"மீண்டும் ஒரு துரோக வரலாறு"
"மீண்டும் ஒரு துரோக வரலாறு"
(கருத்தும் எழுத்தும்: ரா.பிரபு)
"தீ ....
தன் எதிரிகளை எரித்து சாம்பல் ஆக்கி விட்டது" என்ற தகவளோடு அடுத்த கட்டுரையை நான் தொடங்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்."
என்று நான் கடைசியாக ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் "தீ தன்னை சார்ந்தவர்களையே எரித்து சாம்பலாக்கி உள்ளது "
என்று அல்லவா நான் எழுத தொடங்க வேண்டி இருக்கிறது.
அதை எரித்தது வேறு யாரும் இல்லை நம்ம காவல் துறை என்பதை அல்லவா நான் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
எட்டு நாள் ......
கொட்டி செல்லும் பணி, சுட்டு செல்லும் சூரியன் இரண்டையும் எதிர் கொண்டு அலையின் சத்தத்தை கோஷத்தாலும் அலையின் விடாமுயற்சியை போராட்டதாலும் முறியடித்து ..
மக்களை மலைக்க வைத்து அரசை அசரவைத்து உலகை உற்று பார்க்க வைத்து போராடிய இளைஞர்களின் இலக்காண அந்த நிரந்தர ஜல்லிக்கட்டு மசோதா, 23 மாலை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய போது...
அதை கொண்டாட யாரும் இல்லாமல் போன பரிதாபத்தை என்னவென்பது.?
காரணம் அன்று அதிகாலையே...வெண்ணை திரண்டு வரும் போது பானை உடைந்து விட்டிருந்தது.
அந்த உடைந்த பானை தன் ஓட்டை வழியே பல சந்தேகத்தை ஒழுக விட்டிருக்கிறது.
அந்த மசோதா மாலை நிறைவேறுவது இவ்வளவு நிச்சயம் எனும் போது அதை முடித்துவிட்டு வெற்றியோடு சென்று போராட்டத்தை முடித்து இருக்கலாமே.
இனிப்புடன் சென்று இனிமையாக போராட்டத்தை தட்டி கொடுத்து முடித்து வைத்திருக்கலாமே...
அந்த 'அதிகாலை அவசரம் 'ஏன்?
அந்த அவசரத்தை சற்று கவனியுங்கள்..
அதிகாலை கலைந்து போக சொல்லி ஒலிபெருக்கியில் காவல் துறை அறிவித்ததும். தங்களுக்கு அரை நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்கிறது போராட்ட குழு அதற்கு காவல் துறை செவி சாய்க்க மறுக்கிறது.
பிறகு தங்களுக்குள்ளாக பேசி விட்டு...
"4 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்..
இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்ந்திருக்கிறோம் திடு திப்பென்று களைந்து போக சொன்னா எப்படி? நாஙக எங்க வக்கீல் உடன் பேச வேண்டும் மற்றும் மற்ற ஊர் போராளிகளுடன் ஆலோசிக்க வேண்டும். "
என்ற கோரிக்கையையும் காவல் துறை மறுக்கிறது..
பிறகு வெறும் 2 மணி நேரம் கொடுங்கள் என்று கேட்டு பார்க்க 2 நிமிட அவகாசம் கூட கொடுக்காமல் போராட்டத்தை கலைக்கிறது .
அப்படி அவர்களை அவகாசம் இன்றி கலைக்க வேண்டிய அவசியம் என்ன? அப்போ எப்படி பட்ட உத்தரவு உங்களுக்கு தர பட்டு இருக்கிறது.?
"அவகாசம் கொடுத்தால் பேசிவிட்டு நாங்கள் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்" என்று சொன்னவர்களுக்கு நீங்கள் இடம் கொடுகாதது ஏன்?
இது நடந்து கொண்டிருக்கும் போதே மீடியா
" போராட்டத்தை அவர்களாக வாபஸ் பெற்றார்கள் " என்று அறிவித்து கொண்டிருந்தது.
அப்படி அறிவிக்கவேண்டிய தேவை என்ன உங்களுக்கும் அதே அவசரம் இருக்கிறதே ஏன் அப்படி?
அதனை தொடர்ந்து சில பேர் கடலில் இறங்க போவதாக சொல்ல போலீஸ் செய்வது அறியாமல் தயங்கி அங்கேயே நிற்கிறது....
இதனை தொடர்ந்து நடந்தது எல்லாமே பேர் அதிர்ச்சி...
கடந்த ஒரு வாரமாக உலகமே நமது போராட்டத்தை புகழ்ந்து தள்ளி கொண்டிருந்ததற்கு திருஸ்டி பட்டதை போல கலவரம் வெடிக்கிறது.
போலீஸ் தடியடி கல்வீச்சில் ஈடுபடுகிறது.
புகை குண்டை வீசுகிறது.
ஆங்காங்கே வாகனங்கள் தீ வைத்து கொளுத்த படுகின்றன .
திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் தீ வைக்க படுகிறது.
ஒருவர் இறந்து விட்டதாக ஒரு பெண்மணி கர்ப்பம் கலைந்து விட்டதாக வதந்தியா உண்மையா என்று தெரியாத தகவல் வருகிறது.
மெரினா செல்லும் 8 வழியை போலீஸ் அடைகிறது.
அதை மீறி கடல் மார்க்கமாக மாணவர்கள் மெரினா சென்று இறங்கு கிறார்கள்.
அதன் பின் ஆங்காங்கே நடந்த நிகழ்வுகளை சில பேர் படம் பிடித்து முகநூல் மற்றும் பகிறியில் விட்ட சில வீடியோ வை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
காரணம் அதில் கலவரம் செய்தது வேறு யாரும் அல்ல அது காவல் துறையே தான் என்பது தெரிகிறது.
ஒரு காவலர் எரியும் காகிதத்தை எடுத்து வந்து ஆட்டோவை கொளுத்துகிறார்.
ஒருவர் வீட்டு அருகில் நிற்கும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைக்கிறார்.
ஒருவர் கையில் கல்லோடு கலவரத்துக்கு தயராவதை நிருபர் வீடியோ எடுக்கிறார் அதை பார்த்த காவலர் ஓடி வந்து இவரை தாக்குகிறார்.
ஒருவர் கீழே கிடக்கும் பைக்கை அடித்து நொறுக்குகிறார்.
ஒருவர் ஒரு பெண்ணை போட்டு அடித்து நொறுக்குகிறார்.
ஒரு இளைஞர் தான் வீட்டில் இருக்கும் போது காவலர்கள் வந்து அடித்துவிட்டதாக உடலெங்கும் காயத்துடன் பேசுகிறார்.
ஒரு கர்ப்பிணி பெண் தன்னை கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்கியதாக சொல்கிறாள்
ஒரு கும்பல் தேசிய கீதம் பாடுவதை சட்டை பண்ணாமல் காவல் துறை கும்பலை அடித்து தூக்கி செல்கிறது.
மெரினாவில் கீழே வீழ்த்தி சட்டையை கிழித்து ..ஏதோ தீவிரவாதியை பிடிப்பதை போல பிடிக்கிறார்கள் காவலர்கள்.
ஒரு மீனவ நடுத்தர வயது பெண்மணி தன் நெஞ்சில் அடித்து கொண்டு "ஐயோ எம்மக்கள் சாவறாங்களே " என்று கதறி அழுகிறாள்.
ஒரு மீனவர் இரண்டு கைகளிலும் செருப்பை மாட்டி கொண்டு தன் தலையில் பட் பட்டென அடித்து கொண்டு..
" வாங்க டா வந்து என்ன அடிச்சிக்கோங்கடா " என்று கதறுகிறார்.
குடோனில் ஒளிந்து கொண்டு தங்களை காவலர்கள் தாக்குகிறார்கள் என்று ஒரு 10 இளைஞர்கள் பேசி அனுப்புகிறார்கள்.
ஒருவர் முகத்தில் ஒழுகும் ரத்ததோடு பேட்டி கொடுக்கிறார்.
ஒருவர் மயங்கி விட்டாரா இல்லை இறந்து விட்டாரா என்ற சொல்ல முடியாத நிலையில் துவண்டு போய் இருக்க அவரை போலீஸ் காரில் தூக்கி போடுகிறார்.
வடபழனியில் துப்பாக்கி சுடுவதாக காட்டுகிறார்கள்.
போராட்டகாரர்களை அடித்து உணவு பொட்டலங்களை பறித்து போலீஸ் உண்ணுகிறது
வீதியில் மக்களை கண்மூடி தனமாக தாக்குவதை மொட்டை மாடியில் இருந்து ஒருவர் படமெடுத்து அனுப்புகிறார்...
இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காட்சிகள் நீண்டு கொண்டே போகிறது.(பதிவானது இவ்வளவு இன்னும் ஆகாதது எவ்வளவோ)
இதனை நாளாய் ஒரு சைக்கிளை கூட எரிக்காமல் போராடி கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.
போக்குவரத்துக்கு கூட இடைஞ்சல் செய்யாமல் 40 லட்சம் பேர் போராடினார்கள்.
தான் சாப்பிட்டு போட்ட குப்பைகளை கூட சுத்தம் செய்த படி மிகுந்த ஒழுக்கத்தோடு போராடினார்கள்.
தன்னை மெரினாவில் கைது செய்ய வந்த போது காலில் விழுந்தும் கடலில் வீழ்ந்தும் தான் போராடினார்களே தவிர யாரையும் எதிர்க்க வில்லை.
அப்படி இருக்கும் போது அவர்கள் மேல் இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டிய காரணம் என்ன ?
இவ்வளவு நாள் தானே ஆதரவு அளிப்பதாக சொன்ன காவல் துறை இன்று குழந்தைகள் பெண்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அடித்தது நொறுங்கியது ஏன்?
இவளவு நாள் வரலாற்று போராட்டத்தை லைவ்வில் காட்டாத அந்த இரண்டு பெரும்
கட்சி தொலைக்காட்சிகள் இன்று அணைத்து கலவரத்தையும் லைவில் காட்டியது ஏன்?
கலவரமே நோக்கமாக பின்னணியில் செயல்பட்டது யார்? ஏன்?
இவ்வளவு நாள் இணைந்து போராடிய ஹிப் ஹாப் தமிழா .சேனாதிபதி ஆர். ஜே பாலாஜி இவர்கள் திடீரென பின் வாங்கிய பின்னணி என்ன.?
எங்கே டா இவர்களை வெற்றி வீரனாக பாராட்டி மசோதாவை கையில் கொடுத்தால் இவன் திமிராக உடனே அடுத்ததாக விவசாயம் ..காவேரி ..லஞ்சம் ஊழல் என்று கையில் எடுப்பான் என்பதால் கலவரம் செய்து அதன் பின் மசோதாவை நிறைவேற்றினீர்களா?
அல்லது ஜனவரி 26 கு உங்களுக்கு மெரினா தேவை படுவதால் மத்தியில் இருந்து வந்த அழுத்தமா?
ஆட்சியை கெடுக்க இதர சக்திகள் செய்த கலவர சதியா?
தேச துரோக சக்தி இதை தூண்டியதா.?
15 நாள் தொடர்ந்து முடிவு இல்லாமல் ஒரு நாட்டில் போராட்டம் நடந்தால் அந்த ஆட்சி களையும் என்ற சட்டத்திட்டத்திற்கு பயந்து போனீர்களா?
உங்களுடைய எந்த போதைக்கு மாணவர்களை ஊறுகாய் ஆக்கி கொண்டீர்கள்.??
இதையெல்லாம் விட தலையாய கேள்வி ஒன்று உண்டு...
மாநில அரசு சட்டமன்றத்தில் கூடி இந்த சட்டத்தை நிறைவெற்றி விட முடியும் அந்த அதிகாரம் இதற்கு இருக்கிறது எனும் போது அதை 3 வருடமாக செய்யாமல் விட்டது ஏன்?
தமிழன் எதிரியால் அல்ல எப்போதும் துரோகத்தால் தான் வீழ்த்த படுகிறான் என்ற வரலாறை மீண்டும் எழுதிய துரோகி யார்?
ஆயிரம் ஆண்டு கலாச்சார அழிவை உடல் பொருள் ஆவி கொடுத்து போராடி மீட்டு தந்தவனை .... ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை கையில் எடுத்து செய்து முடித்தவனை... நீங்கள் கோவில் கட்டி கொண்டாட வேண்டாமா?
அவனுடைய போராட்டத்திற்கு அவனுடைய தியாகத்திற்கு நீங்கள் தரும் மரியாதை இது தானா?
சுதந்திர போராட்டம் போல புனித போராட்டம் நடத்தி காட்டியவன் மண்டையை உடைத்ததில் உங்களுக்கு மனசாட்சி உறுத்த வில்லையா?
என்ன காரணமோ ..என்ன அரசியலோ என்ன சதிவேலையோ ..பின்னணி என்னவாக இருந்து தொலைக்கட்டும்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
ஊதி அணைத்து விட தீ குச்சியாய் இன்று அவன் இல்லை இன்று அவன் பெரும் நெருப்பாய் சூரியனாய் மாறி நிற்கிறான்.
அவனுக்குள் இருக்கும் லட்சிய வெறியை உலகமே பார்த்து விட்டது.
இனி அவனை ஆயிரம் கலவரம் செய்தும் உங்களால் தடுக்க முடியாது.
நீங்கள் செய்த துரோகத்துக்கு அவனிடம் கைகட்டி பதில் சொல்லும் நாள் ஒரு நாள் நிச்சயம் வரும்.
இனி வரலாறு ஒரு போதும் முன் போல இருக்க போவது இல்லை.
போராடிய அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..வணக்கங்கள்.
நன்றி.
_ரா.பிரபு_
Comments
Post a Comment