்றை சாப்பிட்டு கொண்டு ஒன்றை இவனை நோக்கி நீட்டினாள்
இவன் மெதுவாக நடந்து சென்று

"உங்க சொந்த ஊரு எதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா" என்றான்

"எனக்கு வடக்கு ஊரு ராஜஸ்தான் பக்கம் ஆனால் பேமிலி இங்கே செட்டில்ட் நல்லா தமிழ் கத்துக்கிட்டேன்.."

"சரிதான் " என்றான் விக்னேஷ் ... தலையை உலுப்பி கொண்டான்...
நடப்பதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

"உன் மணிக்கட்டில் இந்த வெட்டு காயம் எப்படி வந்தது?"

"அது ...அது..."

தயங்குகிறாள் ....தயங்குகிறாள்...

"ஒரு முறை பேமிலி ப்ராபலதுல அப்படி பண்ணிக்கிட்டேன்"..

'இல்ல இன்ணைக்கு நைட் நீ அருத்துக்குட்டு சாக போற '  என கத்த நினைத்து அமைதியாக இருந்தான்..

'இவள் நம்மை போல மனித பிறவி யா இல்லையா ... இவள் பெண் தானா....'

விக்னேஷுக்கு அந்த விபரீத யோசனை வந்தது

ஆப்பிள் அரிவதற்காக வைத்திருந்த கத்தியை ஒரு முறை பார்த்தான்...
இவளை கத்தியால் ஒரே குத்தாக குத்தினால் என்ன?
சாதா மனுஷி போல இவள் உடலில் ரத்தம் இருக்கா இல்லையானு பார்த்துடலாமா...'

அந்த யோசனை அவனுக்குள் குடி கொண்ட போது திடீரென கீழே யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது..
இங்கே யார் வந்திருக்க முடியும்..என்ற குழப்பம் சூழ...
கீழே இறங்கி சென்று கதவை திறந்தான்..
அங்கே..
ஒரு நடுத்தர ஆள் நின்று இருந்தான்..

"சார் நான் மெக்கானிக் சார் அம்மா தான் போன் பண்ணி இங்க வர சொன்னார்கள்"

அவன் குரலில் ஒரு இயந்திர தனம் தெரிந்தது..
அவன் அணிந்திருந்த சட்டை பேன்டில் ஏதோ ஒரு வித்யாசமான விஷயம் இருந்தது என்ன என்பதை சரியாக உணர முடியவில்லை.

'தன் கூட இருக்கும் அந்த பெண் இதுவரை யாருக்கும் போன் செய்ய வில்லையே.. தன்னை சந்திக்கும் முன்பே போன் செய்து இந்த அட்ரெஸ்ஸை எப்படி கொடுக்க முடியும்'

"உள்ளே வா " என்றான் குரலில் குழப்பம்..

அவன் உள்ளே சென்று மாடி ஏறுவதை பார்த்தான்.

'இங்க வரவங்க எல்லாம் கரெக்டா மாடிக்கு போராங்களே'
அவனை பின் தொடர்ந்து ஏறிய விக்னேஷ் உன் பேரு என்னப்பா என்றான்.

"இமானுவேல்" என்றான் அவன்..

விக்னேஷ் அதிர்ச்சியில் படியில் அப்படியே நின்றான்..

மேலே சென்ற அவன் அந்த பபிதாவிடம் எதையோ கேட்பது தெரிந்தது அவர்களை நெருங்கினான்.
அவள்
தன் கார் சாவி அந்த அறையில் உள்ளது சென்று எடுத்துக்க சொல்லி சொன்னாள்..
அவன் அந்த அறையை நோக்கி சென்றான்..
அது....
அந்த ஆர்டிக்ள் இல் மெக்கானிக் தற்கொலை பண்ணி கொண்டதாக சொல்ல பட்ட அறை.

ஏதோ ஒரு குழப்பமான புதிர் வட்ட நிகழ்வில் தான் வந்து மாட்டி கொண்டதாக உணர்ந்தான் ..
ஏதோ தனக்கு சம்பந்தமற்ற ஒரு டைமண்ஷன் களின் நிகழ்வில் தான் மிக தற்செயலாக மாட்டி கொண்டோமா
இவர்கள் இருவரும் எந்த காலத்தை சேர்ந்தவர்கள்' அந்த மெக்கானிக் அணிந்திருந்த சட்டை காலர் மிக பெரிதாக இருந்தது நினைவுக்கு வந்தது.. அப்புறம் அவன் பேண்ட் .. அவன் உடை 20.. 30 ..ஆண்டுகளுக்கு முந்தைய பேஷனில் இருந்ததை உணர்ந்தான்.

'இவர்கள் இருவரும் யார்' விக்னேஷ் முதல் முதலாக பயத்தால் அணைக்க பட்டான்...

பால்கனி வழியே தூரத்தில் தெரிந்த நிலா இதுவரை பார்த்தில்லாத வகையில் ரத்த சிகப்பில் இருந்ததை கண்டு அதிர்ந்தான்..
இவ்வளவு சிகப்பாக ...ரத்தத்தில் முக்கி எடுத்ததை போல ஒரு நிலாவை அவன் வாழ்நாளில் பார்த்தது இல்லை..
முகத்தில் குப்பென்று வியர்த்து ஊற்றியது...
உள்ளே சென்ற மெக்கானிக் நீண்ட நேரம் வாராததை கவனித்தான்..
தன் பொறுமை மொத்தத்தையும் இழந்த விக்னேஷ் குழப்பமும் பயமும் சூழ...
அந்த கத்தியை கையில் எடுத்தான்..
இவள் மணிக்கட்டில் லைட்டாக ஒரு சீவு சீவினால் என்ன??

அந்த ஆப்பிளை அரிவதை போல பாவலாவில் இருட்டில் தற்செயலாக தடுமாறி அவள் மேல் விழுந்தவன் அவள் மணிக்கட்டில் ஒரு கிழி கிழிதான்..
என்னங்க இப்படி பண்ணிட்டீங்க மணிகட்டுல இந்த இடத்துல கீழித்தால் என்னாகும் தெரியுமா ? ஆளு செத்துடுவாங்க என்றாள் அவள் பதட்டமாக..
அவள் மணிக்கட்டில் ரத்தம் எட்டி பார்த்தது..
அதை பார்த்த விக்னேஷ் அதிர்ச்சியில் உச்சத்திற்கு சென்றான் காரணம்..
அது....
பச்சை நிறத்தில் இருந்தது.
     
                           * * * *

அந்த இரவின் நிசப்தத்தை கிழித்து கொண்டு தூரத்தில் ஒரு ஜந்து ஊளை இட்டது..
அதன் சப்தம் முதுகு தண்டில் ஐஸை வார்த்து.
இரவு பறவைகளின் நடமாட்டம் பால்கனி வழியே பார்க்க முடிந்தது..
வேறு இடத்தில் கொள்ளை அடித்த சேர்த்து வைத்த ஒளியை ராபின் ஹுட் போல பாரபட்சம் இன்றி பூமிக்கு இலவசமாக வாரி இரைத்து கொண்டிருந்தது நிலா.

விக்னேஷுக்கு இப்போது இதயம் வாய் வழியே வந்து விடும் போல இருந்தது
ஓடி சென்று தனது மொபைலை எடுத்தான் அதில் துளி கூட சிக்னல் இல்லை.
மெக்கானிக் சென்ற அறையை ஓடி சென்று எட்டி பார்த்தான்
அதில் ...
மெக்கானிக் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தான்..
அதிர்ந்து திரும்பியவன் அவளை பார்த்தான் அவள் தனது கையில் வந்த ரத்தத்தை கண்ணை மூடி கொண்டு ரசித்து உறிஞ்சி கொண்டு இருந்தாள்..
விக்னேஷ் தனது இதய துடிப்பை தானே கேட்க முடிந்தது....
அவள் பச்சை ரத்தம் சொட்டும் கைகளோடு பெட் ரூம் வரை தடுமாறி தடுமாறி சென்றாள்...
அங்கு ட்ராவில் .. அலமாரியில் ஏதோ தேடுவது தெரிந்தது....கட்டு போட துணியை தேடுகிறாள் போலும்.....
இவன் பார்ப்பதை அறிந்து இவனை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாள்...
அதில் ஏதோ பயங்கரம் இருந்தது.. பிறகு மெல்ல படுக்கையில் மயங்கி விழுந்து ........
'செத்துட்டாளா????'
அடுத்தது நீ தான் என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கை குரல் ஒலித்தது..

 துளியும் தாமதிக்காமல் படியை நோக்கி பாய்ந்தான்.
அவசரத்தில் .. பதட்டத்தில் .. இருட்டில்..
அவன் படியில் தடுமாறி விழுந்தான்..
அவனை மயக்கம் சூழ்ந்தது..
எழ முடியாத ஒரு நிலையில் கிடந்தான் விக்னேஷ்..

தனது முழங்கையில் ஏற்கனவே அடி பட்டிருந்த இடத்தில ரத்தம் வழிவதை கவனித்தான் .
அதை உற்று பார்த்த போது
அதுவும் பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதிர்ந்தான்..
அந்த கருப்பு பூனை அதை நக்கியது.
கனவா நினைவா என தெரியாத ஒரு நிலைக்கு சென்றான் விக்னேஷ்.

எவ்வளவு நேரம் அப்படி கிடந்தான் என்று சொல்ல முடியவில்லை....
நினைவா கனவா என்று சொல்ல முடியாத ஒரு காட்சியில் பபிதாவும் அந்த மெகாணிக்கும் தன் உடலில் கையை விட்டு தன் இதயத்தை எடுத்து அதை பந்து போல மாற்றி மாற்றி போட்டு விளையாடுவதை பார்த்தான்.
அவன் முழுதாக மயங்கும் முன் தன் வாழ்நாளில் அதிக பட்ச அதிர்ச்சியாக இதை நினைத்தான்.
பாவம் ....
அவனுக்கு தெரியாது......
இதன் பின் நடக்க போவது அவனை இன்னும் ஒரு சற்றும் எதிர் பாராத அதிர்ச்சியில் ஆழ்த்த போகிறது என்று............


தொடரும்......






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~







#மயக்கும் இரவு
#அத்தியாயம் 5 (மர்மம் விலகியது)

(எழுத்து : #ரா_பிரபு)

"கிங்க் கிங்க் கிங்க் கிங்க்"
அந்த தொடர்ச்சியான சப்தம் மண்டைக்குள் ரீங்காரம் இட்டது ...
"விக்னேஷ் "...எங்கோ பாதாளத்தில் ஒரு குறல் அழைத்தது....
பாபிதா குறலா ..இல்லை அந்த மெக்கானிக் குறலா... சரியாக சொல்ல முடியவில்லை...
நண்பன் மனோ குரல் போல கூட இருந்தது...

கிங்க் ..கிங்க் ..கிங்க் ..

பாபிதா தன் இதயத்தை எடுத்து வேடிக்கை பார்த்தாள் அதிலிருந்து பச்சை நிற ரத்தம் வழிந்தது ... அது வழிந்த இடத்தில தரையில் அந்த கருப்பு  பூனை அதை ரசித்து குடித்தது...
அந்த மெக்கானிக் அந்த பூனையை தடவி கொடுத்து கொண்டு இருந்தான்..

"உன் இதயம் எனக்கு சொந்தம் .ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன் "
என்றாள் பாபிதா...
சொல்லிவிட்டு பேய் தனமாக சிரித்தாள்..

"விக்னேஷ்.." மீண்டும் அந்த குரல்...
விக்னேஷ் மெதுவாக கண்ணை திறந்தான்...
பளிச்சென்ற வெளிச்சத்தில் கண் கூசியது பழக கொஞ்சம் நேரம் பிடித்தது....
பங்களா வில் இவ்வளவு வெளிச்சம் இல்லையே ...
குழப்பமாக தன்னை சுற்றி பார்த்தான் தான் ஒரு ஆஸ்பிடலில் இருந்ததை உணர்ந்தான் ..
அவசர அவசரமாக தன் நெஞ்சை தடவி பார்த்தான் இதயம் பத்திரமாக இருப்பதை பார்த்து ஆறுதல் அடைந்தான்..
கிங்க் ..கிங்க்.. கிங்க்
மானிடர்கள் ஒலி ..தொடர்ந்து பூச்சி சப்தம்  போல் கேட்ட வண்ணம் இருக்க தூரத்தில் ஒரு டிவி ஓடி கொண்டிருந்ததை அசுவரஷ்யமாய் கவனித்தான்...
அதில் உற்று பார்த்த போது அதில் காட்ட பட்ட அந்த இடம் என்கோ பார்த்ததை போல் இருப்பதாய் உணர்ந்தான்..
அட அந்த பங்களா...
அதை தொடர்ந்து பார்த்த போது இரவு பங்களாவில் நடந்த அனைத்தும் ஒளி பரப்ப பட்டு கொண்டிருபதை கண்டு அதிர்ந்தான்...
எண்ணயா நடக்குது இங்க...

"விக்னேஷ் " மனோவின் அந்த குரல் கேட்டது கொஞ்சம் நிமிர்ந்த போது தலை மாட்டில்  மனோ நின்றிருந்தது தெரிந்தது..

"கண் விழுச்சிட்டியா...  டேய் சாரி டா என்றான்"..

"வாட் மேன்.. ஹீரோ கண் முளிச்சுது?"
அட இந்த குரல்...
பின்னால் நிற்பது .....
ஹிந்தி வாலா ஜிதேந்தர்..

" எழுந்திரி மேன் .. இப்போ நீ சின்ன திரை சூப்பர் ஸ்டார் தெரியுமா " என்றார் ஜிதேந்தர்...

அவன் குழப்பமாக பார்க்க ..

"ஓகே ஓகே மச்சி நான் தெளிவா சொல்லிட்ரன்...
கொஞ்ச நாளா நாம எடுக்கற சீரியல் எடுத்த ப்ரோக்ராம் எல்லாமே மொக்கை ..அது உனக்கே தெரியும்..
வானவில் டிவி யோட T R P  ரேட்டிங் அதல பாதாளம்..
அதை கட்டி காக்க நாம பண்ண லைவ் ப்ரோக்ராம்...
காண்டிட் கேமரா.. ஏதும் பலனளிக்காம நாம ரெண்டு பேரும் டெய்லி ஹிந்திலயும் தமிழ்லயும் கலந்து கட்டி வாங்கின திட்டுகள் ஒரு டன் வெய்ட் தேறும்...
அப்போதான் எனக்கு அந்த ஐடியா வந்துச்சி... ஒரு பேய் ப்ரோக்ராம் பண்ணா...என்ன..?
நாம வழக்கமா பண்ற கேண்டிட் கேமரா புரோகிராம் தான்..கொஞ்சம் வித்தியாசமா பண்ணா என்ன?

ஒளித்து வைக்க பட்ட கேமராக்களில் பேயிடம் மாட்டிய அல்லது அப்படி நம்ப வைக்க பட்ட ஒருவனின் நடவடிக்கைகளை ஷூட் செய்தால் எப்படி இருக்கும்...
அதை நம்ம டிவி ல வேலை செய்றவன வச்சி செஞ்சா எப்படி இருக்கும்..
நீ ஒரு சாகச விரும்பினு தெரியும் அதான் உன்ன எப்பவோ கட்டி சும்மா இருக்கிற என்னோட தாத்தா பங்களாவை வைத்து ஒரு பேய் கதை சொன்னேன்..
நீ நம்பணும்னு ஒரு வெப்சைட்ல அது பத்தி ஆர்டிகள் எழுத்தினேன்...
நீ எப்ப வேணா கிளம்புவனு உன்னை கண்காணிச்சிகிட்டே இருந்தேன்..

அப்புறம்..
பாபிதா ..இமானுவேல் ..னு ரெண்டு  ட்ரெயின்ட் ஆர்டிஸ்ட்.. என்னிடம் சான்ஸ் கேட்டு வந்தவங்க ...
அவங்கள நிஜ வாழ்க்கைல நடிக்க சொல்லி பேய் நாடகம் போட்டேன்...
கொஞ்சம் கிறு கிறுப்பை கூட்டுவதற்கு பபிதா உனக்கு கொடுத்த காப்பியில் 'அமிட்லு' னு ஒரு ரஷ்ய போதை பொருளை கலந்தேன்...
வெளிநாடுகளில் இப்போ அதான் பேமஸ்...
அதன் விசேஷம் அதை உட்கொண்டால்
நமது மூலையில் நிறத்தை உணரும் நரம்புகளை குழப்பி நிறத்தை மாற்றி காண்பிக்க கூடியது ..
வெள்ளை நிறம் ரத்த சிகப்பாக தெரியும்..
சிகப்பு ரத்தத்தை பார்த்தால் பச்சையாக தெரியும்.
பிறகு உன்னோடய ஒவொரு நடவடிக்கையும் ஷூட் பண்ணோம்..
ஆனா நீ கத்தியெல்லாம் எடுத்து கீறி...
படிக்கட்டில் உருண்டு விழுந்து இந்தளவு ஆகும்னு நினைக்கல டா ..
ஐ ஏம் எக்ஸ்ட்ரிம்லி சாரி மச்சான்.."
என்று சொல்லி நிறுத்தினான்..
இபோது
ஜிதேந்தர் தொடர்ந்தார்..

"பட் உன்னோட ப்ரோக்ராம் சூப்பர் ஹிட் பையா.....
அதை "மயக்கும் இரவு"னு டைட்டில் கொடுத்து... உன் பிரண்டு மனோதான் போட்டிச்சு....
T R P ஏகத்துக்கு ஏறி போச்சு பையா..
உனக்கு இன்க்ரிமெண்ட் உண்டு" என்றார்..

"ஏன்யா இதுக்கெல்லாம் என் உயிர் தான் கிடைச்சுதா "

என கோபமாக நிமிர்ந்து உட்கார்ந்தான் உடல் டயர்ட் ஆக இருந்தததுஉணர்ந்தான்..

"என்ன சார் டயார்ட் ஆ இருக்கீங்களா "
என்ற குரல் கேட்டது..
பின்னால் திரும்பி பார்த்தான்..
பபிதா நின்றிருந்தாள்...அவள் பின்னால் அந்த மெக்கானிக்..

"வெயிட் பண்ணுங்க நான் வேணா ஒரு காபி போட்டு கொண்டு வரன்" என்றாள்.

அதை கேட்டு விக்னேஷ் சிரிக்க எல்லோரும் சிரிப்பில் கலந்து கொண்டார்கள்..

"மச்சி 'மயக்கும் இரவு 'சீசன் 2 ரெடி ...
பாஸ் சொல்லிட்டாரு...
இந்த வாட்டி செட்டப் லாம் கிடையாது...
நிஜமாக பேய் உலவரதா சொல்ற இடத்துக்கு போய் நைட் தங்கி இருந்து ஷூட் பன்றோம்...ரெண்டு பேரும் ...
அங்க என்ன நடக்குதுன்னு காட்டறோம்..
அதான் சீசன் 2 ...
ஓகே வா"

அவன் குரலில் உற்சாகம் இருந்தது...

'மயக்கும் இரவு ....சீசன் 2 .....'

வானவில் தொலைக்காட்சியில் தொடரும்....

இங்கே.....

 "முற்றும்"


அன்பு நண்பன் அறிவியல் காதலன் : ரா.பிரபு








Comments

  1. Kalakureenga poanga... Aanaal, intha murai twist guess pannittaen...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"