"கோக்கு மாக்கு கோட்பாடுகள்"

(அறிவியல் காதலன்)
(ரா.பிரபு)

நண்பர்களே ஒரு கேள்வி உங்கள் கார் டயருக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு என்ன வென்று சொல்ல முடியுமா?
கட்டுரை இந்த பாகம் முடிவுக்குள் விடை செல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்.

அறிவியல் தனது வளர்ச்சி பாதையில் தான் கண்டு கொண்டதற்கு ஏற்றாற்போல் பல கோட்பாடுகளை தொடர்ந்து வழங்கி கொன்டே வருகிறது.
பல கோட்பாட்டு விளக்கங்களை நாம் பார்த்து இருக்கின்றோம்.
ஆனால் இன்று நான் விளக்க போவது கொஞ்சம் வித்யாசமான கோட்பாடுகளை பற்றி.

பிரபஞ்ச உற்பத்தியின் போது மேட்டர் உண்டாகியது கூடவே அதை போலவே அதற்கு எதிரான ஆண்ட்டி மேட்டர் உருவானது பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் அல்லவா. அப்படி அறிவியல் கோட்பாடு ஒவொன்றும் உருவாகும் போது கூடவே சில அதற்க்கு நிகரான கோக்கு மாக்கு கோட்பாடுகள் உண்டாகி விடுகிறது. அவற்றில் பெரும்பான்மையான கோட்பாடுகள் முகம் தெரியாத பல பேரால் உண்டு பண்ண பட்டது.
அப்படி இருக்கும் போது ஏன் அதற்க்கு முக்கிய துவம் கொடுக்க வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். காரணம் உண்டு.

யோசித்து பாருங்கள் பூமியை தட்டை என்று நம்பிய கால கட்டத்தில் அதை உருண்டை என்று சொன்னவனை பார்த்து அனைவரும் சிரித்திருப்பார்களா இல்லையா? வெளியே வெட்ட வெளியில் அழைத்து சென்று
"பார் எங்கே உருண்டையை காட்டு பார்க்கலாம் கண்ணுக்கு எட்டிய வரை தட்டையாக தானே தெரிகிறது "
என்று சொல்லி இருப்பான் அல்லவா.

அல்லது ஒரு 400 வருடம் முன் யாரவது இந்த உலகில் வேறு மூலையில் பேசினால் இங்கே கேட்கும் என்று சொல்லி இருந்தால்?
பல ஆயிரம் கிமி கடந்து நடக்கும் நிகழ்வை இங்கேயே பார்க்கலாம் என்று சொல்லி இருந்தால்??
கண்டிப்பாக அவன் பரிகாசத்திற்கு ஆளாகி இருப்பான் அல்லவா ?
ஆனால் இன்றைய அறிவியல் அதை சாதித்து உள்ளதே.

இந்த காரணத்தால்தான் அந்த கோக்கு மாக்கு கோட்பாளர்கள் பேச்சையும் கொஞ்சம் கேட்க வேண்டி இருக்கு.
யார் கண்டா நாம் இது நாள் வரை நம்பியது பொய் என்றும் அவர்கள் சொல்வது உண்மை என்றும் கால போக்கில் நிரூபிக்க பட்டால் நாம் என்ன செய்ய முடியும்.

'பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்று பல ஆண்டுகளாக நம்பி வந்த நாம் 15 ஆம் நூற்றாண்டில் கோபர் நிக்கஸ் வந்து தலையில் கொட்டிய பின் 1000 ஆண்டு கால நம்பிக்கையை ஒரம் கட்டி விட்டு சூரியன் தான் மற்ற கோள்களுக்கு மையம் பூமி ஒரு டம்மி என நம்பிக்கையை மாற்றி கொண்டோம் அல்லவா.

அதனால் அறிவியல் நம்பிக்கைகள் நிரந்தரம் அல்ல .
அதனால் தான் அறிவியல் வசதியாக "கண்டுபிடிக்க பட்ட உண்மை" என்றோ.. "கண்டுபிடிக்க பட்ட பொய் " என்றோ சொல்வதில் .அது எல்லாவற்றையும் கோட்பாடு என்கிறது. கோட்பாடு என்றால் என்ன பொருள் தெரியுமா? அது உண்மையும் அல்ல பொய்யும் அல்ல இன்று சொல்ல பட்ட கோட்பாடுகள் நாளை வேறு விதமாக மாற்றி அமைக்க  படலாம்.

இன்று ஒரு கருத்தை சொல்லி விட்டு நாளை வேறு ஒரு கருத்தை சொல்வது என்பது ''அரசியல் ல இதெல்லாம் சாதாரணமப்பா " வசனத்தில் தாராளமாக அரசியலை எடுத்து விட்டு அறிவியல் என்று போடலாம்.
அதனால் இன்று அறிவியல் கோட்பாடுகளுடன் அறிவியலின் சில கோக்கு மாக்கு கோட்பாடுகளையும் சேர்த்தே பார்க்க போகிறோம். வாருங்கள் முதல் கோட்பாட்டை பார்ப்போம்.

முதல் கோக்குமாக்கு கோட்பாடு :

"-பிரபஞ்சம் ஒரு காட்சி தோற்றம் -"

இந்த கோட்பாடு என்ன சொல்கிறது என்றால் பிரபஞ்சம் ஒரு மாயை என்கிறது. இது ஆன்மீகத்தில் சொல்ல பட்ட "எல்லாம் மாயை" அல்ல .இது கொஞ்சம் வேற மாதிரி ஸ்பேஷல் மாயை.
அதாவது நீங்கள் கண்ணால் பார்க்கும் உணரும் இந்த பிரபஞ்சம் ஓரு ஹோலோ க்ராபிக் வடிவம் . ஒரு திரையில் ப்ரொஜெக்ஷன் செய்ய படும் திரை பட காட்சிகள் போல வெறும் மாயை தோற்றம் என்கிறது. அதெப்படி என்றால் நாம் கண்ணாடி அணிந்து கொண்டு 3D படங்களை பார்த்திருப்போம் அல்லவா.. அங்கே நாம் முப்பரிமானத்தை உணர்ந்தாலும் நிஜத்தில் அங்கே இருப்பது ஒரு இரு பரிமாண திரை அல்லவா.
அதே போல் தான் ஒரு இரு பரிமாண தளத்தில் இருந்து கொண்டு மொத்த பிரபஞ்சமும் ஒளிபரப்ப பட்டு கொண்டு இருக்கிறது.
நீங்கள் பார்க்கும் 3D வடிவங்கள் உணரும் 'காலம்' எல்லாமே மாயா சாயா என்கிறது கோட்பாடு.
இந்த கோட்பாடு படி பிரபஞ்சம் ஒரு
 2D  மட்டுமே.
என்ன ஒன்னு திரைபட 3D க்கும் பிரபஞ்ச 3D க்கும் ஒரே ஒரு வித்யாசம் என்ன வென்றால் பிரபஞ்ச ஹாலோக்ராப் ஐ நாம் தொட மற்றும் உணர முடியும்.

இந்த கோட்பாட்டை இவர்கள் எதன் ஆதாரமாக சொல்கிறார்கள் என்றால் குவாண்டம் க்ராவிட்டியை  கொண்டு தான்
(குவாண்டம் க்ராவிட்டி என்பது ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் தத்துவத்தையும் சில இடங்களில் ஒன்றிணைக்கும் கோட்பாடு)
கிராவிட்டி யை குவாண்டம் கொண்டு விளக்கும் போது.. பொருட்களில் க்ராவிட்டி உண்டாக ஸ்ட்ரிங் இல் தொடங்கு கிறது .
இந்த ஸ்ட்ரிங் என்பது அணுவை மிக மிக மிக நுணுக்கமாக சென்று ஆராயும் போது கடைசியாக மிஞ்சி நிற்கும் ஒரு இழை.. இதை விளக்க குவாண்டம் இல் தனியாக ஸ்ட்ரிங் தியரி என்ற பெரும் கோட்பாடு உண்டு.

பிரபஞ்சம் ஒரு காட்சி தோற்றம் என்பதற்கு சான்று இவர்களுக்கு பிக் பாங் காலத்தில் தோன்றிய மைக்ரோ அலைகளை ஆராய்ந்தால் கிடைக்கிறது என்கிறார்கள்.

இவர்கள் கூற்று படி பிரபஞ்சம் வெறும் 2 டைமன்ஷன் கொண்டவை தான். ஆனால் 3 D யாக ஒரு காட்சி தோற்றத்தை ஒளி பரப்பி கொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரபஞ்சம் 2 D என்பதால் வளைந்தும் இருக்கிறது என்கிறார்கள்.
அந்த வளைவு நேர்மறை வளைவு என்றால் இந்த பிரபஞ்சமே ஒரு வட்டம் அதில் ஒரு திசையில் ஏதாவது ஒரு பொருளை போட்டால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடும் .என்கிறார்கள் அப்படி இல்லாமல் அந்த வளைவு ஒரு எதிர்மறை வளைவு என்றால் இந்த பிரபஞ்சம் ஒரு முடிவிலியாக பெரிதாகி கொண்டே போகும் என்கிறார்கள்.

குவாண்டம் படி எல்லா பொருளும் ஸ்ட்ரிங் இல் இருந்து தான் தொடங்கு கிறது . இந்த மொத்த பிரபஞ்சமும் அப்படி ஆனது தான். இப்போ என்ன விஷயம் என்றால் அந்த ஸ்ட்ரிங் வெறும் ஒற்றை பரிமாண 1D பொருள்.
இதிலிருந்து தான் நாம் காணும் முப்பரிமாண உலகமே உண்டாகிறது.

இன்னொன்றை கவனியுங்கள் அதாவது அணுவை திறந்து பிரித்து பிரித்து அக்கு வேர் ஆக்கி பார்த்ததில் அந்த  கடைசி புள்ளியில் பொருட்கள் காணாமல் போகின்றன அல்லது 'இருக்கு ஆனா இல்லை ' ஸ்டேட்டஸ் இல் பஞ்சி போல துகள்களாக இருக்கின்றன . அங்கு பொருள் அல்லாத சக்தி நிலை மட்டும் எஞ்சி நிற்பதை கண்டார்கள்.
அப்படி பார்த்தால் இந்த பிரபஞ்சம் என்பதே இல்லை.

ஆனால் பொருட்கள் நமக்கு கண்ணுக்கு தெரிகிறதே எதனால்?
அதற்க்கு காரணம் அணுக்களின் வேகமான சுழற்சி தான். ஒரு மின் விசிறி வேகமாக சுழலும் போது அது மொத்தமாக டிஸ்க் போல ஒரு பொருளாக காட்சி தருகிறது அல்லவா.
அப்படி அணுக்களின் வேகமான சுழற்சியால் தான் பொருட்கள் திடமாக நமக்கு காண கிடைக்கிறது. ஒரு பேச்சுக்கு அணுக்களின் வேகம் மிக மந்தமாகி மிக மெதுவாக சுழல்வதாக வைத்து கொண்டால் பொருட்கள் எல்லாமே ஏதோ புகை மூட்டம் கலைந்ததை போல ஒரே மங்கலாக....
 'இருக்கும் ஆனா இருக்காது 'நிலையில் தான் பார்க்க முடியும்.
சுத்தமாக சுற்றுவது நின்று விட்டால்  அது கூட தெரியாது.

அதாவது உங்கள் கார் டயர் வேகமாக சுற்றும் போது ஒரு நிலையான பொருளாக காட்சி அளிப்பதை போலதான் இந்த பிரபஞ்சமே நிலையாக திட மாக காட்சி அளிக்கிறது. (கார் டயருக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை சொல்லிட்டேன்)

மேலே சொன்னது போல் ஒரு சாதாரண பெளதிக கோட்பாடு படியே பிரபஞ்சம் ஒரு மாயை யாக இருக்கும் போது. இவர்களின் கோக்கு மாக்கு கோட்பாடு படி ஏன் பிரபஞ்சம் ஒரு ஹோலோக்ராபிக் வடிவமாக ..எல்லாம் வேறு ஏதோ ஒரு நிஜத்தின் நிழலாக இருக்க கூடாது?

தலை சுற்றுகிறதா? சரி வாங்க அடுத்த கோக்குமாக்கை பார்ப்போம்.............


தொடரும்.............

Source :

Is our Universe an illusion? Theory claims to prove we're living in a hologram | WIRED UK http://www.wired.co.uk/article/our-universe-is-a-hologram


            *         *             *                *



"கோக்குமாக்கு  கோட்பாடுகள் "

(பாகம் 2: )  "உலகம் உருண்டை அல்ல"




இன்று அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட .சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க பட்ட பல ஆதாரங்கள் கொண்ட , நாம் பாட புத்தகத்தில் படிக்கிற ஒரு எளிமையான உண்மை உலகம் உருன்டை என்பது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட உலகம் தட்டையானது என உறுதியாக நம்புகிற ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது. அதுவும் அபார ஆதாரங்களுடன்.

அறிவியல் வளர்ச்சி அடையாத கால கட்டத்தில் பண்டைய கால மேசபடோமிய புராணங்களில் பூமியை 'தட்டையான ஒரு டிஸ்க் கடலில் மிதந்து கொண்டிருங்கிறது. அதை சுற்றி வளைந்த வானம் சூழ்ந்து கொண்டிருக்கிறது 'என்று வர்ணித்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே பழங்கால கிரேக்கமும் இந்திய புராணங்களும் உலகை உருண்டை என அழைத்தது.

இன்று செயற்கை கோள்கள் வந்து விட்ட பின் விக்கி மேப்பியா சென்று நாமே நமது வீட்டு மொட்டை மாடியை செயற்கை கோள்  படம் பார்த்து ரசித்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் இன்று யாரும் உலகம் உருண்டை என்பதை சந்தேகிப்பது இல்லை.
ஆனால் இதை உருண்டை என நாம் தெரிந்து கொண்டது செயற்கை கோள் வருகைக்கும் முன்.

சில புத்திசாலி அறிஞர்களால் அது சாத்திய பட்டது. உதாரணமாக பூமியை மையமாக கொண்டு தான் சூரியன் சுற்றி வருகிறது என்று தவறாக நம்பிய அரிஸ்டாட்டில் கூட உலகம் உருண்டை என்பதை நம்பினார். காரணம் முன்னது அவர் மத நம்பிக்கை பால் கொண்ட நம்பிக்கை பின்னது அவர் அறிவு கொண்டு யோசித்த சில தர்க்க ரீதியான நிகழ்வின் விளைவு. உதாரணமாக சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் விழும் நிலை அது உருண்டையாக இருந்தால் தான் சாத்தியம் தட்டையாக இருந்தால் அல்ல.
மேலும் வட முனையில் இருந்து பார்க்கும் போது தெரியும் நட்சத்திரங்கள் தென் முனையில் இருந்து கண்ணுற்றால் அவை வானில் எங்கோ ஓரமாக இருப்பது அவரை யோசிக்க வைத்து.

ஏர்ட்டாஸ்தனிஸ் என்று ஒரு கிரேக்க வானிலை மேதை இருந்தார் கிமு 240 யில்.
அவர் கணக்கில் சூரபுலி தனது கணித அறிவு வானியல் அறிவு இதை கொண்டே பூமியை வட்டம் மட்டும் அல்ல அதன் சுற்றளவு இவ்வளவு தான் என்பதை அளந்து சொல்லி விட்டார் .இன்று சாட்லைட் கொடுத்த புள்ளிவிவரத்துடன் அது வெகு நெருக்கமாக ஒத்து போகிறது. அவர் அதை எப்படி செய்தார் தெரியுமா?

வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் நமது தலைக்கு நேர் மேலே வருகிறது அன்று கட்டிடங்களுக்கு அடியில் நிழல் விழுவது இல்லை. காலி கிணற்றில் எட்டி பார்த்தால் அன்று அங்கே நிழல் ஏதும் இல்லாமல் முழு கிணற்றில் ஒளி இருக்கிறது  என்பதை கண்டார்.

 அன்றைக்கு தான் வசித்த அலெக்ஸான்ரியா நகரத்தில் ஒரு குச்சியை நட்டு வைத்து நிழல் இல்லாத நிலையில் வைத்தார் . அதற்க்கு முன்பே அவர் நகரத்தில் இருந்து பல நூறு கிமி தள்ளி இருந்த செய்னே என்னும் ஊரில் இதே நேரம் இப்படி ஒரு குச்சியாய் நட்டு வைக்க ஏற்பாடு செய்திருந்தார். இப்போது பூமி உருண்டையாக இருப்பதால் இங்கே நிழல் இல்லாத அதே நேரம் இன்னொரு ஊரில் அந்த குச்சியில் நிழல் விழுவதை பார்த்தார். மேலும் குச்சிக்கும் நிழலுக்கும் உள்ள கோணம் 7.2 டிகிரி என்பதை கண்டார். பிறகு தனது வானியல் மற்றும் கணித அறிவை பயன்படுத்தி ஒன்றை கண்டார். அதாவது இப்போது பூமியின் மையத்தில் இருந்து ஒரு கற்பனை கோடு ஒன்றை அலக்ஸான்றியா குச்சிக்கும் அதே போல செய்னே குச்சிக்கும் வரைந்தால் அதன் கோணம் சரியாக அதே 7.2 இருக்கும்.

பிறகு ஒரு ஆசாமியை வாடகைக்கு காசு கொடுத்து அமர்த்தினார் இரண்டு நகரங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை போய் அளந்து வா தம்பி என்று அனுப்பி வைத்தார். (பாவம் அந்த காலத்தில் அடி அடியாக அளந்த அந்த அடிமையை பாராட்டியே ஆகணும்)
5000 ஸ்டேடியா தொலைவு அது இருப்பதாய் கண்டார் (ஸ்டேடியா என்பது அன்றைய தொலைவை அளக்கும் அளகு)
பிறகு அந்த தகவல்களை வைத்து அவர் சொன்ன முடிவு : 7.2 டிகிரி கோணத்திற்கு 5000 ஸ்டேடியா தொலைவு என்றால். (பூமி வட்டம் என்பதால் ஒரு வட்டத்தை பூர்த்தி செய்ய )360 டிகிரிக்கு எத்தனை  தொலைவு என்பதை வகுத்து கணக்கு போட்டால் வரும் விடை தான் பூமியின் சுற்றளவு.

இவ்வளவு இருந்தும் உலகை தட்டை என ஏன் எதற்கு எப்படி சிலர் நம்புகின்றனர்?
முதலில் ஏன் என்று ஆராய்ந்தால் அந்த கோக்கு மாக்கு கோட்பாடை தக்கவைத்து இருப்பவர்கள் அதை செய்ய காரணம் உருண்டை கொள்கை சில மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பது தான்.

பொதுவாக மத நூல்கள் அறிவியல் கருத்துக்களை சொல்வதற்காக எழுத பட்டவை அல்ல மேலும் அது பல உவமைகள், கதைகள் குறியீடுகள் கொண்டு பேசுவதால் அவற்றை நேரடி பொருள் கொள்ள கூடாது. உதாரணமாக ஒரு ஜென் கதையில் வரும் வெள்ளை மாடு கருப்பு மாடு பற்றிய கதையை படித்து இருக்கலாம். அதை படித்து விட்டு பிரபஞ்சத்தில் அப்படி இரண்டு மாடுகளை தேடிப்போனால் ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது. காரணம் அவைகள் இரவு மற்றும் பகளை குறிக்கும் குறீயீட்டு சொற்கள்.

அவர்கள் எப்படி இதை நம்புகிறார்கள் நம்மையும் நம்ப சொல்கிறார்கள் என்றால்...உங்கள் கருத்து ஒவொன்றிற்கும் மாற்று கருத்தும் ஒவ்வொரு ஆதாரத்திற்கும் மாற்று ஆதாரமும் அவர்களிடையே உண்டு.
அவைகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

1838 இல் சாமுவேல் ரோபோதம் செய்த பெட்போர்ட் லெவல் சோதனை (bed Ford level experiment) மிகவும் குறிப்பிட தகுந்தது.
அதாவது கடலில் கப்பல் போவதை கடற்கரையில் இருந்து பார்க்கும் போது பூமி வளைந்து இருப்பதால் முதலில் கீழ் பகுதி மறைந்து பிறகு மேல் முனை மறைவதை காண்கிறோம் அல்லவா. அது தான் அவர் சோதனையின் அடிப்படை.

வெண்ணெ வின் வட கிழக்கில் உள்ள ஒரு ஆறு தான் பெட்போர்ட.. இது 9.7 கிமி தொலைவுக்கு நேர் கோடாக எந்த தடையும் இல்லாத நீர் கால்வாயை கொண்டது . மேலும் இதில் நீரோட்டம் மிக மெதுவானது .அதில் ஒருவரை ஒரு கொடியுடன் படகில் நேராக பயணம் செய்ய சொன்னார் ரோபோதம் .அவர் இலக்கு நேரே சென்று கொண்டே இருக்க வேண்டும் கடைசி முனையில் உள்ள பாலத்தை அடைந்ததும் துடுப்பை உயர்த்தி காட்ட வேண்டும்.

அந்த கால்வாய் நாம் சோதிக்க வசதியாய் நீண்ட தூரம் நேர் கோடாக அமைந்து இருந்தது கூடுதல் சிறப்பு. பூமி வளைந்து இருப்பது உண்மையானால் அவர் பாதி தூரத்திலேயே மறைந்து போக வேண்டும். அதாவது கணக்கு படி
ஒரு மைல் க்கு 8 இன்ச் பூமி வளைய வேண்டும். இரண்ண்டாவது மைலில் 32 இன்ச் வளைய வேண்டும் இதே விகிதத்தில் சென்றால் மொத்த அங்கே இருந்த 6 மைல் ..(9.7 கிமி )க்கு 24 அடி பூமி வளைந்து விட்டிருக்க வேண்டும்.

 சாமுவேல் நீரில் இருந்து 8 இன்ச் உயரதில் ஒரு டெலசகோப் வைத்து நீரில் இறங்கி படகு ஆசாமியை கண்காணித்தார்.
அவரால் படகாளரின் 6 மைல் பயணத்தையும் முடிக்கும் வரை டெலஸ்கோப்பில் கண்ணுற முடிந்ததை கண்டு மகிழ்ந்தார்.
பூமி எந்த வளைவும் இன்றி நேராக உள்ளது என்று உலகிற்கு அறிவித்தார் பல பதிப்பகத்தில் இதை பதிவு செய்தனர்.

அதன் பிறகு 1870 இல் ஆல்பிரட் ரூஸல் வாலஸ் என்பவர் மேல் சொன்ன சோதனையில்( atmosphere refraction  )ஒளி விலகலை கணக்கில் எடுத்து கொள்ளாததால் பிழை உள்ளது. ஒளி வளைந்து தான் அவரை வந்து அடைந்தது என்றார். அந்த குறையை போக்கிவிட்டு தானே மீண்டும் ஒரு சோதனை செய்து அதில் உலகம் உருண்டை என்பதை நிரூபித்தார்.

இது நடந்து நூறு  ஆண்டுகளுக்கு மேல் தாண்டி பின்  2016 இல் தட்டை உலக கோட்பாளர்கள் கொண்ட குழு ஒன்று மீண்டும் அந்த பெட்போர்ட் ஆற்றில் ஒன்று கூடினார்கள். இம்முறையும் ஒருவனை படகில் ஏற்றினார்கள். ஆனால் இம்முறை கொஞ்சம் அல்ட்ரா மார்டன் நவீன விஞ்ஞாணத்தை கைகொண்டார்கள்.
 படகோட்டி க்கு பின்புறம் படகில் இம்முறை லேசர் ஒளியை கட்டி அனுப்பினார்கள் . மேலும் அவனை கண்காணிக்க இம்முறை டெலஸ்கோப்புடன் சக்திவாய்ந்த ஜுமிங் சக்தி கொண்ட நிகான் கேமரா வை வைத்து கண்காணித்தார்கள்.

படகு செல்ல செல்ல லேசர் ஒளி குவிக்கும் புள்ளி மேல் நோக்கி நகர்வதையும். படகு கண்ணுக்கு தெரியாமல் மறைவதையும் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் வைத்திருந்த சக்தி வாய்ந்த கேமரா வில் ஆசாமி இறுதி வரை தெரிந்து கொண்டே இருந்தான். முடிவில் எந்த வளைவையும் படகோட்டி சந்திக்காததை கண்டு உற்சாகம் அடைந்தார்கள் உலகம் தட்டையாக இருப்பதை மீண்டும் நிரூபித்தார்கள்.

 (ஆனால் பிறகு வந்தவர்கள் அந்த சோதனை 1838 இல் செய்ய பட்டதை போல சரியான முறையில் செய்ய பட்டது அல்ல என்றார்கள் அவர் தண்ணீரில் நின்று 8 இன்ச் உயரத்தில் டெலஸ்கோப் வைத்து செய்ததை இவர்கள் பாலத்தில் மேல் நின்று செய்தார்கள் 10 அடி உயரம் மற்றும் அதில் டெலஸ்கோப் வைக்க பட்ட 4 அடி உயரம் எல்லாம் சேர்ந்து பெரிய மாறுதலை உண்டாக்க கூடியது என்றார்கள். அவர்களின் கவனமற்ற முன்னேற்பாடு மொத்த பரிசோதனையை அர்தமற்றதாக்கி விட்டதாக விளக்கம் கொடுத்தார்கள்)

இனி அவர்கள் தட்டை க்கு வைத்துள்ள ஆதாரங்களை ஒவொன்றாக பார்ப்போம்.

''கோக்கு மாக்கு கோட்பாடுகள் "
(பாகம் 3)

''உலகம் உருண்டை அல்ல" (2)

பொதுவாக நமக்கு உருண்டை உலகம் என்றால் அதற்கு ஆதாரமாக முதலில் நினைவில் வருவது பகல் இரவு என்பது தான். அதாவது உருண்டையின் ஒரு முனை சூரியனை நோக்கி இருப்பது பகல் என்றால் அடுத்த முனை இரவு. இவை சுழலும் போது மாறி மாறி வருகின்றன என்பது தான் நமக்கு சொல்ல பட்ட பூமி டிசைன். அனால் இவர்கள் டிசைனை கொஞ்சம் பாருங்கள்....

இவர்கள் டிசைன் படி பாடலை கேட்க உதவும் ஒரு பழைய கிராம போன் தட்டு போல் தான் பூமி இருக்கிறது. அதன் மேல் பகுதியில் தான் கண்டங்கள் இருக்கிறது .(கீழ் பகுதி கூம்பாக பாறை கொண்டு இது வரை யாரும் பார்க்காத பகுதியாக இருக்கிறது) .

இப்போது அதே கிராமபோன் தட்டின் மேல் ஓரமாக ஒரு மின் மினி பூச்சி வட்டமாக தட்டின் மேல் சுற்றி வருவதாக கற்பனை செயுங்கள். அது பறக்கும் இடம் மட்டும் திட்டாக வெளிச்சம் பின்தொடரும் அல்லவா அப்படிதான் சூரியன் பூமியை சுற்றுகிறது. அது சுற்றும் இடம் பகல் மற்ற இடம் இரவு என்றாகிறது. அவர்கள் கொள்கை படி சூரியன் சந்திரன் இன்று நமக்கு கற்பிக்க பட்ட அளவு தொலைவும் இல்லை நமக்கு சொல்ல பட்ட அளவு பெரிதாகவும் அவைகள் இல்லை.

கிரகணத்தின் போது விழும் நிழலுக்கு விளக்கம் ஆம் பூமி வட்டம் தான் ஆனால் டிஸ்க் போல தட்டையான வட்டம் அதனால் அந்த வளைந்த நிழல் எங்கள் டிசைனிலும் சாத்தியம் தான்.

அவர்கள் கூற்று படி பூமிக்கு ஈர்ப்பு விசை இல்லை... மாறாக நாம் உணரும் க்ராவிட்டி ஒரு இழுவிசை (dragging force) அதாவது பூமி தொடர்ச்சியாக மேல் நோக்கி வேகமாக நகர்வதால் நாம் உணரும் விசை.
இது தவிர பூமி உச்சியில் வானத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வானதில் ஒரு டூம் அமைப்பு உள்ளது. கண்ணுக்கு தெரியாத ஒரு மேற் கூரை அது.

செயற்கை கோள் புகை படம் இருக்கே பா என்று சொன்னால் அவர்கள் செயற்கை கோளை  விண்வெளி ஆய்வை நம்புவது இல்லை. நாசா இந்த உலகத்திற்கு வெறும் பொய்களாக அடுக்கி கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.
அதன் உடன் சேர்ந்து மொத்த உலக வானிலை ஆய்வாளர்களும் பொய் பேசுகிறார்கள்.
'எங்கே ...உங்கள் செயற்கை கோள் புகை படத்தை கொஞ்சம் எடுத்து பாருங்கள் நீங்கள் தானே பூமி முழு உருண்டை அல்ல அது கொஞ்சம் ஆரஞ்சு போல அமுங்கிய உருண்டை என்கிறீர்கள் அப்போ உங்கள் புகை படங்கள் எல்லாவற்றிலும் சுத்த உருண்டை யாக  காட்ட பட்டிருப்பது எப்படி ? 'என்று ஒரு போடு போடுகிட்டார்கள்.
 மேலும் பல காலகட்டங்களில் நாசா வெளியிட்ட பல புகைப்படங்களை காட்டி அதில் உள்ள போட்டோ ஷாப் குறைபாடுகள் ...நகராமல் நிற்கும் மேகங்கள்....போன்ற வற்றை குறிப்பிடுகிறார்கள் .புகை படங்களில் சப்மினல் மெசேஜ் ஒளிந்திருப்பதாக கூட சொல்கிறார்கள்.
கடந்த காலத்தில் நாசா வெளியிட்ட படத்திற்கும் இக்கால படத்திற்கும் அமெரிக்க வரைபடதில் வித்யாசம் இருப்பதை சுட்டி காட்டுகிறார்கள்.

ஐக்கிய நாடுகளின் சின்னத்தை பார்த்தது உண்டா அது ஏன் அப்படி வைத்து இருக்கிறார்கள்? என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? அதில்
தட்டை உலகின்  படத்தை அவர்கள் வைத்திருப்பது தெள்ள தெளிவாக பார்க்க முடியும்.
சேடலைட்டை பொறுத்த வரை இது வரை ராக்கெட் பூமியின் டூமை கடந்து செல்லவே இல்லை. செயற்கை கோள் என்ற ஒன்று இல்லை. நீங்கள் பார்க்கும் ஒளி பரப்பு தொலை தொடர்பு எல்லாமே பைபர் ஆப்டிக்கல்ஸ் மூலமாக மட்டுமே நடக்கிறது.

சரி தட்டை என்றால் உலகின் எல்லை ஒன்று இருக்க வேண்டுமே அதில் அதல பாதாளம் ஒன்று இருக்க வேண்டுமே அது எங்கே என்றால் அது தான் அண்டார்டிகா சுவர்... அங்கே மனிதர்கள் செல்ல தடை என்று உலக அரசாங்கங்கள் ஏன் சொல்கிறார்கள் புரிகிறதா என்கிறார்கள்.
நேரே சென்று கொண்டே இருந்தால் ஆரம்ப இடத்திற்கே வருவது எப்படி என்றால் ஈர்ப்பு விசையால் ஈர்க்க பட்டு டிஸ்கில் வட்ட பாதையில் தான் சுற்றுகிறீர்கள் என்கிறார்கள்.
சில நேரங்களில் சூரியன் மேகத்தில் மறைந்து அது வெளியிடும் கிரணங்கள் இருபுறமும் வெளிவருவதை பார்த்து இருக்கலாம் அது ஏற்படுத்தும் கோணம் அந்த கிரனங்களை தொடர்ந்து சென்றால் சூரியன் அதிக தொலைவில் இல்லை என்பது போல தெரிவது எதனால் ?என்கிறார்கள்

பருவ நிலைகள் பற்றி கேட்டால் சூரியன் தட்டை பூமியில் மையத்தில் நெருங்கியும்  விலகியும் சுற்றுவதால் சீசன் உண்டாவதாக சொல்கிறார்கள்.
உலகில் எல்லா விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் illusion என்பதை குறிக்கும் குறீயீடை தங்கள் லோகோ வில் வைத்திருபது தற்செயலானதா ? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அதை விட அவர்கள் சொல்லும் இன்னோரு காரணத்தை கொஞ்சம் பாருங்கள்...
நங்கள் தான் flat earth என்று விக்கி யில் போட்டு இருக்கோமே.... விக்கிப்பீடியா பாலிசி படி ஏன் அது இன்னும் மறுப்பு தெரிவிக்கவோ தடை செய்யவோ இல்லை.? (என்னடா இது விக்கிக்கு வந்த சோதனை)

சரி இன்னும் நம்பிக்கை இல்லையா.... அப்போ அவர்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்..

உயரமான இடத்தில் சென்று  கடல் மட்டத்தை அல்லது நில பரப்பை பார்த்தல் அதன் horizon தொடுவான முனை ஒரே நேர் கோடாக தெரிகிறதே ஓரங்களில் வளைந்து தானே இருக்க வேண்டும். கட்டிட உச்சியானாலும் சரி மலையின் உச்சியிலிருந்து பார்த்தாலும் சரி அது நேர் கோடாக மட்டும் தான் தெரிகிறது?

அதுமட்டும் அல்ல பாலூனில் ஏறி அல்லது மலை உச்சி சென்று என்று எவ்வளவு உயரம் சென்றாலும் horizon மட்டம் கண்ணை தாழ்த்தி பார்க்க தேவை இன்றி கண்ணுக்கு நேர் எதிரே பார்க்கும் படி உள்ளது எப்படி... நீண்ட தூர தட்டை அமைப்பு இருந்தால் தானே இது சாத்தியம்

நீர் எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் நேரான நிலையான மட்டத்தை கொள்வதை பார்க்கிறோம் அப்போ வளைந்த பூமியில் இது எப்படி சாத்தியம் ?

கடலில் செல்லும் கப்பல் படி படியாக மறைவது சரி ஆனால் தொலை நோக்கியில் தொடர்ந்து தெரிகிறதே ஏன்?

பாலம் கட்டுபவன் குகை அமைப்பவன் குறிப்பாக ரயில் தண்டவாளம் அமைப்பவன் எவ்வளவு தூரம் அமைதாலும் நீண்ட தண்டவாளத்தை நேராக தானே போடுகிறான் வளைவை உணராதது ஏன்?

லண்டனில் இருந்து லிவர்பூல்க்கு 180 மைலில் ஒரு நீண்ட ரயில் பாலம் உள்ளது அதில் எந்த வளைவையும் காண முடியவில்லையே.

விமானம் தொடர்ந்து பறக்கும் போது வளைவில் மேல் பறப்பாதாக இருந்தால் உயரத்தை சமமாக வைக்க குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒரு முறை விமானத்தை கீழ் நோக்கி இறக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அது உயரம் அதிகரித்து கொண்டே செல்ல வேண்டுமே அப்படி ஏன் நடக்க வில்லை.

Olber paradox க்கு என்ன விடை வைத்து இருக்கிறீர்கள் அதாவது நட்சத்திரங்கள் எல்லாமே நம்ம சூரியனை போல ஒளி பொருந்தியது என்றால் இந்த வானமே வெளிச்சமாக தானே இருக்க வேண்டும் ஒளியால் சூழ படாத வெளி பகுதி ஏதும் இல்லையே....

மைகல்சன் மார்லி சோதனை நினைவு இருக்கிறதா அதாவது ஒளியின் வேகத்தை அளக்கும் போது பூமி யின் தொடர்ச்சியான நகர்வதால் பாதிக்க பட்டு ஒளியின் வேகம் குறைந்து காண பட வேண்டுமே ஆனால் எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் ஒளியின் வேகம் மாறாமல் இருக்கிறதே ஏன்?

மேல் நோக்கி ஒரு தோட்டா சுட பட்டால் அது அதே இடத்தில் ஏன் விழுகிறது பூமி கிழக்கு நோக்கி சுற்றுவதால் மேற்கு கொஞ்ச தூரம் சென்று தானே தோட்டா விழ வேண்டும்.
மேலே விமானம் எழுந்து பறக்கும் போது கீழே பூமி சுழன்று நகர்ந்து விட்டிருக்க வேண்டுமே..

வேகமாக சுழல்வதால் ஏற்படும் விசை அல்லது g force போன்று எதையும் நாம் உணராதது ஏன்.

தட்டை உலக சமூகத்தை சார்ந்தவர்கள் நாசா விண்வெளி ஆய்வு எனும் பெயரில் செலவிடப்படும் பல கோடி கணக்காண பணத்திற்காக உலக மக்களிடையே பொய்களை அடுக்கி கொண்டே செல்கிறார்கள் ஏனைய உலக நாடுகள் இவர்களுக்கு உறுதுணையாக பொய் சொல்கின்றன என்கிறார்கள்.
Flat earth society காரர்கள் எத்தனை ஆதாரத்தை காட்டினாலும் நம்மிடையே உள்ள ஒவொரு ஆதாரத்திற்கும் எதிர் ஆதாரம்தான் அவர்களிடையே உண்டு ஆனால் அவர்களிடம் தட்டை உலகை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் இல்லை.
லாஜிக் என்று எடுத்து கொண்டால் ஒரு ஞானியையும் கூட நாம் பைத்தியகாரன் என்று நிரூபிக்க முடியும் தர்க்க ரீதியாக இருவரும் ஒன்று போல தான் இருப்பார்கள்.

செயற்கை கோள் வானிலை அறிவு எதையும் நம்பாமல் இவ்வளவு பெரிய உண்மையை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்றால் அவர்களிடம் சரியான பதில் இல்லை நட்சத்திரங்கள் பற்றி அவர்களிடையே விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை.
வானில் விமானம் எழும் நேரத்தில் பூமி கீழே வேகமாக நகர்ந்து சுழன்று விடுவது இல்லையே ஏன் என்று கேட்கும் அவர்கள் ஒரு வேகமாக செல்லும் ரயிலில் உள்ளே அமர்ந்து டென்னிஸ் பந்தை மேல் நோக்கி தூக்கி போட்டால் அது அவர்கள் கைக்கே திரும்ப வருகிறதே ... ரயில் வேகமான நகர்வதால் ரயில் சுவற்றில் அல்லவா மோதி இருக்க வேண்டும் . அப்படி நடகாததால் ரயில் நிலையாக உள்ளதாக அர்த்தமா ? என்பது போன்ற அவர்களால் பதில் சொல்ல முடியாத பதில் லாஜிக் கேள்விகளை கேட்க முடியும் என்றாலும் அந்த கொள்கையில் அவர்கள் அதீத நம்பிக்கை யோடு இருப்பதால் அவர்களை தொல்லை செய்யாமல் நாம் அடுத்த கோக்கு மாக்கு கோட்பாடை கவனிப்போம்.

அடுத்த கோக்கு மாக்கு கோட்பாடும் பூமியை பற்றியது தான் .....பூமியை பற்றி சிலரின் வேறு ஒரு கோக்கு மாக்காண நம்பிக்கையும் அது தொடர்பான கொள்கைகளும் ...
அடுத்த பகுதியில்....

sorce :

The Atlantean Conspiracy: 200 Proofs Earth is Not a Spinning Ball http://www.atlanteanconspiracy.com/2015/08/200-proofs-earth-is-not-spinning-ball.html?m=1 (Share from CM Browser)


                 *        *         *           *




"கோக்கு மாக்கு கோட்பாடுகள்"
( பாகம் 4 )
'பூமியின் தலையில் ஒரு ஓட்டை'


பூமியை நாம் அறிந்து வைத்துள்ள  வரையில் இது கடினமான மேல் ஒட்டை உடையது. உள்ளே செல்ல செல்ல திரவ நிலை அதிகரித்து செல்கிறது. மையத்தில் உருகிய இரும்பு மாற்றும் பாறை உள்ளது .
மேலும் உள் பகுதி நெருங்க முடியாத வெப்பநிலை யை கொண்டது (6000 டிகிரி செல்சியஸ்)
 பின் மேலே வர வர திடமாக கடினப்பட்டு..நாம் கண்ணால் பார்க்கும் மேலெடுக்கு ஒரு களிமண் போன்ற அமைப்பில் புதைத்து வைக்க பட்டுள்ளது. அந்த மேலெடுக்குகள் அந்த கூழ் அமைப்பின் மேல் சில இடங்களில் நகர்கிறது. சில இடங்களில் ஒன்றோடு ஒன்று முத்தம் இட்டு கொள்கிறது. அந்த முத்த சப்தத்தை தான் நாம் பூகம்பம் மற்றும் சுனாமியாக உனர்கிறோம்.

கடந்த பாகத்தில் உலகை தட்டை என்று நம்பும் அமைப்பினர் பற்றி சொன்னேன். இன்று நாம் பார்க்க இருப்பவர்கள் உலகை உருண்டை என்பதை ஒத்து கொள்கிறார்கள் ஆனால் அதன் அமைப்பை நாம் சொல்லும் விதத்தில் நம்புவது இல்லை. மாறாக அவர்கள் நம்பும் பூமி கோட்பாடு "hollow earth "  என்ற கோட்பாடு ஆகும்.

இன்று நாம் பார்க்க இருக்கும் கோக்குமாக்கு கோட்பாட்டாளர்கள் பார்வையில் பூமி பந்து முற்றிலும் வேறு வித அமைப்பை கொண்டது. அதாவது இந்த பந்து ஒரு மூட பட்ட உள்ளீடு உள்ள அமைப்பே அல்ல..

மணி மாலை ஒன்றில் ஒற்றை மணியை எடுத்து பார்த்தால் மணியின் மேலே கீழே ஓட்டை இருப்பதை போல பூமி வட தென் முனைகளில் ஓட்டை களை கொண்டது. அது மட்டும் அல்ல அது உள்ளே வெற்றிடமாகவோ அல்லது உள்ளே ஒரு கண்டதை கொண்டதாகவோ இருக்கிறது. இந்த கொள்கை படி உள்ளே ஒரு நெருப்பு கோளம் (சூரியன்??) உள்ளது அது தான் உள்ளே உள்ளவர்களுக்கு சக்தி அளிக்கிறது. உள்ளே வாழ்பவர்கள் பெரும்பாலும் மேலே இருப்பவர்கள் பற்றி அறிந்தும் சில பேர் அறியாமலும் இருக்கிறார்கள்.

பூமிக்கு வருகை தரும் பெரும்பாலான ஏலியன் கள் பூமிக்கு வெளியே இருந்து வருவது இல்லை... அவைகள் பூமி வாசிகளுக்கு தெரியாமல் பூமிக்கு உள்ளே இருந்தே வந்து போகின்றன.
மையத்தில் உள்ள உலகத்திற்கு செல்வதற்கு இரண்டு துருவங்களில் இரண்டு ஓட்டை தவிர ஹிமாலயாவில் மூன்றாவது ஒரு வாசல் இருக்கிறது.
Aurora borealis என்பது துருவ பகுதிகளில் சூரிய ஒளி வளிமண்டலத்தில்  ஓடுருவும் போது ஏற்படும் ஒளிநடனம்  என்பதை பற்றி கேள்வி பட்டிருபோம்... அது ஏற்படுவது உள்ளே உள்ள சூரியானால் தான் என்பது இவர்கள் கருத்து.
உலகம் வெப்பமயமாவதற்கு காரணமே உள்ளே உள்ள சூரியன் தான் என்கிறார்கள். அது மட்டும் அல்ல மனித குலம்  உருவானதே உள் பூமி யில் வாழும் சில ஊர்வன வாசிகளின் பரிசோதனையினால் தான் என்கிறார்கள்.

 உலகெங்கும் பல புராண கதைகளில் உள்ளே வெற்றிடம் கொண்ட பூமியை வர்ணிக்கிறது. சில மத நூல்களில் நரகத்தை குறிக்க பாதாள லோகம் வர்ணனை உள்ளது அது பூமிக்கு உள்ளே ஒரு உலகம் கொள்கையை பறைசாற்றுகிறது.
பழங்கால ஜெர்மன் புராணம் ஒன்று
ஏசினச் மற்றும் ஜெர்மனிக்கு இடையில் இருக்கும் ஒரு மலை தொடரில் பூமிக்கு உள்ளே அழைத்து செல்லும் வாசல் உள்ளதாக வர்ணிக்கிறது.
Trobiand தீவின் பூர்வ குடிகள் தங்கள் முன்னோர்கள் பூமியின் அடியில் இருக்கும் உலகத்தில் இருந்து வந்தவர்கள் என்று நம்புகிறார்கள்.
ரஷ்ய பழங்கதைகளில் சைபிரியன்கள் பூமிக்குள் சென்று அங்கே உள்ள நகரத்தில் குடி புக சென்றதற்கான குறிப்புகள் உள்ளன.
இப்படி உலகமெங்கும் பாதாள உலக குறிப்புகள் அது தொடர்பான கதைகள் ஏராளம்.

சரி உங்கள் புராண கதைகளை கொஞ்சம் மூட்டை கட்டி விட்டு நாங்கள் நம்பும் படியாக ஏதாவது ஆதாரம் இருந்தா கொடுங்க பாய்ஸ் என்று அவர்களை கேட்டால் அவர்களின் அறிவியல் பூர்வமான அல்லது ஆதார பூர்வமான பதில் என்ன என்பதை இனி பார்ப்போம்
பூமியின் நார்த் போலில் எடுக்க பட்ட நாசா வெளியிட்ட நாசாவின் அதிகார பூர்வ படங்கள் சிலதை அவர்கள் காட்டுகிறார்கள். அது நவம்பர் 23 இல் 1968 இல் ESSA 7 என்ற செயற்கை கோளால் எடுக்க பட்டது.

அதில் முதல் படத்தில் வட முனை மேகத்தால் சூழ பட்டு இருக்க அடுத்த படத்தில் மேகம் விலகிய நிலையில் வட முனையில் ஒரு பெரிய ஓட்டை இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

ஒரு  கால கட்டத்தில் விமானிகள் அந்த ஓட்டை மேல் பறந்ததாக சொன்ன ஆதாரங்கள் கூட  உண்டு. U. S நேவி யை சார்ந்த vice admiral richard E. Byrd என்பவர் மே 9 1926 இல் நார்த் பொலிலும்  நவம்பர் 29 . 1929 இல் சவுத் பொலிலும் பறக்க ஏற்பாடு செய்திருந்தார். அன்று பறந்தவர்கள் முனையில் பெரும் ஓட்டைகளை பார்த்ததாக சொன்னார்கள். Amadeo Giannini  என்பவர் அதை ஆராய்ந்து எழுத பட்ட கட்டுரை தொடர் புத்தகம் தான் " worlds beyond the poll ''

18 ஆம் நூற்றாண்டை சார்ந்த கணித மேதை Leonard Euler,  என்பவர் இவர்கள் கருத்தை ஆமோதித்தது இவர்களுக்கு பலம் சேர்க்கும் ஆதாரம்.

Hally யின் வால் நட்சத்திரம் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் நியூட்டன் புகழ் edmund hally கூட hollow earth இல் நம்பிக்கை கொண்டவர்தான்.

பூமியில் ஆழத்தில் கிடைத்த சில வைரங்கள் பூமியின் கீழ் மென்டல் பகுதியில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களாக விளங்குகிறது. இது கடல் உள்ளே இருந்து வருகிறது என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

இவர்களிடம் நிறைய ஆதாரங்கள் இப்படி நீண்டு செல்கின்றன என்றாலும்  இவர்களை எதிர்க்கும் பல ஆதாரங்கள் நம்மிடையே உண்டு...
உதாரணமாக பூமியின் ஈர்ப்பு விசை. அது உள்ளே போலாக இருக்கும் கிரகத்தில் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் நியூட்டன் போன்றவர்கள் நிறைக்கும் ஈர்க்கும் சக்திக்கும் உள்ள தொடர்பை விளக்கிய பின் இந்த ஈர்ப்பு கொண்டுள்ள பூமி உள்ளே எவ்வளவு நிறை கொண்டது என்பதை சமன்பாடு ரீதியாக நாம் அளந்து விடலாம்.
மேலும் நேரடி ஆதாரங்களாக பூமியில் சில பகுதியில் போட பட்ட மிக ஆழமான துளைகளை சொல்லலாம்.

ஆனால் இந்த கோட்பாடை நம்பும் சிலரும் இருக்க தான் செயகிறார்கள்.

சரி நாம அடுத்த கோக்குமாக்கு கோட்பாடை பார்ப்போம்.


Sorce :

13 Pieces of Evidence Supporting the Hollow Earth Hypothesis | Humans Are Free http://humansarefree.com/2015/09/13-pieces-of-evidence-supporting-hollow.html?m=0 (Share from CM Browser)



              *        *        *        *



"கோக்கு மாக்கு கோட்பாடுகள்"

(பாகம்: 5) "சில விசித்திர கோட்பாடுகள்"



இந்த பாகத்தில் குட்டி குட்டியாக 4 ..5.. வரியில் சில விசித்திர கோக்கு மாக்கு கோட்பாடுகளை பார்க்கலாம்.

முதலில் zoo theory :

இந்த தியரி படி ஏலியன்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு போதும் தன்னை மனித இனத்துக்கு வெளி காட்டிக்கொண்டது இல்லை.
நம்மை விட அவைகள் மிக மிக அதிக அறிவியல்  வளர்ச்சி கொண்டவை என்பதால் நாமெல்லாம் ஜூ வில் உள்ள மிருகங்கள் கண்காணிக்க படுவதை போல கண்காணிக்க  பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஜூ மிருகங்களுக்கு தான் கண்காணிக்க படுவதை வேடிக்கை பார்க்க படுவதை குறித்த எந்த அறிவும் இல்லை என்பதை போல தான் நாம் கண்காணிக்க படுவதை நம்மால் உணர முடியாது.
மனித குலம் மொத்தம் மிக வளர்ந்த நிலைக்கு செல்லும் வரை அந்த ஏலியன்கள் தன்னை வெளி படுத்தி கொள்ள போவது இல்லை.

clock work universe theory :

இந்த கோட்பாடு படி மொத்த பிரபஞ்சமும் சக்தி வாய்ந்த ஏதோ ஒன்றால் இயக்க படும் ஒரு மெக்கானிக்கல் கடிகாரம் போன்ற அமைப்பு ஆகும். அந்த சக்தி இயற்பியல் விதிகள் படி மொத்தத்தையும் இயக்கி கொண்டு இருக்கின்றன. இதில் அந்த சக்தி கடவுளை நினைவு படுத்தினாலும் இங்கே அதன் வேலை பிரபஞ்சத்தை ஓட வைத்து இயக்குவதுடன் நின்று விடு கிறது.
கால போக்கில் இக்கொள்கை குவாண்டம் கோட்பாடால் மறுதலிக்க பட்டது.

The garbage theory :

மனித குலம் தோன்றிய விதத்தை கொஞ்சம் முகம் சுளிக்கும் வகையில் சொல்ல பட்ட ஒரு கோட்பாடு.
இதன் படி பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏலியன்கள் தங்கள் குப்பைகளை பூமியில் கொட்டி விட்டு சென்றனர் . (அமேரிக்கா அணு கழிவை இந்தியா வில் கொட்டுவதை போல)
அந்த கழிவுகளில் இருந்து முளைத்து வந்த காளான்கள்கள் தான் மனித இனம்.

சூரியனை பற்றிய கோட்பாடு :

இது மனிதன் ஒரு காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கை  கோட்பாடு.
சூரியன் என்பது தொடர்ந்து அணுக்கரு இணைவு நடத்தி கொண்டிருக்கும் ஒரு மெகா நியூக்ளியர் ரியாக்டர் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் 17 ஆம் நூற்றாண்டு மனிதர்கள் அதில் உயிர் வாழ முடியும் என்று நம்பினார்கள். யூரேனஸை கண்டு பிடித்த வானிலை அறிஞர் வில்லியம் ஹெர்ஷல் கூட சன் ஸ்பாட் என்பது சூரியனில் மேகம் விலகும் போது தெரியும் மலையின் உச்சி பகுதி என்று கருத்து தெரிவித்தார்.

Space time super fluid :

இந்த கோட்பாடு நிஜமாக ஒரு 'லேடரல் தின்கிங்' தான்.
அதாவது மோட்டார் இன்ஜின்கள் உராய்வு குறைத்து லகுவாக இயங்க இன்ஜின் ஆயில் கள் பயன் படுவது போல..
அதாவது மொத்த பிரபஞ்ச இயக்கமும் வழுக்கி செல்ல உதவும் ஒரு மிக குறைந்த உராய்வு திறன் கொண்ட ஒரு திரவம் தான் ஸ்பேஸ் டைம் என்பது.
மொத்த பிரபஞ்சமும் அதில் தான் வழுக்கி செல்கிறது.

Miniature universe :

ப்ளாக் ஹோல் களால் உறிஞ்ச படும் காலக்சிகள் வேறு இடங்களில் அழுத்த பட்டு அதிக அழுத்தத்தில் நுனுக்கி சின்னதாக பல காலக்சிகளை வெளியே தள்ளிகிறது.

White hole exists :

பிரபஞ்சத்தில் பிளாக் ஹோல் மட்டும் அல்ல வைட் ஹோலும் உண்டு அது பிளாக் ஹோலின் அடுத்த முனையில் தொடர்பு கொண்டு இருக்கிறது.
ஆய்வாளர்கள் கருத்து படி அப்படி ஒன்று இருந்தால் அது நாம் பிளாக் ஹோலை வர்ணிப்பதை போன்றே இருக்கும் ஆனால் தலைகீழாக செயல் படும் அதாவது அது உறிஞ்சும் என்றால் இது மொத்த பிரபஞ்சத்தை வெளியே துப்பும்.

உலகம் பல விசித்திர அறிவியல் உண்மைகளாலும் அறிவியல் கோட்பாடுகளாலும் நிரம்பி உள்ளது...
அதில் எது உண்மை எது பொய் என்ற கேள்விக்கு விடை அந்த 4வது டைமன்ஷன் இடம் தான் உள்ளது. (காலம்).

வேறு அறிவியல் உண்மைகளுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்..

அன்பு நண்பன்
அறிவியல் காதலன்
ரா.பிரபு

 கருத்துகளுக்கு வாட்ஸ் அப் எண் :
9841069466

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"