"முழுமை எனும் உண்மை" (full part)



முழுமை எனும் உண்மை (பாகம் 1)

அறிவியல் காதலன்...

கருத்தும்,எழுத்தும் (ரா.பிரபு)

இம்முறை நான் எழுதி இருப்பது எனது வழக்கமான கட்டுரைகளில் இருந்து  சற்று மாறு பட்ட கட்டுரை.
இதை நான் எழுத காரணம் இருக்கிறது ..அதை கட்டுரை முடிவில் சொல்கிறேன்.

இன்றைக்கு அறிவியலை பற்றி பார்க்கப்போவது இல்லை மாறாக அறிவியலை பற்றிய அறிவியலை பார்க்க போகிறோம்..

அறிவியலை கொண்டு கடவுளை விளக்க முடியுமா..?
முடியாது என்பதை உடனே சொல்லி விடலாம். அல்லது பல சோதனைக்கு பின் கடவுள் இல்லை என்ற முடிவை பொறுமையாக சொல்ல வேண்டி வரும்.
காரணம் ,ஒன்றை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் அது ஆதாரப்பூர்வமான... அல்லது ஆய்வு மூலம் தெரிந்து கொள்ள கூடிய ..பரிசோதனை முடிவுகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.. கடவுளுக்கு அந்த தகுதி இல்லை...
சரி அந்த ஆளு ரொம்ப சர்ச்சை கூறியவர் என்பதால் அவரை விட்டு விடுவோம்...

நம்மால் அன்றாடம் பயன்படுத்த கூடிய நாம் சாதாரணமாக காண கூடிய எல்லா வற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா...பல விஷயங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் சில விளைவுகளை கொண்டு புரிந்து கொள்கிறோம் உதாரணமாக மின்சாரத்தை ஒரு போதும் உங்களால் பார்க்க முடியாது .
 மின்சாரத்தை கொண்டு இயங்கும் விளக்கு வெளியிடும் வெளிச்சத்தை பார்க்கலாம்.. ஆனால் மின்சாரத்தை அல்ல... மின்சாரம் பாயும் கம்பியும் பாயாத கம்பியும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும்..
ஆனால் எலக்ட்ரான் களின் ஓட்டம் தான் மின்னோட்டம் என்பதை அறிந்த நீங்கள் கொஞ்சம் புத்திசாலி தனமாக அந்த கம்பியை எலக்ட்ரான் நுண்நோக்கி கொண்டு ஆராய்ந்து பார்த்தால் அதில் எலக்ட்ரான் களின் ஓட்டத்தை பார்க்கலாம்..." அதானே மின்னோட்டம்" என நீங்கள் மின்சாரத்தை பார்த்ததாக சந்தோஷ படலாம் ஆனால் நினைவிருக்கட்டும் அதுவும் மின்சாரத்தின் விளைவுதான் அது மின்சாரம் அல்ல..

மின்சாரம், காற்று போன்ற வற்றை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அதை நாம் ஆதார பூர்வமாக உணரவாவது முடிகிறது...
அனால் நாம் சோதனையை செய்து பார்த்து விட்டால் ஒரு உண்மையை மிக அறுதியாக சொல்லி விட முடியுமா என்றால் முடியாது... உதாரணமாக நீங்கள் பாட புத்தகத்தில் விலங்கியலில் வைரசை பற்றி படித்திருக்கலாம் .. ஆனால் கூடவே தாவரவியலிலும் அதை படித்திருப்பது நினைவு இருக்கலாம் அதற்கு காரணம் அதை எந்த 'கேட்டகிரி ' யில் சேர்ப்பது என அறிவியலாலர்களுக்கு அறுதியாக சொல்ல முடியவில்லை .
இனப்பெருக்கம் செய்வது..இடப்பெயர்ச்சி செய்வது போன்ற காரணத்தால் இதை விலங்கியளில் சேர்க்கலாம் என பார்த்தால் சூரியனிடம் இருந்து நேரடியாக ஆற்றலை உறிஞ்சி உணவு தயாரிப்பதால் வேறு வழி இல்லாமல் தாவரவியலிலும் சேர்க்க வேண்டி உள்ளது..

பொதுவாக இவைகள் தனியாக இயங்காது இவைகளுக்கு இயங்க ஒரு உயிரினம் தேவை என்பதால் தாவர வைரஸ் விலங்கு வைரஸ் என தனியாக உள்ளது..
சரி ஒரு உயிர் என்றால் அதற்கு வயசு ஆக ஆக முதுமை வரும் பின் கண்டிப்பாக மரணமும் வரும் இதுதானே பொது விதி ஆனால் சில நுண்ணுயிரிகளுக்கு  முதுமையும் இல்லை சொல்ல போனால் மரணமும் இல்லை..
வயதான உடன் அவை இரண்டாக பிரிந்து இன்னும் இளமையாகின்றன..

கிரியாஜேனிக் முறைப்படி ஒரு மீனை பதப்படுத்தி வைத்தால் பல நாள் வைத்திருந்து அதை நீரில் விட்டால் உயிர் வந்து நீந்தும் என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள்.
ஆனால் ஒருவேளை அந்த மீனின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக இருந்து நீங்கள் அதை 50 ஆண்டுகளாக பத படுத்தி வைத்தால் அவைகள் வாழுமா... கண்டிப்பாக முடியாது அல்லவா...அனால் வைரசை நீங்கள் படிகமாக்கி பத்தப்படுத்தலாம் மற்ற எந்த உடலிலும் புகாத வரை முற்றிலும் செயலிழந்து காண படும் வைரஸ் ஐ நீங்கள் 300 ஆண்டுகள் பத படுத்தி வைத்திருந்து அதன் பின் வேறு உடலில் கொண்டு போய் விட்டால் அவை முன் போல இயங்க தொடங்கும் என்றால் என்ன சொல்வது..

இப்படி சில நுண்உயிரிகள் இவைகளை உயிர் என்றே அறுதி யிட்டு சொல்ல முடியாது. உயிர் உள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடையில் உள்ளவை இவை.. இருந்தாலும் ... இவைகளையும் நம்மால் எதோ ஒரு வகையில் புரிந்து கொள்ள முடிகிறது..

ஆனால் ..

மனித மூளையால் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாத அதன் கற்பனை சக்திக்கும் அப்பாற் பட்ட ஒன்றை எப்படி புரிந்து கொள்வது? அதை பற்றி நாம் புரிந்து கொள்வது எல்லாம் என்ன வென்றால் நம்மால் அதை புரிந்து கொள்ள முடியாது என்பது தான். உதாரணமாக வானம்...
அதில் தூரம் தூரம் இன்னும் தூரமாக சென்று கொண்டே இருந்தால் என்ன வரும்? இன்னும் வானம்... சரி அதை கடந்து சென்றால்? பல ஒளியாண்டு தாண்டியச்சு அதன் பின் என்ன....நாம் இதுவரை அறிந்த தூரம் 1500 கோடி ஒளியாண்டு என்று சொல்லலாம் காரணம் பிக் பாங் உண்டான கால கட்டம் 1500 கோடி ஆண்டுக்கு முன் தான்.. சரி அந்த தூரத்தை கடந்து விட்டால் அதன் பின் இருப்பது என்ன என்று சிந்தித்தால் ... அல்லது பிக் பாங் கு முன் என்ன இருந்தது என சிந்தித்தால். அல்லது பிரபஞ்சம் மொத்தம் அழிந்த பின் என்ன இருக்கும் என சிந்தித்தால்... நம் மனம் சாரி ஓவர் லிமிட் என கையை விரித்து விடுகிறது... அதற்கு அப்பால் சிந்திப்பதை கற்பனையாக கூட செய்ய முடியாத அளவு மனதின் சக்தி குறைப்பட்டு உள்ளது..

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் சாதாரணமாக விட்டு விடுபவன் அல்ல மனிதன். அதனால் இந்த பிரச்சனையை அவன் வேறு கோணத்தில் அணுகினான் .அதாவது ஒரு கோளாறான ரேடியோவை நீங்கள் சரி செய்ய கடையில் கொண்டு போய் கொடுக்காமல் நீங்களாகவே பாட வைக்க முயற்சிக்கிறீர்கள் .. கடைசி வரை அதை உங்களால் பாட வைக்க முடியவில்லை. அந்த அளவு உங்களுக்கு போதிய தொழில் நுட்ப அறிவு இல்லை ..இப்போது நீங்கள் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்... பாட வைக்க முடியவில்லை என்றால் பரவா இல்ல இது ஏன் பாடவில்லைன்னு காரணத்தையாவது கண்டு பிடிக்கலாம் என முடிவு செய்கிறீர்கள். அப்படி இப்படி அதை நோண்டி.. அதில் ஒரு I.C தான் பிரச்னை என கண்டு கொள்கிறீர்கள்..
இப்போது ஒன்றை கவனித்தால் எப்போது நீங்கள் பிரச்சனையை கண்டுபிடித்து விட்டீர்களோ அப்போதே என்றாவது ஒரு நாள் பிரச்சனையை நீங்கள் சரி செய்யும் சாத்திய கூறு அதிகமாகி விட்டது...

இந்த ரீதியில் பார்க்கும் போது பிரபஞ்ச உண்மைகளை மனிதனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை அது ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையாவது புரிந்து கொள்வோம் என்கிற ரீதியில் யோசித்து பார்த்த மனிதன் தன்னால் புரிந்து கொள்ள முடியாத காரணத்தை.... அந்த உண்மையை கண்டு பிடித்தான்...
அந்த உண்மையின் பெயர் ....

"முழுமை..."

அது என்ன எப்படி  என்பதை விளக்குகிறேன்.
மனித மனதின் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறதே அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?. 
ஒவொன்றையும் ஒப்பிட்டு பார்த்து மட்டும் தான் அதால புரிந்து கொள்ள முடியும் ஒப்பீடு அல்லாத முழுமையான ஒன்றை அதால புரிந்து கொள்ள முடியாது..
எப்படி என்றால் ஒரு உதாரணத்திற்கு வைத்து கொள்வோம்.. இந்த பிரபஞ்சம் திடீரென மஞ்சளாக மாறிவிட்டது... நல்லா மங்கள கரமா....

மஞ்சள்னா உங்க வீட்டு எங்க மஞ்சள் அல்ல... சும்மா கண்ணனுக்கு தெரியாத dna அல்லது அணு அல்லது வைரஸ் தொடங்கி.. சப் அட்டமிக் ...இலிருந்து...மொத்த அண்டவெளி வரை எல்லாமே மஞ்சளாக மாறி விட்டது .. பிரபஞ்சத்தில் ஒரு துளி மிச்சம் இல்லாமல்..... இப்படி ஒரு பிரபஞ்சத்தில் பிறந்து வளர்கிறார் உங்கள் நண்பர் என்று வைத்து கொள்ளுங்கள்.
இப்போது நான் உங்கள் நண்பருக்கு மஞ்சள் என்றால் என்ன என்பதை புரிய வையுங்கள் என்கிறேன் என வைத்து கொள்ளுங்கள்... அவருக்கு நீங்கள் எப்படி புரியவைப்பீர்கள் சற்று யோசித்து பாருங்கள்... இதோ இருக்கே பா இதான் மஞ்சள்...என நீங்கள் விளக்க விளக்க அவன் எங்கே என தேடி கொண்டே இருப்பான் அவனால் அதை கடைசிவரை புரிந்து கொள்ளவே முடியாது... மஞ்சளை புரிந்து கொள்ள மஞ்சள் அல்லாத ஒன்று வேண்டும்...

ஒரு துளி  ...ஒரே ஒரு துளி....
ஒரே ஒரு குண்டூசி முனை அளவு சிகப்பு நிறம் கிடைத்து விட்டால் போதும் அதை காட்டி இதோ பார் இதன் பெயர் சிகப்பு இது அல்லாத மற்ற எல்லாம் தான் மஞ்சள் என்றால் அவன் புரிந்து கொள்வான்..இப்படி தான் உலகம் முழுவதையும் நாம் புரிந்து கொள்கிறோம்..

நல்லவன் என்பதை புரிந்து கொள்ள கெட்டவன் தேவை... யோசித்து பாருங்கள் உலகத்தில் எல்லோருமே நல்லவர் என்றால் நல்லவன் என்பதற்கான அர்த்தத்தை உங்களால் உள்வாங்க முடியுமா...? பெரிது என்பதை புரிந்து கொள்ள சிறிது தேவை.. அழகை புரிந்து கொள்ள அசிங்கம் தேவை... வெப்பம் புரிந்து கொள்ள குளிர்ச்சி தேவை...இப்படி ஒப்பிட முடியாத முழுமையாக இருக்கும் எதுமே ..நம் மனதிற்கு அப்பாற்பட்டது..

தன்னை உணர்தல் என்ற உண்மையான ஆன்மீகத்தை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் தனக்குள் என்ன இருக்கிறது என்பதை தேடி போனவர்கள் ...அதாவது உண்மையை தேடி போனவர்கள் அந்த உண்மை ஒரு முழுமையாக இருப்பதை உணர்ந்தார்கள்..அந்த உண்மை என்பதை பற்றி சிந்திக்கவோ விளக்கவோ முடியாது என உணர்ந்தார்கள்... ஆனால் முழுமையுடன் ஒன்றிணைய முடியும் என்பதை கண்டார்கள்.
அப்படி ஒன்றிணைந்தவர்களை பற்றி... ஆன்மீகத்தை... பிரபஞ்ச உண்மையை.. தனக்குள் என்ன இருக்கிறது என்பதை தேடிய சில பேரை பற்றி ..அவ்வப்போது நான் கொஞ்சம் பேச இருக்கிறேன் என்பதால் தான் அதன் முன்னுறையாக இந்த கட்டுரையை கொடுத்தேன்...
அறிவியலை கொண்டு... எவ்வளவோ ஆராய்ந்துடோம்... ஆன்மீகத்தை அறிவியல் கொண்டு ஆராய்ந்தால் எப்படி இருக்கும்...
இனி போக போக அதை பார்க்கலாம்..

தொடரும்.....




முழுமை எனும் உண்மை (பாகம் 2)
ஆன்மீகத்தின் அறிவியல் அலசல்

கருத்தும்,எழுத்தும்(ரா_பிரபு)

நாம் பார்க்கும் உலகை மாயை என்கிறார்களே அதை  அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா?
சொல்கிறேன் ...
தொடர்ந்து படியுங்கள்..

 அப்பாலுக்கு அப்பால் பிரபஞ்சத்தில் என்ன உள்ளது என்பதை எட்டி பார்க்கும் போது மனிதனால் ஒரு கட்டத்துக்கு மேல் விஷயங்களை கற்பனையில் கூட  புரிந்து கொள்ள முடியவில்லை உண்மையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் அது முழுமையாக இருப்பது தான் என்பதை போன கட்டுரையில் நான் விளக்கி இருந்தேன்.

சரி நமது புரிதல் எல்லைக்கு உட்பட்டு நாம் புரிந்து கொண்ட அனைத்தும் அறுதியிட்டு உண்மை என சொல்ல முடியுமா..என்றால்.. முடியாது..

எனது ஐன்ஸ்டைன் கட்டுரைகளில் ஆரம்பத்தில் சொன்னதை போல பல உண்மைகளை நாம் உண்மை என சொன்னாலும் அது நமது கண்ணோட்டத்தில் மட்டும் தான் உண்மை..
 அது உண்மையான உண்மை அல்ல.. உதாரணமாக ஒரு இருட்டை பார்த்து நாம் இது இருட்டு என முத்திரை குத்துகிறோம் .ஆனால் அது நமக்கு மட்டும் தான் இருட்டு அக சிவப்பு பார்வை கொண்ட பாம்பு மற்றும் முதலை போன்ற உயிரினங்களுக்கு அது இருட்டு அல்ல.. அவை முழு இருட்டில் உயிரினங்களை மிக சிறப்பாக பார்க்க கூடியவை..
இப்படி மனிதன் கண்டு கொண்டதாக சொன்ன எதுவும் .. அவனை பொறுத்த வரை தான் அது உண்மை ...உண்மையான உண்மை அல்ல...

பூமி மிக பெரிய பந்து.. யாரை பொறுத்த வரை என்றால் மனிதனை பொறுத்த வரை...பூமியை போல 10 லட்சம் மடங்கு பெரிய சூரியனையும்...அந்த சூரியனை விட 10 லட்சம் மடங்கு பெரிய நட்சத்திரத்தை.. அதை போன்ற பல மடங்கு நட்சத்திரத்தை அதை போன்ற பல கோடி நட்சத்திரங்களை கொண்ட நமது பால் வெளி திரள் என்ற கேலக்சியை... இதை போன்ற பல கோடி காலக்சிகளை கொண்ட இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி... நமது சூரியன் இவைகளை பெரிசு என்று சொன்னால் அது மிக பெரிய காமெடி..

 எனவே நாம் பெரிது எண்று நம்புவது பெரிது அல்ல சிறுது என்று நம்புவது சிறிதும் அல்ல வெளிச்சம் என்று நம்புவது வெளிச்சம் அல்ல இருட்டு என நம்புவது இருட்டு அல்ல ஆக மொத்தத்தில் இந்த உலகம் இந்த பிரபஞ்சம் நாம் பார்க்கும் விதமாக புரிந்த கொண்ட விதமாக உள்ளதெல்லாம் நமக்கு மட்டும் தான் உண்மையான உண்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது..

வெளி உலகில்.. அறிவியல் ரீதியில் விடுங்கள்..அன்றாட வாழ்வியலில் நீங்கள் புரிந்த கொண்ட விஷயங்கள்..உலகத்தின் நல்லது கேட்டது... இன்னார் நல்லவர் இன்னார் கேட்டவர்.. பாவம் புண்ணியம் தர்மம் எல்லாவற்றையும் உங்கள் கன்னோட்டத்தில் மட்டும் தான் புரிந்து கொண்டுள்ளீர்கள்..உண்மையான உண்மையை அல்ல.. எனவே நீங்கள் பார்க்கும் இந்த உலகத்தை (உங்களை பொறுத்த வரை )மாயை என்று சொல்லலாமா?

இந்த ரீதியில் சில பேர் சிந்திக்க தொடங்கினார்கள்..நாம் உணர்வது பார்ப்பது மாயை என்றால் அப்போது உண்மை என்பது எது அது  எப்படி பட்டது...
உலகத்தில் அறிவியல் தாகம் கொண்ட பல பேர் அண்டவெளி அணுக்கரு என பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருக்க இன்னும் சில வகை விஞ்ஞாணிகள் தனக்குள் என்ன இருக்கிறது என்பத்தில் தேடல் கொண்டார்கள். உண்மையான ஆன்மீகத்தின் வித்துக்கள் அவர்கள் தான்.

தினம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவது ..பூஜை செய்வது ..விரதம் இருப்பது.. இதை செய்து விட்டு ஆன்மீக உச்சத்தை அடைந்து விட்டதாக சொல்பவர்களின் கதை எப்படி பட்டது என்றால் தினம் கடற்கரை சென்று கடலை பார்த்தவர்கள் நான் கடலை பார்த்திருக்கிறேன் என சொல்வதை போல .

உன்மையில் அதுவா கடல்.? அது எவ்வளவு ஆழம், அகலம் , அற்புதம், மற்றும் அசாத்தியங்களை கொண்டது?
அந்த ஆழத்தை எட்டி பிடித்தவர்களை தான் உண்மையில் கடலை கண்டவர்கள் என்று அழைப்பது நியாயம்..

அதனால் இந்த கட்டுரை தொடரில் நான்  பூஜை புனஸ்காரத்தை பற்றி ராமனின் முருகனின் பிள்ளையாரின் பெருமைகளை பற்றி எல்லாம் பேச போவதில்லை அவ்வளவு ஏன் கடவுளை பற்றியே பேச போவதில்லை.. கடவுளை பற்றி பேசாமல் ஆன்மீக கட்டுரையா என கேட்டால் உங்களுக்கு இரண்டு பதில்... ஒன்று இது ஆன்மீக கட்டுரையே அல்ல முழுக்க முழுக்க அறிவியல் கட்டுரை... என்ன... இம்முறை தனக்குள்ளே தேடுகிறது...
பதில் இரண்டு... கடவுளே இல்லாத மதமே உள்ளதே (புத்தம் சமணம் தாவோ.. ஜென்..) கட்டுரை இருக்க முடியாதா..

எனவே ஐன்ஸ்டைன் இந்த புற உலகை ஆராய்ந்து என்ன சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்வதை போல அக விஞ்ஞாணிகள் என்ன உண்மைகளை கண்டு சொன்னார்கள் என்பதை தான் மிகுந்த அறிவியல் பார்வை கொண்டு பார்க்க போகிறோம்.

சரி இப்போ தனக்குள் உற்று பார்த்தவர்கள் என்ன கண்டு சொன்னார்கள் என்பதை பாப்போம்..

நிலாவில் யாரவது பாட்டியையும் அவர் சுட்ட வடையையும் தேடி போய்அங்கே அப்படி ஒன்னும் இல்லயே என ஏமாந்தால் எப்படி இருக்கும் அப்படி தனக்குள் உள்ள மனதை அது என்ன மனது எப்படி பட்டது என்பதை ஆராய முற்பட்டவர்கள் மனம் என்ற ஒன்றே நமக்குள் இல்லை என்பதை கண்டு திகைத்தார்கள்.
இது என்னையா கூத்து நமக்குள் இருந்து நம்மை இயக்குவது நம்மை கோப பட வைப்பது சிரிக்க வைப்பது வருத்த பட வைப்பது எல்லாம் மனம் தானே அதை போய் இல்லைனு சொன்னா எப்படி என்று அவர்களிடம் கேட்டால்.. சாரி மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இயற்கை வழங்கிய ஒன்று அல்ல என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு சொல்கிறது என்கிறார்கள்...

 தனக்குள்ளான தேடல் பாதையில் உள்ள ரமணர் ... ராமகிருஷ்ணர்.. விவேகானந்தர்..புத்தர்...மகாவீரர் இப்படி எல்லோரின் முடிவும் ஒன்றாக இருக்கிறது' நமக்குள் மனம் என்ற ஒன்று இல்லை' 
அதை எப்படி நீங்கள் கண்டு கொண்டீர்கள் என கேட்டால் மனம் இல்லாத நிலையில் நாங்கள் இருந்து பார்த்தோம் என்கிறார்கள் அப்படி எப்படி இருக்க முடியும் என்று கேட்டால் தியானம் என்கிறார்கள்..

ஐயா தியானம் ஆழ்நிலை புரிதல் உள்ளொளினு எல்லாம் பேசாம எங்களுக்கு புரியர மாதிரி சொல்லுங்கள் மனம் இல்லாத நிலையை நாம் உணர்ந்து பார்க்க என்ன செய்ய வேண்டும் எனக்கு தியானம் செய்ய எல்லாம் டைம் இல்ல என நீங்கள் கேட்டால். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் உங்களையே அறியாமல் நீங்கள் பல இடத்தில பல முறை மனம் அற்ற நிலையை  உணர்ந்து இருக்கீறீர்கள்.. நீங்கள் சாலையில் வண்டி ஒட்டி கொண்டு ஏதோ சிந்தனையில் செல்கிறீர்கள் திடீரென ஒரு தண்ணீர் லாரி உங்களை இடிக்கு குறுக்கே வந்தால் திடீரென்று உங்கள் சிந்தனை எல்லாம் காணாமல் போய் ஒரு அலர்ட்னஸ் கு வந்து விடுகிறீர்கள் அந்த கணத்தில் அந்த ஒரு நொடியில் உங்களிடம் மனம் இருப்பது இல்லை.. நீங்கள் முழு விழிப்பில் இருக்கிறீர்கள் ..இப்படி பிளான் பண்ணி இப்படி நகர்ந்து தப்பிக்க வேண்டும் என்று உங்கள் மனதில் எதையும் யோசித்து நீங்கள் தப்பிப்பது இல்லை.. அது விழிப்புணர்வால் அனிச்சையாக நடக்கிறது..

நாலு பிரன்ட்ஸ்களுடன் ஜாலியாக கதை பேசி சிரிக்கிறீர்கள் மிக அதிகமாக சிரித்து விட்டால் அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா அதற்கு காரணம் சிரிப்பு உங்கள் மனதை துடைத்து சிந்தனை அற்றதாக ஆக்கி விட்டதால் நீங்கள் மனம் அற்று போகிறீர்கள்..
கனவுகள் இல்லாத மிக ஆழ்ந்த உறக்கத்தில் உங்களிடம் மனம் இருப்பது இல்லை..சிறு குழந்தையாக குறிப்பிட்ட வயது வரை நம்மிடம் மனம் இருப்பது இல்லை..அதீத உயிர் ஆபத்தில் மனம் இருப்பது இல்லை..

சரி மனம் இல்லாத போது நமக்குள் என்ன இருக்கிறது என கேட்டால் அதற்கு ஆன்மீக விஞ்ஞாணிகள் சொல்லும் பதில்.." மனம் ஒரு மேகம் போல தான் படர்ந்துள்ளது அதை வானம் என நம்புகிறோம் மனம் எனும் மேகம் விலகினால் தெரிவது பரிசுத்த வானம் அந்த வானத்தின் பெயர் விழிப்புணர்வு " என்கிறார்கள்..

தன்னை உணர்தல் என்ற விஞ்ஞாணத்தின் அச்சாணியே இந்த விழிப்புணர்வுதான்... அதை மையமாக வைத்துதான் அணைத்து ஆன்மீகமும் சுற்றி வருகிறது.
தியானத்தில் என்ன கிடைக்கிறது என்றால் விழிப்புணர்வு என்கிறார்கள்..அந்த விழிப்புணர்வு என்பது என்ன அது எப்படி பட்டது...
ஆமாம்...... விழிப்புணர்வு அடைவதை ஆன்மிகம் என்கிறீர்களே அப்போ கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது தவறா... அப்படி நம்பிக்கை வைப்பவர்களை எப்படி எடுத்து கொள்வது..அப்போ பக்தி என்பதின் அர்த்தமே இல்லயா... ?

சொல்கிறேன்.....

தனக்குள் தேடும் தேடல் ..

தொடரும்....





முழுமை எனும் உண்மை (பாகம் 3)

(கருத்தும்,எழுத்தும்  :ரா பிரபு)

உலகை பொருளியல் ரீதியாக ஆராய முற்பட்ட அறிவியலாளர்கள் .பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்பதை கண்டார்கள்.. பின் அந்த அணு எதனால் ஆனது என ஆராய்ந்து பார்த்து அதன் சப் அடமிக் பார்டிகல்களை கண்டார்கள் பின்பு அதையும் தாண்டி தோண்டி நோண்டி பார்த்த போது வெறும் பஞ்சு பொதி போல தான் அதன் தொடக்கம் இருப்பதை பார்த்தார்கள் மிக ஆழத்தில் பொருட்கள் ஒன்றும் இல்லாத சூனியமாக இருப்பதை பார்த்தார்கள்.. ஏதும் அற்ற சக்தி நிலையில் இருந்து இப்படி கண்ணுற கூடிய பொருட்கள் உண்டாகி இருப்பதை பார்த்து அதிசையித்தார்கள் .
.
கிட்ட தட்ட இதே ரீதியில் தான் தனக்குள் தேடிய மெய்ஞான விஞ்ஞாணிகளும் முதலில் தனக்குள் பிரமாண்டமாய் இருப்பது மனது தான் என்பதை பார்த்து அந்த மனம் என்பது என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது அது ஒன்னும் இல்லாத ஒன்று அதாவது மனம் என்ற ஒன்றே இல்லாததை கண்டு அதிசையித்தார்கள்..

உலகமெங்கும் உள்ள மெய்ஞான விஞ்ஞாணிகளும் இந்த விஷயத்தில் மட்டும் ஒத்து போகிறார்கள். மனம் என்பது வெறும் எண்ணங்களின் குவியல் தான் அகந்தை இல்லாமல் தனியாக மனதால் இருக்க முடியாது என்கிறார் ரமணர்..' நான்' என்று நாம் உணரும் அந்த உணர்வை தான் அகந்தை என்கிறார் ரமணர்.
"உண்மையைப் உணர நான் என்கிற அகந்தை அழிய வேண்டும் "என்கிறார் ராமகிருஷ்ணர். "குழந்தை போல இருப்பவர்கள் தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்" என்கிறார் இயேசு..குழந்தைகளுக்கு அகந்தையோ மனமோ இல்லை.

"மனம் என்பது உங்களால் சக்தி அளிக்க பட்டு இயங்கும் ஒரு இயந்திரம் நீங்கள் சக்தி ஊட்டுவதை நிறுத்தி விட்டால் மனம் செத்து விடும் என்கிறார் ஓஷோ.

இவர்கள் சொல்வதை கேட்டால் நமக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது மனம் என்பது இல்லை என்றால் நாம் அனுபவிக்கும் சுகம் துக்கம் இன்பம் துன்பம் எல்லாம் எப்படி? என கேட்டால் மனம் என்பது உங்கள் படைப்பு அது ஒரு மாயை என்கிறார்கள்.
 ஒரு திரையரங்க திரையில் தொடர்ச்சியாக பிரோஜெக்டர் கொண்டு பிம்பம் விழ செய்வதை உதாரணமாக காட்டுகிறார் ஓஷோ. தொடர்ச்சியாக பிம்பம் விழும் போது திரையில் மலை ..கடல் .. விமானம்..புல்வெளி..நகரம் ..பாடல் எல்லாம் மாறி மாறி திரையில் தெரிகிறது அனால் இது எதுவும் திரையின் உண்மையான முகம் அல்ல நாம் காணும் காட்சிகள் ஒரு மாயை..ஒளி பரப்பை நிறுத்தி விட்டால் தெரிவது வெறும் வெள்ளை திரை மட்டும்தான்.

அப்படிதான் தொடர்ச்சியான எண்ண சங்கிலியால் தான் மனம் என்ற ஒன்று இருப்பதாக தெரிகிறது (வேகமாக தொடர்ச்சியாக மின் விசிறி சுற்றுவதால் அது ஒரு டிஸ்க் போல இருப்பதாக தெரிவதை போல) எண்ணங்களின் ஓளிபரப்பை நிறுத்தி வைத்து பார்த்தல் நமக்குள் ஒரு வெள்ளை திரை இருப்பது தெரிவிறது அதன் பெயர் விழிப்புணர்வு..
இது தான் நமது உண்மை நிலை என்பது தான் தன்னை தேடியவர்களின் முடிவு.
இப்போது தன்னை தேடுவதை கொஞ்சம் வேறு கோணத்தில் பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற வேண்டும். உங்களிடம் நான் ஒரு கயிறு ..ஒரு ஏணி மற்றும் ஒரு சாவி கொடுக்கிறேன் அந்த சாவி படிக்கட்டு எங்கே இருக்கிறதை என்பதை கண்டு பிடிப்பதற்கானது. என்றால் நீங்கள் கட்டிடத்தில் எப்படி ஏறுவீர்கள்..? நீங்கள் கயிறு அல்லது ஏணி அல்லது படிக்கட்டு இப்படி உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுப்பீர்கள். ஆனால் உங்களிடம் உள்ள ஏதோ ஒன்றை கொண்டு தான் முயற்சிப்பீர்கள் அல்லவா.. அப்படி தனக்குள் தேட தன்னிடம் உள்ள சில வற்றை பல பேர் பல விதமாக பயன்படுத்தினார்கள் .

நிமிடம் உடல் இருக்கிறது .மனம் இருக்கிறது (மனம் மாயையே பேழையோ ஆக மொத்தத்தில் இருக்கிறது) அப்புறம் முக்கியமாக நாம் மிகவும் நம்பும்... எதையும் தர்க்க ரீதியாக சிந்திக்க கூடிய அறிவு இருக்கிறது..
இப்போது விழிப்புணர்வு தான் நமது உண்மைநிலை என்றால் நிமிடம் உள்ள ஏதோ ஒன்றை கொண்டு தான் அதை அடைய வேண்டி உள்ளது.. சில பல யோக வேலைகளை தொடர்ந்து செய்வதன் மூலம் விழிப்புணர்வை அடையலாம் என்று சொன்னவர்கள் இந்த உடலை பயன்படுத்தி உண்மையை தேடியவர்கள். அவர்கள் இதை ராஜ மார்க்கம் என்றார்கள்.
ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்டு நாம் புற உலக விஞ்ஞாணத்தை ஆராய்வது போல அறிவை கொண்டு நமக்குள் தொடர்ச்சியாக கேள்வி கேட்டு உண்மையை கண்டு கொள்வது நமது அறிவை பயன்படுத்தி உணமையை அடைவதை அவர்கள் ஞான மார்க்கம் என்கிறார்கள் ..
இது ரமனரின் வழி.. நம்மை தோண்டி பார்க்க அவர் நமக்கு கொடுத்த கீ வர்ட் கேள்வி.. "நான் யார்"  இதை தொடர்ந்து தனக்குள் கேட்டு கொண்டே வந்து அதில் வரும் விடையை ஆராய்ந்து கொண்டே வா என்ன நடக்கிறது என்று பார் என்றார் ரமணர். மீதி உள்ள மனம் என்பதை பயன்படுத்தி கடவுளை அடைவதை ( மனம் உள்ளே நுழைந்த உடன் 'உண்மை' என்ற வார்த்தை பிரயோகத்தை ' கடவுள் 'என்று மாற்றி விட்டேன் என்பதை கவனிக்கவும் ) இதை பக்தி மார்க்கம் என்கிறார்கள்.

யானைக்கு தேவை தும்பிக்கை என்பதை போல பக்தி மார்கத்துக்கு மிக தேவை நம்பிக்கை ..
நம்பிக்கை அல்லது இடத்தில பக்திக்கு இடம் இல்லை . குறிப்பாக தர்க்கரீதியாக சிந்திக்கும் அறிவுக்கு பக்தியிடம் இடம் இல்லை. பக்தியை அணுக நீங்கள் மிகுந்த மனோ ரீதியானவராக இருக்க வேண்டும் அறிவு ரீதியானவராக அல்ல..
ஏன் அப்படி?

காரணம் அறிவை கொண்டும் ஆராயும் போது அங்கே நம்பிக்கை என்ற சொல் நம்பிக்கை இழந்து போகிறது.
எதையும் ஆய்ந்து பார்க்கும் முன் இதை நம்பு நீ நம்பினால் தான் உண்டு என்று சொன்னால் அதை இன்னொரு கோணத்தில் அறிவு அலசி பார்க்கிறது.. அதாவது நீங்கள் நம்பிக்கை என்று சொல்வது எதனால் என்றால் உங்களுக்கே அது அறுதியாக தெரியாததால் தான் என்று தர்க்க அறிவு சொல்கிறது..

எப்படி என்பதை சொல்கிறேன் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

உங்களிடம் உங்கள் வலது கையில் 5 விரல் உள்ளதா என்றால் நீங்கள் "5 விரல் இருப்பதாக நம்புகிறேன் "என ஒரு போதும் சொல்ல மாட்டீர்கள் காரணம் அது இருப்பது உங்களுக்கு மிக உறுதியாக திட்ட வட்ட மாக தெரியும் . எனவே அங்கே நீங்கள் நம்பிக்கை என்ற வார்த்தை யை பயன்படுத்த மாட்டீர்கள். மாறாக நம்பிக்கையை நீங்கள் எங்கே பயன்படுத்துவீர்கள் என்றால் உதாரணமாக இந்த முறை கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கும் என நம்புகிறேன் என நீங்கள் சொல்லலாம் ஏனென்றால் அது உங்களுக்கு அறுதியாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் நீங்கள் அதை நம்புகிறீர்கள். எந்த உண்மையையும் நாம் உறுதியாக உணர்ந்து கொண்ட பின் அதை நாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை காரணம் அது இருப்பதற்கு இப்போது நாமே சாட்சி யாகிவிட்டோம்.. இனி நம்பிக்கைக்கு அங்கே வேலை இல்லை ..

எனவே அறிவின் இந்த சிந்தனை கொண்டு பார்த்தல் இருவர் கடவுளை மிக அதிகமாக நம்புகிறார் என்றார் அவர் கடவுள் மேல் மிக அதிகம் சந்தேகம் உடையவராக இருக்கிறார் என்று பொருள் .கடவுளை உணடர்ந்து விட்டால் அதன் பின் அவர் நம்பி கொண்டு இருக்க மாட்டார்.. உலகத்தில் பசி எடுக்கும் யாரும் எனக்கு பசிப்பதாக நம்புகிறேன் என்று சொல்வது இல்லை.

சரி பக்தனை மொக்கை ஆகியாச்சு இபோது அறிவு ரீதியாக தர்க்க ரீதியாக ஆராய்ந்து விட்டால் எதையும் கண்டு உணர முடியுமா என்றால் அங்கு தான் தர்க்க அறிவு மகா மொக்கை வாங்குகிறது சாதாரணமான ஒரு சின்ன துகள் அணுவுக்குள் இருக்கும் பார்ட்டிகள்களில் நுழைந்து பார்த்த போது அங்கே தர்க்க அறிவு மண்ணை கவ்வுகிறது..

 ஒரு துகள் ஒன்று வலது பக்கம் சுழல வேண்டும் அல்லது இடது பக்கம் சுழல வேண்டும்  ஒரே நேரத்தில் இருபக்கமும் சுழன்றால் அதை என்ன வென்று தர்க்க அறிவு கொண்டு விளக்குவது..கூட சேர்ந்து நம்ம தலைதான் சுழலுகிறது. பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில இருக்க முடியாது என்பது தான் இயற்பியல் விதி ஆனால் அந்த விதிக்கு பெப்பே காட்டிவிட்டு பல அணு நுண் துகள்கள் ஒரே நேரத்தில் டபுள் ஆக் ஷன் கொடுத்து அசத்துகிறது .
நம்மால் காண கூடிய ஒரு சின்ன துகளையே இன்னும் முழுதாக புரிந்து கொள்ள முடியாத நம்மால் கடவுள் என்ற  கோக்கு மாக்கு ஆசாமியை எப்படி புரிந்து கொள்வது??
இறுதியாக ...
அறிவியலை கொண்டு கடவுளை விளக்க முடியுமா முடியாதா... ஒரே வார்த்தையில் சொல் என்றால்..
"முடியாது"
என்று சொல்லி முடிக்கிறேன்..
நன்றி..

பின்னுரை:

ஒரு தன்னிலை விளக்கம்:
எனது பல கருத்துகளால் என்னை கடவுள் நம்பிக்கை அற்ற நாத்தீகன் என என்னிட வேண்டாம் அவை யாவும் என் கருத்துகள் அல்ல.
அதற்காக என்னை நம்பிக்கை கொண்ட ஆத்திகன் என என்னிட வேண்டாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை..
மாறாக எனக்கு ஒன்றும் தெரியாது என்று உலகை வியந்து நோக்கும் குழந்தை போல நான் ஒரு தேடல்வாதி...
அவ்வளவு தான்.


Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"