கால பயணம் சாத்தியம் என்ன (full part)

"கால பயணம்"
"சாத்தியம் என்ன "(பாகம் 1)

"அறிவியல் காதலன்"

(கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு)

தொடங்கும் முன்.....

'டைம் ட்ராவல் என்பது ஒரு கட்டுக்கதை ..அது திரைப்பட கதைகளில் வரும் கற்பனை தவிர வேறு இல்லை '-என்பதை ஆணித்தரமாக நம்பும் நபரா நீங்கள் எனில் உங்களுக்காக இரண்டு விஷயங்களை நான் சொல்ல வேண்டும் ..

முதலில் ஒரு சம்பவம்..
 இது ஹார்ட்வெட் பல்கலை கழகத்தில் தாவரவியல் ஆய்வாளர்கள் சக்திவாய்ந்த புகை பட கருவியை கொண்டு ஒரு செடியில் மொட்டை படம் எடுத்த போது நடந்தது... 
அந்த புகை படத்தில் மொட்டுக்கு பதில் ஒரு மலரின் புகை படம் கிடைத்தது... சரி ஏதோ டபுள் எக்ஸ்போசன் போல சமாச்சாரம் என்று விட்டு விட்டார்கள் அதன் பின் அந்த மொட்டு மலர்ந்த போது காத்திருந்தது ஆச்சர்யம்.
அது அந்த புகை படத்திற்கு 100 சதம் ஒத்திருந்தது.
இது எப்படி நிகழ்ந்தது என விளக்கம் கேட்டதற்கு பல குழப்பத்திற்கு பின்..அவர்கள் கொடுத்த விளக்கம் ..
 ' எதிர்காலம் என்பது இப்போதே இங்கயே வேறு ஒரு லேயரில்... நம்மால் உணர முடியாத பரிமாணத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ..இந்த கருவி அதை புகை படம் பிடித்து இருக்கிறது..'

இரண்டாவதாக...

இன்றைய அதிநவீன அக சிவப்பு கேமராவை கொண்டு ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்து ...எழுந்து சென்ற ஒரு காலி நாற்காலியை படம் பிடித்தால் ஒரு நிழல் உருவமாக அந்த நபர் யார் என்பதை கண்டு கொள்ள முடியும் (அவரது உடல் வெப்பம் கொஞ்ச நேரம் நாற்காலியில் தங்கி இருப்பது தான் காரணம்) எனில் என்ன பொருள்.. அந்த கருவி அந்த நாற்காலியின் கடந்த காலத்தை புகை படம் எடுத்துள்ளது என்று சொல்லலாமா?
இன்றைய தொழில்நுட்பத்திற்கு 5 அல்லது 10 நிமிட காலத்தை பிடிப்பது சாத்தியமாக இருக்கலாம் எதிர்காலத்தில் அது நீட்டிக்கபடலாம்..கூடவே அதில் பயண படவும்...(ஒரு காலத்தில் நிலவை படம் எடுத்தவன் பிறகு ஒரு நாள் அங்கே பயணம் சென்றதை போல)

இந்த time dilation என்கிற கால வேறுபாடு என்பதன் நீட்சிதான் time travel ஆக முடிகிறது.
 time dilation இல் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.. நமது ஈர்ப்புவிசை எல்லையை தாண்டி இருக்கும் செயற்கை கோள்களில் இந்த கால  மாறுபட்டால் அதில் அமைக்க பட்டுள்ள அதி நுட்பமான கடிகாரங்கள் எப்போதுமே பூமியில் உள்ள கடிகாரங்களுக்கு பொருந்தாத தவறான நேரத்தையே எப்போதும் காட்டுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? 
அது மேட்ச் ஆவதற்கு தன்னை தானே திருத்தி கொள்ளும் படி அவைகள் வடிவமைக்க பட்டிருக்கின்றன.
உலகில் பல மூலைகளில் இருந்து பல பேர் தான் டைம் ட்ராவல் பண்ணதாக (ஏதோ சினிமாக்கு போயிட்டு வந்ததை போல )ஆங்காங்கே பேட்டி கொடுப்பார்கள் அவற்றில் பெரும்பாலும் பக்கா கட்டுக்கதைகள்...

இந்த குருட்டாம் போக்கு நம்பிக்கை...கற்பனை கதை என்ரெல்லாம் இல்லாமல்
இந்த time dilation ..time travel இதெல்லாம் எப்போ எப்படி எந்த சித்தாந்த அடிப்படையில் நடைமுறை சாத்தியம் ??
அதற்கு அறிவியல் ரீதியாக சாத்தியகூறு மற்றும் நிரூபணம் ஏதாவது  இருக்கிறதா? அதை கொஞ்சம் பார்க்கலாம்...

இரண்டு விதமான சூழ்நிலைகள் இருக்கின்றன... இது நடக்க ..

ஒன்று 

ஒளியின் வேகத்தில் பிரயானிதால் இந்த விசித்திரம் நிகழ்கிறது.. 
இனொன்று பிளாக் ஹோல் போன்ற அதீத அக்ரஷன சக்தி கொண்ட பொருள் அருகில் செல்லும் போது காலதில் பயணம் செய்யும் சாத்தியம் உருவாகிறது .. 
இது இரண்டு முக்கியம் என்றாலும் மேலும் சில சாத்தியகூறுகளும் இருக்கின்றன..
அதெல்லாம் என்ன எப்படி என்பதை ஒவொன்றாக பார்ப்போம்...

முதலில் ஒளி வேகத்தில் சென்றால் என்ன நடக்கிறது என்று பாப்போம்..
இதை ஆராய்வதற்கு நமக்கு ஒரு மாமேதையின் ...அவருடைய கோட்பாட்டின் உதவி தேவை உலகில் யாராலும் அவர் உதவி இல்லாமல் இந்த டாபிக் ஐ முடிக்க முடியாது... அந்த அப்பாடக்கர் யார் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும்...
ஐன்ஸ்டைன்...
அவருடைய சார்பியல் கோட்பாடுகள் முழுதுமே விசித்தரங்கள் அடங்கிய ....நமது அன்றாட பவுதீக  புரிதலுக்கு அப்பார் பட்டது தான்.. (அவரது கோட்பாடுகள் குறித்து விரிவாக எனது 'சார்பியல் எனும் சமுத்திரம் இல் 5 பாக கட்டுரையாக எழுதி இருந்தது நினைவிருக்கலாம்)
அவர் கோட்பாடு என்ன சொல்கிறது?
ஒளி வேகத்தில் பிரயாணம் செய்தால் நமக்கு நேரும் பல விசித்திர விளைவுகளை... நிகழ்வுகளை .. அந்த கோட்பாடு சொல்கிறது. உதாரணமாக ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க உங்கள் நிறை கூடி கொண்டே போகிறது.... நீங்கள் பயணிக்கும் திசையை நோக்கி நீங்கள் கொஞ்சம் சுருங்குகிறீர்கள்... அப்புறம் ஒளி வேகத்தை எட்டும் போது உங்கள் நிறையும் அதை நகர்த்துவதற்கு தேவை படும் ஆற்றலும் முடிவிலி யாக அதிகரிக்கிறது...(E=mc 2 effect) அப்புறம் உங்கள் காலம்? ? அது சாமாண்யனை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட நின்று விடுகிறது...

ஐன்ஸ்டைனின் ஸ்பெஷல் ரிலேடிவிட்டியை விளக்கும் Paul langevin
என்பவரின் twin paradox (தமிழில் இரட்டை முரண்மை என்று சொல்லலாம்) ஐ நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் .
அதாவது ஒரு இரட்டை சகோதரர்கள்... அவர்களுக்கு ஒரு 10 வயசு இப்போ என்று வைத்து கொள்ளுங்கள் திடீர் என்று ஒரு நாள் அதில் ஒருவர் ஒரு ராக்கெட்டை பிடித்து விண்வெளி பயணம் சென்று விட்டார் என கொள்வோம் ... என்ன... அவர் சென்ற ராக்கெட் ஒளி வேகத்தில் செல்ல கூடியது... (வினாடிக்கு 3 லட்சம் கிமி)இப்படி ஒரு 10 ஆண்டுகள் பயணம் சென்று விட்டு பூமி திரும்பினால் அவர் என்ன காண்பார்?? 
அவர் இரட்டைக்கு இப்போ வயசு 20 இருக்கும் (அதானே நியாயம்) ஆனால் பயணம் சென்ற சகோதரனுக்கு இப்போ வயசு வெறும் 13 அல்லது 14 ... காரணம் அவர் ஒளி வேகத்தில் செல்லும் போது வெளியை கடக்கும் போது காலத்தையும் சேர்ந்தே கடந்துள்ளார்...ஐன்ஸ்டைன் தத்துவத்தின் படி ஒளி வேக பிரியாணிக்கு இதான் நடக்கும் ..மேலும் அவர் தத்துவத்தின் படி காலமும்( time) வெளியும் (space) வெவேறு அல்ல அது spacetime... நீங்கள் இதில் ஒன்றை கடந்தால் மற்றத்தையும் சேர்ந்தே கடபீர்கள்..

"இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு " 
என்று நீங்கள் கேட்பீர்களேயானால்.....
ஐன்ஸ்டைன் காலத்தில் இதை விட பயங்கரமாக அவர் கோட்பாட்டை கேலி செய்தார்கள் .. அதற்கு காரணம் அவரது அற்புத கண்டுபிடிப்புகள் எந்த ஆய்வு கூடத்தில் அவர் சோதித்து பார்த்தது அல்ல ..
அந்தளவு வசதி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அந்த காலத்தில் இருந்திருக்க வில்லை அதன் பின் வந்தவர்கள் கிட்ட தட்ட 20 கிமி சுற்றலவில்  அமைந்துள்ள cern ஆய்வகத்தில் ஹைட்ரான் கொலைடர் எனும் ராட்சத கருவியில் சில நுண்துகள்களை ஒளிக்கு நெருக்கமான வேகத்தில் முடுக்கி பரிசோதித்தார்கள்... அந்த நுண்னுகள் வினாடியில் சில பிரிவில் வாழும் ஆயுட் காலம் கொண்டவை அவைகளை கிட்ட தட்ட ஒளி வேகத்தில் பிரயாணம் செயவித்து பார்த்தபோது ஐன்ஸ்டைன் சொன்னதற்கு இம்மி பிசகாமல் அவற்றின் ஆயுட் காலம் அதிகரித்தது தெரியவந்தது...
ஐன்ஸ்டைன் வெறும் கற்பனையை பயன்படுத்தி பிரபஞ்சத்தின் இவ்வளவு ஆழமான உண்மைகளை எப்படி அவர் கண்டு கொண்டார் என்பது தான் இன்று வரை மகா சஸ்பென்ஸ்..

இரண்டாவதாக ....

ஈர்ப்புவிசை...

அதீத ஈர்ப்புவிசை எதையும் ஈர்க்க கூடியது ...உங்களையும் என்னையும் அப்புறம்....காலத்தையும்...
இதற்கும் நாம் மீண்டும் ஐன்ஸ்டைனையே நாட வேண்டி உள்ளது ஈர்ப்பினால் வெளி வளைகிறது என்று அவர் எந்த ஆய்வும் இன்றி(வழக்கம் போல்) சொன்னார். வெளி வலைந்தால் காலம் வளையும் காரணம் இரண்டும் வெவேரல்ல என்று ஏற்கனவே சொன்னோம் ... 
அவரது வெளி வளைவு கொள்கை அவர் சொன்ன பின் 5 ஆண்டுகள் கழித்து சூரிய கிரகணத்தின் போது ஆய்வாளர்களால் சோதித்து பார்க்க பட்டது... அதாவது  சூரியனை சுற்றி உள்ள வெளி அதன் ஈர்ப்பு விசையால் வலைந்துள்ளது உண்மை என்றால் கிரகணத்தின் போது... அதற்கு பின்னால் உள்ள நட்சத்திர கூட்டத்தில் இருந்து வரும் ஒளியானது சூரியனை சுற்றிக்கொண்டு (அதன் வளைந்த வெளி வழியாக) நம்மை வந்து சேரவேண்டும்....
அது கரெக்டாக வந்து சேர்ந்து... ஐன்ஸ்டைனுக்கு சல்யூட் அடித்தது...

பிரபஞ்சத்தின் அதீத ஈர்ப்பு விசை கொண்ட பொருள் யாதெனில் அது  பிளாக் ஹோல் என படும் கரும் பாழ் அல்லது கரும்துளை... 
நமது மொத்த பால்வெளி திரலை தாங்கி பிடித்து சுழல செய்து கொண்டிருப்பது ஒரு சூபர்மாசிவ் பிளாக் ஹோல் தான் .அப்படி பட்ட சங்கதிகலின் அருகில் செல்லும் போது காலம் கிட்ட தட்ட நின்று விடும் என்கிறார்கள் ..

அங்கே அதன் அருகில் (interstellar படத்தில் வருவது போல)ஒரு வருடம் டூர் சென்று வந்தால் இங்கே பூமியில் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்...

நமது அடுத்த சாத்திய கூறு பற்றி சொல்லவேண்டும் என்றால் அது பிரபஞ்சத்தின் ஷார்ட் கட்  என்று சொல்லலாம் அதன் பெயர் worm hole இதை பற்றி இரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சுக்கு மயிலாப்பூரில் ஒரு இடத்தில் worm hole இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அங்கே நீங்கள் போய் உங்கள் தலையை விட்டால் நேரே மாயா ஜால படத்தில் வருவதை போல திருவண்ணாமலையில் எட்டி பார்ப்பீர்கள் அதாவது இங்கே இருந்து அங்கேகான காலத்தையும் ..... இடைவெளியையும் நீங்கள் கடந்து விடீர்கள்... (worm hole பற்றி "வாம் ஹோல்  பிரபஞ்சத்தின் குறுக்கு வழி " கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன்)
 Time travel பற்றி ... அது சாத்தியமானால் ஏற்படும் முரண்பாடுகள் பற்றி (உதாரணமாக grand father paradox) ..அதில் உள்ள நடைமுறை சிக்கல் பற்றி நிறைய பார்ட் கட்டுரை எழுதலாம்...
இந்த கட்டுரை அதன் நடைமுறை சாதியத்தை ஆராயும் ஒரு சிறு அறிமுகம் தான்..
காரணம் இப்போது நவீன விஞ்சாணம் time travel ஐ relativity theory  ஐ வைத்து விளக்கி கொண்டிருப்பதை கொஞ்சம் பின்னால் வைத்து விட்டு quantum mechanism கொண்டு அதிகம் விளக்கு கிறது....
அதற்கு ....
முதலில் குவாண்டம் பிஸிக்ஸ் இன் அறிமுகம் தேவை...
அடுத்த சாத்திய கூறை பார்ப்போம்...

தொடரும்.......



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






கால பயணம்
சாத்தியம் என்ன (பாகம் 2)
(வார்ம் ஹோல்)

அறிவியல் காதலன்

( ரா.பிரபு)

time travel என்று வரும் போது உண்மையாகவே யாராவது time travel பண்ணி இருக்கிறார்களா..
அப்படி யாரையாவது நாம் சந்தித்து இருக்கிறோமா இல்லையா என்ற கேள்வி எல்லோருக்கும் வருவது இயல்புதான்.
(இருக்கிற கூட்ட நேரிசல்ல டைமுக்கே travel பண்ண முடில அப்புறம் எங்கேயிருந்து டைம் டிராவல் என்கிறீர்களா)

அவ்வபோது உலகத்தில் திடீரென்று ஆங்காங்கே பல பேர் தான் கால பயணம் செய்ததாக.... அங்கே எதிர் அல்லது கடந்த காலத்தில் தன்னையே பார்த்ததாக அல்லது எதிர்கால நிகழ்வுகள் பார்த்ததாக எல்லாம் சொல்லுவார்கள்... அடித்து சத்தியம் கூட செய்வார்கள்...
அவர்களில் பெரும்பாலானவர்கள் time travel குறித்து நமக்குள்ள curiosity ஐ ஊறுகாய் ஆக்கி புகழ் தேடுபவர்கள்..

என்றாலும்...

சில பேர் அதாவது போலி புகழ் தேடாத... பொய் சொல்ல அவசியம் இல்லாத பல பேர் பல விதமான விசித்திர கால மாறுபாடு அனுபவங்களை சொல்வது உண்டு.... 
உதாரணமாக ஒரு பைலட் ஒருமுறை தனது பயணத்தில் சில வினாடி நேரத்திற்கு கண்மூடி திறந்த போது ஏதோ திடீர் காட்சி மாற்றம் போல உணர்ந்தார்... என்னடான்னு உத்து பார்த்தால் தான் மிக சில வினாடிக்கு முன் இருந்த இடத்திலிருந்து பல ஆயிரம் மைல் வெளி மற்றும் காலத்தை சும்மா மேஜிக் பன்னி கடந்தது போல கடந்துள்ளார்...(மற்ற பயணிகள் யாரும் எதையும் உணரவில்லை அவர்கள் முழு பயணத்தை சாதாரணமாக உணர்ந்தார்கள் என்பது கூடுதல் விசித்திரம்)

இப்படி நிறைய அனுபவ கதைகள் இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் ஆதாரம் ..போட்டோ... வீடியோ எல்லாம் கேட்டால் ஒன்னும் இல்லையே தம்பி அடுத்த முறை வேணா எடுத்து வைக்கிறேன் என்பார்கள்..(இதில் என்ன விசேஷம் என்றால் பரபரப்புக்காக திட்டமிட்டு கதை விடுபவர்கள் நாம் நம்பும் விதமான எக்கச்சக்க ஆதாரம் வைத்திருப்பார்கள்)
எது எப்பிடி ஆயினும் அறிவியல் ஆதார அடிப்படையில் மட்டுமே பேச பட மற்றும் ஏற்று கொள்ள படுவதால்...
ஏற்று கொள்ள பட்ட டைம் டிராவல் என நாம் யாரை சொல்லலாம் என்றால்...அது Sergei Vasilyevich Avdeyev போன்றவர்களை தான்..

யார் இந்த S V A என்றால் (பெயர் அநியாயத்துக்கு எடக்கு முடக்காக இருப்பதால் சுருக்கி விட்டேன்)  இவர் 1989 வாக்கில் இருந்த ஒரு ரஸ்ய விண்வெளி வீரர்.
(பார்க்க இணைப்பு படம்)
இவர் விண்வெளியில் மொத்தம் 747.59 நாட்கள் தங்கி இருந்தவர் மேலும் 11968 முறை பூமியை அதன் சுற்றுவட்ட பாதையில் சுற்றியவர்...515,000,000 கிமி யை கடந்தவர்...
எனவே சிறப்பு சார்பியல் கோட்பாடு படி அவர் டைம் டைலேஷனை சந்தித்தவர்... இவர் கிட்ட தட்ட 750 நாள் விண்வெளியில் சுற்றி இவர் பயணம் செய்த கால பயணம் எவ்வ்ளவு தெரியுமா.. 0.02  வினாடி .
அதாவது 20 மில்லி வினாடி...
அதாவது பூமியில் உள்ளவரை ஒப்பிடும் போது இவர் 0.02 வினாடி இளமை யாகி இருப்பார்...இதை செய்த ஒரே மனிதர் இவர் அல்ல..  இன்னும் பல பேர் நம்ம SVA வின் சாதனை யை முறியடித்தாலும் அவர்கள் வெளியில் தங்கி இருந்தது சில நாட்களுக்கு மட்டும் தான்...

சொல்ல போனால் விண்வெளி வீரர் மட்டும் அல்ல நாம் ஒவ்வொருவருமே பஸ்சிலோ அல்லது ட்ரெயினிலோ பயணம் செய்யும் போதும் கோட்பாட்டின் படி காலத்தில் பயணம் செய்யத்தான் செயகிறோம்... ஆனால் அது பல கோடியில் ஒரு பிரிவு என்கிற அளவு நடப்பதால் அதை எந்த வகையிலும் நாம் உணரவோ அல்லது உலகின் எந்த கருவியை கொண்டும் அலக்கவோ முடியாது...

அடுத்ததாக சில ஆய்வாளர்கள்  பிரமிட்களின் அருகில் time dilation ஏற்படுவதாக சொல்கிறார்கள் அங்கே அருகில் போய் மிக நுட்பமாக படம் பிடிக்கும் கமெரா கொண்டு வீடியோ எடுத்து பார்த்தால் தூரத்தில் இருப்பபவை எல்லாம் கொஞ்சம் பார்ஸ்ட் பார்வட் இல் நிகழ்வதை போல வேகம் கூடி இருப்பதை போல தெரிவது தெரிகிறதாம்.
அதாவது பிரமிட் அருகில் காலம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. இங்கேயும் வித்யாசம் மிக மிக சிறியது என்பதால் நம்மால் அதை இயல்பாக உணர முடியாது.

 இந்த கட்டுரை முதல் பாகத்தில் கால பயன சாத்திய கூறை ஆராய்வதில் ஒளி வேகத்தில் மற்றும் அசாத்திய ஈர்ப்பு விசையை என்ன நேரும் என்று விரிவாக சொன்னேன் கூடவே worm hole பயன்படுத்தி time travel பண்ணலாம் என்பதை ரத்தின சுருக்கமாக சொல்லி இருந்தேன்.
இந்த worm hole டைம் ட்ராவலில் முக்கிய பங்கு வகிப்பதால்
அது என்ன ஏது சமாச்சாரம் என்பதை அறியாதவர்களுக்கு மட்டும்...அதை பற்றி கொஞ்சம் விரிவாக இப்போது சொல்லாம் என்று இருக்கிறேன்.

(குறிப்பு: இப்போது பின்னால் தரப்போகும் பதிவு முழுக்க முழுக்க என்னுடைய "வாரம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட்" என்ற கட்டுரையின் காபி பேஸ்ட் ஆகும்)

இந்த worm hole அதாவது தமிழில் புழு துளை என்று சொன்னால் என்னையா பேரு இது என்று நினைப்பீர்கள் ஆனால் பின்னால் இதன் பெயர் காரணத்தை விவரிக்கும் போது ஏற்று கொள்வீர்கள்.

இந்த வார்ம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட் என்று சொல்லலாம். ஓளி வேகத்தில் பாய்ந்தும் பல ஆயிரம் ஆண்டுகள் கடக்கும் காலத்தையும் வெளியையும் இதை பயன்படுத்தி வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடக்கலாம்.
இந்த worm hole ஐ புரிந்து கொள்ள எனது 'சார்பியல் எனும் சமுத்திரத்தில் '3 வது பாகத்தில் நான் சொன்ன அதே எடுத்துகாட்டை மீண்டும் பயன்படுத்து கிறேன்.

அதாவது நீங்கள் மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது அந்த புள்ளியில் நீங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நாகர்கோவிலில் எட்டி பார்ப்பீர்கள் அந்த புள்ளிக்கு பெயர் தான் worm hole .
இயற்கையில் இது மயிலாப்பூரில் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய இடத்தில உள்ளது .இதை வைத்து பல ஒளி ஆண்டு தொலைவை ஒரே வீநாடிக்கும் குறைவான நேரத்தில்  கடக்கமுடியும்.
அப்படி வெளியை கடந்தால் இன்னொன்றையும் தானாகவே நாம் கடக்க வேண்டிவரும் அதுதான் காலம்..

உதாரணமாக நமக்கு மிக அருகில் இருக்கும் அடுத்த காலக்சி  பெயர் ஆன்றோமீடா இதை நாம் சென்றயடைய 25 ஒளி ஆண்டுகள் ஆகும் . அதாவது ஒளி வேகத்தில் சென்றால்....ஆனால் இவ்வளவு பெரிய தூரம் மற்றும் வெளியை worm hole பயன்படுத்தி ஒரே வினாடியில் சென்று வரலாம்.
ஐன்ஸ்டைன் கூற்றுப்படி வெளியை சுருட்ட.. வளைக்க ..விரிக்க முடியும்..அப்படி சுருட்டி ஒண்ணா 'பின் 'போட்ட புள்ளி தான் வார்ம் ஹோல்.. புரியலயா? சரி விடுங்கள்.

 ஒரு வெள்ளை தாளை எடுத்து கொள்ளுங்கள்... இப்போது இது பேப்பர் அல்ல இதான் வானம் அல்லது வெளி என்று நினைத்து கொள்ளுங்கள் இதில் இடது பக்கத்தில் தொடக்கத்தில் ஒரு புள்ளியை வையுங்கள் இதுதான் நாம் இருக்கும் பால் வெளி திரள் நமது galaxy... இப்போது வலது பக்க கடைசில ஒரு புள்ளி வையுங்கள் .இதுதான் ஆந்திரா... சாரி ஆண்ட்ரோமிடா.. நமது பக்கத்துக்கு galaxy.. இப்போது இந்த ரெண்டு பள்ளியையும் பென்சிலை கொண்டு இணையுங்கள்... இந்த கோடுதான் 25 ஒளி ஆண்டுகள் .அதாவது இந்த புள்ளியிலிருந்து அந்த புள்ளியை அடைய நீங்கள் இந்த கோடு வழியாக தான் சென்றாக வேண்டும் (அவ்வளவு காலம் மற்றும் தூரம்)

இப்போது அந்த பேப்பரை அப்படியே சுருட்டி அந்த ரெண்டு புள்ளியை இணையுங்கள் ... சந்திக்கும் இடத்தில ஒரு குண்டு ஊசியை குத்துங்கள் ...அந்த புள்ளிதான் வார்ம் ஹோல்..

இப்போது இரு புள்ளிகளுக்கிடையான கால மற்றும் வெளி இடைவேளை எவ்வளவு... அது கிட்ட தட்ட zero .. இந்த புள்ளி முடியும் அதே புள்ளியில் அந்த புள்ளி தொடங்குகிறது. .
இரு வானங்களை இணைக்கும் இந்த சுரங்கம் மாதிரியான அமைப்பை கொண்டு நாம் விண்வெளியில் கற்பனை பண்ண முடியாத தூரம் பயணம் பண்ணலாம் .

இரண்டு ப்ரபஞ்சகளுக்கு இடையிலான கதவு தான் இந்த worm hole இதை பயன் படுத்தி சென்று விட்ட உங்களை பிடிக்க பூமியிலிருந்து அதிவேக ராக்கெட் எடுத்து கொண்டு கிளம்பும் உங்கள் நண்பர் உங்களை பிடிக்க பல லட்சம்...கோடி ஆண்டுகள் ஆகும்.(Thore படத்தில் இந்த worm hole ஐ பயன்படுத்தி தான் நமது பூமிக்கு வந்து சேருவார்.. சுத்தி மன்னன் தார்..)

ஒரு ஆபிளில் மேல் தட்டையான இரண்டு புழுக்கள் அமர்ந்திருந்தன..
அவைகளின் பார்வையில் ஆப்பிள் ஒரு தட்டை பரப்பு 2d வடிவம் என நம்பி கொண்டிருந்தன... (நாம் நீண்ட காலமாக பூமியை நம்பிக்கொண்டிருந்தை போல) அதில் ஒரு புழு ஆப்பிலின் அடுத்த முனையை தேடி புறப்பட்டது..
அது நகர்ந்து செல்ல செல்ல ஆப்பிள் வளைவில் மறைவதை புழு நம்பர் ஒன் கவனித்தது(கடலில் செல்லும் கப்பல் கடற்கரையிலிருந்து கவனிக்கும் போது பூமி வளைவு காரணமாக குறிப்பிட்ட தூரம் சென்ற பின் வளைந்து மறைவதை போல)... அடடா இவ்ளோ நாளா நாம நம்பி வந்தது மாதிரி ஆப்பிள் ஒரு 2d அமைப்பு அல்ல அது வளைந்து உருண்டையாக 3d வடிவத்தில் உள்ளது என்பதை அது கண்டு கொண்டது ...எனவே அந்த ஆப்பிளை அப்படியே துளையிட்டு அடுத்த முனைக்கு தனது நண்பணை விட வேகமாக சென்றடைந்து லேட்டா வந்த நண்ப புழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது...

Worm hole கு என்னடா பேர் வைக்கலாம் என்று விண்ஞாணிகள் குழம்பி கொண்டிருந்த போது இந்த எடுத்து காட்டை சொல்லி விட்டு ஜான் அர்ச்சிபால்ட் வீலர் என்பவர் அந்த துளைக்கு புழு துளை( worm hole) என பெயரிட்டார்.

வாரம் ஹோல் எங்கே இருக்கு அதை கண்டு பிடித்து விட்டார்களா என்றால் அது இருக்கு ஆனா இன்னும் பயன்படுத்தும் விதமா இல்ல மற்றும் கண்ணுக்கே தெரியாத மிக சின்ன வடிவில் இருக்கு .... அது கணிக்கவே முடியாத மிக குறுகிய காலத்தில் உண்டாகி மறைகிறது ...இப்படி பல கதைகளை சொல்கிறார்கள்...
எது எப்படியோ எதிர்காலத்தில் நாம் ஸ்பேஸ் டிராவல் பண்ண வேண்டும் என்றால் இந்த நேஷனல் ஹைவேசை பயன்படுத்தினால் தான் முடியும்..

கால பயணதின் சாத்தியங்கள் தொடரும்...





~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~





கால பயணம்
சாத்தியம் என்ன ( பாகம் 3)
டெலிபோர்டேஷன்

அறிவியல் காதலன்

( ரா.பிரபு)

மரணப்படுக்கையில் இன்றிரவுக்குள் எப்படியும் காலி என்கிற சூழ்நிலையில் இருக்கும் வீட்டில் என்றைக்காவது இருந்திருக்கீறீர்களா?
அல்லது ஆசிரியர் நமக்கு சுத்தமாக பிடிக்காத சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டிருக்கும் வகுப்பில்....??
அப்போதெல்லாம் காலம் மிக மிக மெதுவாக ஒடுவதாக உணர்ந்திருப்பீர்கள் அல்லவா..
இதுவே நண்பர்களுடனான பார்ட்டி அல்லது காதலியுடன் சாட்டிங் என வரும் போது காலம் ,'போனதே தெரியல பா' என்கிற அளவு வேகமாக ஓடுவதையும் உணர்ந்திருப்பீர்கள்...

இதெல்லாம் ஒரு சைக்கலாஜிகள் திங்... 
இதை கால மாறுபாடு என்று சொல்வது அபத்தம் என்று நீங்கள் சொன்னாலும் தனது சார்பியலை எளிமையாக விளக்க இந்த மாதிரி அபத்த எடுத்துக்காட்டுகளை தான்(வேறு வழி இல்லாமல்) உபயோகித்தார் ஐன்ஸ்டைன்.
உங்கள் சார்பியல் கால மாறுபாடு எப்படி இருக்கும் அதை விளக்க முடியுமா என கேட்டதற்கு அவர்," நீங்கள் உங்கள் காதலியுடன் மணிக்கணக்கில் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தாலும் நேரம் போனதை உணர முடியாமல் போகிறது அல்லவா.. அதே நீங்கள் ஒரு சூடான அடுப்பின் மேல் அமர்ந்திருப்பதாக இருந்தால் ஒவ்வொரு நொடியும் மிக நீண்ட காலம் போல் உணர்வீர்கள் அல்லவா அப்படி தான் இருக்கும் சார்பியல் கால மாறுபாடு" _ என்றார்.
அதை கேட்டு கொண்டிருந்த நிருபர் ஒருவர் இதை நீங்கள் ஆய்வு மூலம் சோதனை செய்துகாட்டி நிரூபிக்க முடியுமா என கேட்டதற்கு.. "அந்த பார்க்... காதலி சோதனையை நான் செய்கிறேன்.. அந்த அடுப்பு சோதனை வேணா நீங்க செய்யுங்க வாங்க செக் பண்ணி பார்க்கலாம் " என்றார்.

காலதில் பயணம் செய்ய முதலில் நாம் காலத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் இந்த நீளம்.. அகலம்.. உயரம் கொண்ட 3d உலகில் அடுத்ததாக 4 th dimension.. 4ஆவது பரிமாணம் என்பதாக சொல்லப்படுவது 'காலம்'.
இந்த காலம் என்பது ஒரு சாலை யை போல் அமைந்துள்ளதா அல்லது ஒரு நதியை போலவா என்பது தான் கேள்வி...
காலம் ஒரு சாலையை போல பிரபஞ்சத்தில் விரிந்து சென்று கொண்டிருக்கிறது என்றால் அதில் நாம் கொஞ்சம் வேகமாக ஓடி முன்னால் அல்லது கொஞ்சம் திரும்பி ஓடி பின்னால் பயணிக்கலாம்.
ஆனால் இது ஒரு ஆறு போல அமைந்திருந்தால் அது அடித்து கொண்டு போகிற போக்குக்கு தான் நாம் செல்ல முடியும்.

பொதுவாக காலபயணம் ஒரு வேளை சாத்தியம் என கொண்டால் அது முற்றிலும் வேறு பரிமாணத்தில் இருக்கும் என்கிறர்கள் ... அதில் நீங்கள் பயணம் செல்லலாம் கடந்த கால மானுடர்களை டைனசர்களை காணலாம் ஆனால் அவைகளுடன் எந்த வித தொடர்பும் கொள்ள முடியாது கரணம் நீங்களே அப்போது வேற ஒரு பரிமாணத்தில் இருப்பீர்கள்...
இது உண்மை என்றால் நமது எதிர்கால மாந்தர்கள் இப்போதே நம்முடன் ஏதோ ஒரு மின்காந்த சிக்னல் போல வோ... அல்லது கண்ணுற முடியாத அலைவரிசையில் உள்ள ஒளி அல்லது ஒலியாகவோ இருப்பார்களா என்று என்ன தோன்று கிறது...

ஆனால்.....

இப்படி கால பயண சாதியத்தில் பல சிக்கல் உள்ளது . 
உதாரணமாக "grand father paradox." என்ற ஒன்று.
அது என்ன 'grand father paradox '?
அதாவது ஒரு நபர் இப்போதைய காலத்திலிருந்து கால பயணம் செய்து கடந்த காலத்திற்கு சென்று இறந்து போன தனது சொந்த தாத்தா வை கண்டு பிடித்து அவரை சுட்டு விடுகிறான் என்று வைத்து கொள்வோம் (டேய் தாத்தா ஏன்டா எனக்கு சொத்து சேர்த்து வைக்கல..??)  அப்போது என்ன நடக்கும் கடந்த காலத்தில் இவன் தாத்தாவே இல்லை என்றால் இவன் எப்படி உருவாகி இருக்க முடியும் எப்படி கடந்த காலத்திற்கு செல்ல முடியும் எப்படி சுட முடியும் முரண்பட்டு இடிக்கிறது அல்லவா.
 இதான் grand father paradox

இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞாணியான Stephan Hopkins ஒரு முறை ஒரு கிறுக்கு தனம் செய்தார் (விஞ்ஞாணிகள்னாலே கிறுக்கு தானே)
அது ஜூன் 28, 2009 அவர் ஒரு
ஓரு பார்ட்டிகு அரேஞ் பண்ணி இருந்தார் தன்னை சுற்றி ஷாம்பெயன்கள் சூழ ... வர போகும் விருந்தினர்களை வரவேற்கும் வாசங்கள் பளபளக்க.... ஆனால் அந்த பார்ட்டிக்கு கடைசி வரை யாரும் வர வில்லை காரணம் அந்த பார்ட்டீ அவர் ஏற்பாடு செய்திருந்தது time traveler களுக்காக..
அதாவது அப்படி யாரவது இருந்தால் தனது பார்ட்டி அறிவிப்பை பார்த்து அவர்கள் worm hole பஸ்ஸயோ loop hole ட்ரைனையோ பிடித்து வருவார்கள் என சோதித்து பார்த்தார்..

அதன் பிறகு அந்த சோதனை முடிவை அவர்..'I have experimental evidence that time travel is not possible. என்று தெரிவித்தார்.
 மேலும்..
'I gave a party for time-travellers, but I didn't send out the invitations until after the party. என்றார் (ஆமாம் பின்ன இன்விடேஷன் கொடுக்கலனா யார் வருவா)

'ஐன்ஸ்டைன் தியரி கால பயணத்திற்கு சாதியத்தை காட்டுகிறது என்றாலும் அப்படி வண்டி பிடித்து வரவேண்டும் என்றால் அது ஏற்படுத்தும் ரேடியேஷன் மொத்த ஸ்பெஸ் ஷிப்பை... ஏன் மொத்த கால லூப்பையே அழிக்கும் விதமாக தான் இருக்கும்' என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பாகங்களில் கால பயன சாத்தியங்களை ஒளி வேகத்தில்...மற்றும் ஈர்ப்பு விசை கொண்டு.....அப்புறம் worm hole இல் என பல வகை சாத்தியங்களை பார்த்தோம்... இப்போது ஒரு புது வித அடுத்த சாத்தியத்தை பார்க்க போகிறோம் அதன் பெயர் ..

"டெலிபோர்டேஷன்". 

அதாவது ஒருவரை அல்லது ஒரு பொருளை இங்கே இருந்து அப்படியே மறைய வைத்து பழைய மாயாஜால படத்தில் வருவதை போல டக்கென்று வேறு ஒரு இடத்தில வர வைப்பது..
இதென்னடா மாயாஜால கதை என்று எண்ணி ஒதுக்கி விட முடியாத அளவு அதில் அறிவியல் உண்மை இருக்கிறது...
இந்த சித்து வேலையை ஏற்கனவே வெற்றிகரமாக செய்து விட்டார்கள்.
என்ன ... இது வரை ஒரு அணு அளவில் தான் இது சாத்திய பட்டிருக்கிறது
இதை எப்படி செய்கிறார்கள் தெரியுமா..?
உதாரணத்திற்கு ஒரு கட்டிடம் எடுத்து கொள்ளுங்கள் அது ஆயிர கணக்கான செங்கல்கள் அடுக்க பட்ட அமைப்பு தான் அல்லவா... இப்போது அதை அப்படியே செங்கல் செங்கலாக  பிரித்து வண்டியில் ஏற்றி வேறு இடம் கொண்டு போய் முன்பு அடுக்க பட்டிருந்த  அச்சு அசல் அதே வடிவத்தில் செங்கலை அடுக்கிவைத்தால் அல்லது பழைய கட்டிட மாதிரி வரை படத்தை கொண்டு அச்சு அசலாக வேறு ஒரு கட்டிடம் கட்டினால் என்ன ஆகும் அந்த அதே கட்டிடம் இங்கே கிடைத்து விடும் அல்லவா இதான் கான்செப்ட் .அதாவது ஒரு பொருளை அனுஅணுவாக பிரித்து அதை வேறு இடத்தில் அந்த மாதிரியை அப்படியே உண்டு பண்ணுவது.(கட்டுரைக்கு சம்பந்தமில்லா தகவல்  ஒன்றை இங்கே பகிர்ந்து விடுகிறேனே.. நமது தாஜ்மஹாலை அப்படியே பார்ட் பார்ட்டாக கழட்டி கொண்டு போய் இங்கிலாந்தில் கட்டுவதற்கு மொத்த பிரிட்டிஷ் என்ஜினீரும் முயன்று முடியாமல் விட்டு விட்டார்களாம்.)

இந்த டெலிபோர்ட் கான்செப்டை வைத்து 1998 இல் ஒரு ஆய்வு செய்தார்கள் ஒளியை சுமந்துள்ள ஒரு போட்டான் அணுவை சோதனைக்கு எடுத்து கொண்டு அதன் நுன்அணு கட்டமைப்பை மிக சரியாக வரை படம் எடுத்து வைத்து கொண்டார்கள் .. அந்த தகவலை பக்கத்தில் வேறு ஒரு இடத்தில கடத்தினார்கள் (அதிக தூரம்லாம் இல்லை சுமார் 1 மீட்டருக்கு )அங்கே இதே போல கட்டமைப்பை கொண்ட அணு கூட்டத்தை ...பழைய அணுவில் இருந்ததை போன்றே அதே வரைபட படி ஒரு போலி போட்டான் ஐ வடிவமைத்து பார்த்தார்கள்.
என்ன ஆச்சர்யம் ! தன்னை போல் ஒருவன் வந்த உடனே அந்த ஒரிஜினல் அணு காணாமல் போய் விட்டது. அதாவது வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால் இது இங்கிருந்து அங்கே டெலிபோர்ட் ஆகி விட்டது. இந்த சோதனைகளில் வரைபட தகவலை கடத்துவதும் வேறு ஒரு அனுதான். அதன் பின் கேபிள் ஐ வைத்து கடத்தி பார்த்து வெற்றி பெற்றார்கள்.
2006 இல் லேசரை வைத்து ..அப்புறம் 2012 இல் இதை இன்னும் விரிவாக கிட்ட தட்ட 80 கிமி தூரத்திற்கு
எல்லாம் செய்து பார்த்து விட்டார்கள்.

டெலிபோர்டிங் இல் நாம் டைம் ட்ராவல் மெஷின் போல நேற்று ..நாளை எண்றெல்லாம் போக முடியாதே... சும்மா இங்கே இருந்து அங்கே... என்று தானே டெலிபோர்ட் ஆக முடியும் என்று நினைக்கலாம்... அப்படி இல்லை சார்பியல் கோட்பாடு படி நமக்கு தெரியும் நாம் வெளியை கடந்தால் காலத்தை கடக்க முடியும் என்று..

இதே போல அணு சப் பார்ட்டிகள் அளவில் இன்னும் நிறைய மாயா ஜால சாத்தியங்கள் இருக்கின்றன... உதாரணமாக இங்கே ஒரு அணு துகளை கட்டுப்படுத்தினால் பிரபஞ்சத்தில் வேறு மூலையில் உள்ள ஒரு அணு அதற்கு ஏற்படும் மாறுதலை அப்படியே தலைகீழாக பிரதிபலிக்கும்.. இது வலது புறம் சுற்றினால் அது இடது புறம்...
இதை கையில் வைத்து கொண்டு அந்த அணுவுக்கு நாம் பல கால வெளி இடைவேளை கடந்து தொடரபு கொள்ள முடியும்..(இதை பற்றி விரிவாக விளக்க முன்பு சொன்னதை போல நான் முதலில் குவாண்டம் மேக்காணிசம் என்றால் என்ன என்பதை விளக்க தனி கட்டுரை போட வேண்டும்.)

அதெல்லாம் சரி... ஒரு பொருளை அல்லது அணுவை இங்கே பிரித்து எங்கேயோ கொண்டு போய் சேர்த்து விடலாம் ஆனால் மனிதனை அல்லது வேறு உயிருள்ள பொருளை அணு அணுவாக பிளந்து பல கோடி துண்டாக்கினால் அது எப்படி உயிர் தப்பும்? என நீங்கள் கேட்டால் ....
அதுவந்து..... அது வந்து....அது..... அது....
சரி ..
அடுத்த டாபிக்கு போவோம்....






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~







கால பயணம்
சாத்தியம் என்ன (பாகம் 4)
(மாயை)

அறிவியல் காதலன் ரா.பிரபு

மகா விஷ்ணு ஒரு முறை நாரதருடன் வாக்கிங் சென்று கொண்டு இருந்த போது, நாரதர் விஷ்ணு விடம் ,
"ஏன் சார் இந்த மாயை ..மாயை என்கிறார்களே அது இன்னா மேட்டர்" என்று கேட்டு வைக்க...
"அது அப்புறம் சொல்றன் மொதல்ல எனக்கு செம தண்ணி தாகம் ..மொதல்ல எங்கனா போய் கொஞ்ச தண்ணி பிக் அப் பண்ணிட்டு வாயேன் ப்ளீஸ்" 
என்று கேட்க.. நாரதர் அங்கே அருகில் இருந்த ஆற்றில் தண்ணி பிடிக்க சென்றார்.. 
அங்கே...
 தண்ணி யுடன் சேர்ந்து ஒரு அழகிய கண்ணியையும் கண்டு கவுதம் வாசுதேவ் எஃபக்டில் கண்டதும் காதல் ஆகிவிட  கண்ணனை மறந்து கண்ணி பின்னால் போய்விடுகிறார் .
பிறகு அவளை திருமணம் செய்து கொள்கிறார் ..வாழ்க்கை நடத்துக்குகிறார் ..ரேஷன் கடைக்கு போகிறார் ..பாங்க் சென்று 500, 1000 சில்லறை மாற்றுகிறார்..
இப்போது அவர்களுக்கு 4 பிள்ளைகள் ..

ஒரு நாள்.....

சரியான மழை வந்து ஊரெல்லாம் வெள்ளம்... இவர் வெள்ளத்தில் மாட்டி தத்தளித்து.. ஒரு வழியாக வீட்டை அடைந்தால் ...அங்கு நான்கு பிள்ளைகள் பிணமும் வெள்ளத்தில் அடித்து செல்கிறது ..அழகிய மனைவியும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டார்.
துக்கம் தொண்டை அடைக்க அழுது அப்படியே மயக்கமாகி விழுகிறார் .
 பிறகு திடீரென கண்விழித்து பார்த்த போது .. வெள்ளம் .. மனைவி மக்கள் ஏதும் அங்கு இல்லை .
அங்கே இருந்தவர் மகா விஷ்ணு மட்டும் தான் "தம்பி ..தண்ணி இன்னும் வரல.." என்று நின்றிருந்தார் .
"யோவ் இப்போ என்னணமோ நந்துச்சே அதுல எதுயா உண்மை " என்று நாரதர் கேட்க...
மகா விஷ்ணு சிரித்து கொண்டு ஏதும் அல்ல .. நான் இன்னும் தாகமா இருக்கேன் என்பது மட்டும் தான் உண்மை என்கிறார்... 
"அப்போ அது எல்லாம்" நாரதர் கேட்க..
"எல்லாம் மாயை" என்று ஒலிக்கிறது மஹா விஷ்ணுவின் குரல்.

இப்படி ஒரு கதை நமது புராணத்தில் சொல்ல பட்டிருக்கிறது....
(கொஞ்சம் modify பண்ணி இருக்கன்)
இது மாயை யை விளக்க சொல்ல பட்ட கதையாக நமக்கு சொல்ல பட்டாலும்
இது பக்கா சார்பியல் கோட்பாடு கதையாக.. சொல்ல போனால் time travel ...மற்றும் வேற டைமன்ஷன் ..மாதிரி கதையாகவே நமக்கு தோன்றுகிறது...

விஞ்ஞாணிகளால் காலம் பலவகை சாத்திய கூறாக பார்க்க பட்டு கொண்டிருக்க இது குறித்த மெய்ஞானிகள் பார்வை என்ன தெரியுமா ... ??
அவர்களை பொறுத்த வரை காலம் என்பது ஒன்று இல்லை...
அல்லது வேறு விதமாக சொல்லவேண்டும் என்றால் நமக்கு கடந்த ...நிகழ்....மற்றும் எதிர் ..என மூன்றாக தெரிவது அவர்களை பொறுத்த வரை ஒரே காலம் தான் ..நமக்கு ஆயிரம் ஆண்டு கடந்த காலமாகட்டும் அல்லது 2500 ஆண்டு எதிர் காலமாகட்டும்... அவர்களுக்கு எல்லாமே நிகழ் காலத்தில் தான் நடக்கிறது..
இதை விளக்க ஓஷோ தனது: "பகவத் கீதை சாராம்சம் பார்ட் 2 சாங்கிய யோகம் "  என்ற புத்தகத்தில் ஒரு அருமையான எடுத்து காட்டு சொல்லி இருந்ததை படித்தேன்..

அது....

வண்டி ஒன்று வருவதை ஒரு மரத்தில் மேலே இருந்து ஒருவனும் அந்த மரத்திற்கு கீழே நின்று ஒருவனும் பார்க்கிறார்கள்...
மேலே இருப்பவன் அதோ வண்டி வருது என்கிறான் அவனுக்கு நிகழ் காலத்தில் வண்டி ஓடுகிறது. 
ஆனால் கீழே உள்ளவன் எங்கே தெரிலேயே என்கிறான் அவனை பொறுத்த வரை வண்டி எதிர் காலத்தில் உள்ளது.பிறகு கொஞ்ச நேரத்தில் வண்டி நெருங்கிய உடன் அடடே வண்டி வருது என்கிறான் இப்போ அவனுக்கு வண்டி நிகழ் காலத்தில் ஓடுகிறது...'ஆமாம் வண்டி ஓடுது' என்கிறான் மேலே இருப்பபவன் அவனுக்கு இப்பவும் நிகழ் காலம் தான்..
பிறகு சிறிது நேரம் சென்ற பின் வண்டி கடந்து விட்டது என்கிறான் கீழே உள்ளவன் அவனுக்கு இப்போ வண்டி கடந்தகாலம் ஆகிவிட்டது... 
ஆனால் மேலே உள்ளவன் இப்பொழுதும் வண்டி ஓடுவதை நிகழ் காலத்திலேயே காண்கிறான்...
இப்படி தான் ''மேலே இருப்பவனு''க்கு எப்போதுமே  எல்லாமே நிகழ் காலம் தான்.

கால பயணத்தின் பல வித சாத்திய கூறை கடந்த பாகங்களில் ஆராய்ந்து வரும் நாம் இந்த அத்தியாயத்தில் காலத்தில் பயணம் செய்வது என்பது ஒரு மாயை என்று சொன்னால் நமக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது..
எனவே அடுத்த சாத்தியத்திற்கு போவோம்...

நீங்கள் டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள் அதில் ஆரம்ப பாகங்களில் ஒரு infinity loop பயன் படுத்தி இருந்ததை நீங்கள் கவனித்து இருக்கலாம்..
அதாவது...
எதிர்காலத்தில் நம்மை அடக்கி ஆள போகும் A.I அறிவு கொண்ட மிஷின்களின் ராஜ்யத்தை அழிக்கும் வல்லமை கொண்ட ஒரே மனிதரான' ஜான் காணர்,  தனது தாய்கு கடந்த காலத்தில காலபயனம் செய்து சென்றுள்ள ஒரு ரோபோவால் ஆபத்து என்பதை உணர்ந்து தனது காலகட்டத்திலிருந்து ஒரு மனிதரை தன் தாயை பார்த்துக்க சொல்லி கடந்த காலத்திற்கு அனுப்புகிறார் அவர் அந்த பெண்ணை சந்தித்து லவ் ஆகி கட்டி கொள்கிறார் .. என்ன விசேஷம் என்றால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறகிறது அந்த குழந்தை தான் ஜான் ஓ காணர்..
அதாவது இவர் எதிர்காலத்திலிருந்து வராமல் போய் இருந்தால் ஜான் காணர் என்ற ஒருவன் இல்லை....
அப்படியே இன்னொரு முனையிலிருந்து பார்த்தால்.. ஜான் காணர் என்ற ஒருவனே இல்லை என்றால் இவர் எதிர் காலத்தில் இருந்து வந்திருக்க போவதே இல்லை...
(Infinity loop புரிகிறதா) புரியாதவர்கள் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் புரியும்.

பொதுவாக கால பயணம் எதிர் காலத்தில் போக வேணா சாத்தியம் ஆனால் கடந்த காலத்திற்கு போவது சாத்தியம் இல்லை என்று பலரும் நம்புவதை பார்த்திருக்கலாம் அதற்கு காரணம் கடந்த காலம் என்பது தான் போய் விட்டதே... என்ற சிந்தனையாக இருக்கலாம். 
மேலும் இன்னொரு நடைமுறை பிரச்னை ஒன்றை சொல்லி இருந்தேன் "grand father paradox.."
அதன் படி தனது கடந்த காலத்திற்கு ஒருவன் சென்று தனது உற்பத்தி சோர்ஸ் ஆன தன் தாத்தாவை கொன்று விட்டால் என்னாகும் என்று சொல்லி இருந்தேன் இவன் தாதாவே இல்லை எனும் போது அப்புறம்  இவன் என்ன ஆவான் ..எப்படி தப்புவான்??
 'இவன் தாத்தாவே வந்தாலும் இந்த முரண்பாட்டில் இருந்து தப்ப முடியாது ' 
என்று நீங்கள் நம்பி இருந்தால் ... மன்னிக்கவும் இவனால் முடியாது ஆனால் குவாண்டம் அணுவிற்கு இந்த முரண்பாடு ஜுஜுபி...(எப்படி அது..என்ற யூகம் இருந்தால் வாசகர்கள் comment இல் தெரிவிக்கலாம்)
அது எப்படி முடியும் என நீங்கள் கேட்டால்...அதை விளக்க உங்களுக்கு குவாண்டம் பிஸிக்ஸ் சொன்னால் தான் புரியும் என்று நான் சொன்னால் நீங்கள் ஏகத்திற்கு டென்ஷன் ஆவீர்கள் என்பதால்...
அடுத்த பார்டில் சத்தியமாக சொல்லி விடுகிறேன்..
(அடுத்த பகுதி இறுதி பகுதி)






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~







கால பயணம்
சாத்தியம் என்ன (பாகம் 5)
(குவாண்டம்)

அறிவியல் காதலன்

(ரா.பிரபு)

"உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் நாம் திடீரென விமானம் மூலம் இங்கிருந்து நேரம் வேறுபடும் வேறு பகுதிக்கு சென்று விட்டால் அங்கே டைம் வேறு தானே அப்போ நாம் time travel எளிதில் பண்ணி விடலாமே "

இப்படி ஒரு சந்தேகம் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.

அப்படியென்றால் விமானம் மூலம் வேறு நாட்டிற்கு பயணம் செல்லும் எல்லோருமே time traveler அகிவிடுவார்களே... 
அப்படி அல்ல .
ஒரு பேச்சுக்கு இன்று உங்களுக்கு பிறந்தநாள் இன்றோடு உங்களுக்கு வயது 20 என்று வைத்து கொள்ளுங்கள் . இன்றைக்கு நீங்கள் ஃபிளைட் பிடித்து அமேரிக்கா சென்று இறங்கி விட்டால் உங்களுக்கு ஒரு நாள் வயது குறைந்தவராக ஆகி விட வேண்டும் ஆனால் அப்படி நடப்பது இல்லையே... எனவே இதெல்லாம் time  travel ஆகாது என்று அவருக்கு பதில் அளித்து இருந்தேன்..

காலம் ஒரு நதியை போலவா அல்லது சாலையை போல வா என்று முந்திய பாகத்தில் கேட்டிருந்தேன். ஐன்ஸ்டைன் இதை ஒரு நதியை போல தான் என்கிறார் நதி எப்படி புவி ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு ஒரு இடத்தில் வேகமாகவும் ஒரு இடத்தில மெதுவாகவும் ஓடுகிறதோ அப்படி தான் காலமும் ஈர்ப்பு விசையால் பாதிக்க பட்டு இடத்துக்கு தகுந்தாற் போல் மாறி ஒடுகிறது என்றார். 

காலபயணத்தின் பலவித நடைமுறை சாதியக்கூறை இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்...முதல் பாகத்தில் சார்பியல் தத்துவ அடிப்படையில் மற்றும் அதீத ஈர்ப்பு விசை கொண்டும் இரண்டாம் பாகத்தில் வார்ம்ஹோல் சாத்யத்தையும் மூன்றாம் பாகத்தில் டெலிபோர்டிங் டெக்னாலஜி யை வைத்தும்..நான்காம் பாகத்தில் அது ஒரு மாயையா என்கிற ரீதியிலும் ஆராய்ந்தோம்.. அணைத்து சாத்திய கூற்றிலும் நமக்கு சில முரண் இருந்தது கொண்டு இடித்து கொண்டு தான் இருந்தது .
குறிப்பாக கடந்த காலத்திற்கு செல்வதில்.
 அதீத ஈர்ப்பு விசை கொண்ட பிளாக் ஹோல் மாதிரியான இடத்தின் அருகில் பயணிப்பதன் மூலம் நமது காலத்தை சிறிது நிறுத்தி வைத்து பிறகு நாம் நமது அன்றாட காலத்திற்கு திரும்பி வருவது மூலம் எதிர்காலதிற்கு டைம் ட்ராவல் செய்யலாம் என்பதை ஏதோ ஒரு வகையாக ஒத்து கொண்டாலும் கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமாக தெரியவில்லை அதற்கு காரம் பல அதில் ஒன்று grand father paradox நம்மை போலவே Stephan halpkins அவர்களுக்கும் கடந்த காலத்தில் செல்வது நடக்காது என்ற சந்தேகம் உண்டு.. காரணம் g. f paradox முரண்பாட்டை எதாலும் கடந்து வர முடியாது என்று நமக்கு தெரியும்.

ஆனால்..

அந்த முரண்பாட்டை கடக்க நமக்கு வேனுமானால் முடியாமல் போகலாம் குவாண்டம் துகளுக்கு அது சாத்தியம் என்கிறார்கள்.

அது எப்படி .? 

இதை புரிந்து கொள்ள குவாண்டம் துகள் எப்படி பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சாதாரண உண்மை ..'ஒரு பொருள் ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது' என்பது.இது ஒரு எளிய பவுதிக உண்மை..
ஆனால் இதெல்லாம் நம்ம உலகத்தில் தான். அணு உலகத்தில் அல்ல .குறிப்பாக குவாண்டம் உலகத்தில் அல்ல. 

நீங்கள் ஒரு பேச்சுக்கு மிக மிக மிக மிக மிக சின்னவராக ஆகி  சப் அடமிக் லெவலுக்கு இறங்கி அங்கே உலகம் எப்படி இருக்கு என ஆராய்வதாக கொண்டால்.. அங்கு நீங்கள் நிறைய முரண்பாட்டை பார்க்கலாம். அந்த ரூமில் அங்கு ஒரு துகள் உங்கள் கண் முன் இருக்கும் திடீரென அங்கிருந்து மறைந்து ரூமின் வேறு மூலையில் அது தோன்றும்.. அந்த மாஜிக்கை கூட நீங்கள் ஏற்று கொள்வீர்கள்.. 
ஆனால் ,
இங்கே இருந்து மறைவதற்கும் அங்கே தோன்றுவதற்கு இடையிலான ஒரு சிறு மைக்ரோ கணத்தில் அந்த புள்ளி இங்கேயும் இருக்கும் அங்கேயும் இருக்கும் அதாவது ஒரே நேரத்தில் ஒரு துகள் இரண்டு இடத்தில்...இது எப்படி இருக்கு..?

Double hole experiment என்று ஒன்று உண்டு குவாண்டம் மெசிகாணிசத்தில். அதாவது இரண்டு ஓட்டை உள்ள ஒரு தடை வழியாக போட்டனை அனுப்பினால் அது இந்த ஓட்டை வழியா அல்லது அந்த ஓட்டை வழியா சென்று அதற்கு முன்னால் வைக்க பட்டுள்ள திரையை தாக்கும்.. ஆனால் இது எப்போது என்றால் ஆய்வாளர் இந்த சோதனையை பார்த்து கொண்டு இருந்தால் மட்டும் தான் .
அவர் இதை பார்க்க வில்லை என்றால் அப்போது திரையில் பரவலாக அணைத்து பாகங்களும் தாக்க பட்டிருப்பதை கண்டார்கள் அந்த நேரத்தில் அது ஒரு அலை போல பிரயாணம் செய்து இரண்டு ஓட்டையை அலை போல் கடந்தது தான் காரணம் என கண்டு பிடித்து ஆச்சார்ய பட்டார்கள். 
இதென்ன கூத்து தன்னை பார்க்கப்படுவதால் ஒரு சோதனை எப்படி மாறுபட முடியும் என நீங்கள் நினைக்கலாம் இந்த மாயாஜாலம் தான் குவாண்டம் பிஸிக்ஸ் ஸ்டைல் .இங்கு கண்காணிப்பாளரின் கண்ணுக்கு வரும் ஒளியால் அந்த துகள்கள் பாதிக்க படுகின்றன அந்தளவு அவைகள் நுணுக்கமானவை..
(குவாண்டம் பிஸிக்ஸ் பற்றிய தனி கட்டுரையில் விரிவாக சொல்லுகிறேன் இங்கே அதில் தேவையான அளவு மட்டும் பார்க்கலாம்) 

எலக்ட்ரானின் இருப்பிடத்தை ஆராயும் விஞ்ஞாணி தானும் அந்த ஆய்வுபடு பொருளில் ஒரு அங்கம் ஆகிறார்..
அந்த இரு துளை சோதனையில் போட்டான் நாம் பார்த்தால் ஒரு மாதிரியும் பார்காவிட்டால்  ஒரு மாதிரியும் திரையில் மோதுவதை சொன்னேன் அது திரையில் மோத போகும் அந்த கணத்தில் திடீரென கவனித்தால் என்ன நடக்கிறது என்று பார்த்த போது ஆச்சர்யம் இருமடங்கானது ..
இந்த கனத்திலும் பார்வையால் பாதிக்க பட்டு அந்த துகள் மீண்டும் ரிவர்ஸில் தனது மூலஸ்தானத்திற்கு சென்று இரு வேறு துளை வழியாக வெளியேறியது அதாவது துகள் கொஞ்சம் கடந்த காலத்திற்கு பயணம் பண்ணியது.

ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருக்க கூடிய சாத்தியத்தை கொண்ட குவாண்டம் துகள்கள் Grand father paradox ஐ கடக்க முடியும் இதில்  ஒரு மனிதனுக்கு பதில் இந்த துகள் பயணம் சென்றால் அங்கு தனது தாத்தாவை சுட்டுவிட்டு அவர் அழியும் அதே கணம் தானும் அழிய ....தான் அழியும் அதே கணம் தனது இன்னோரு தான் நிகழ் காலத்தில் பிரயாண பட்டு வந்து விட அங்கே தான் அழிந்தாலும் அங்கு மறைந்து இங்கு.... இந்த நிகழ் காலத்தில் அது தப்பி வந்து இருக்கமுடியும் என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

கால பயணம் சாத்தியத்தை தொடர்ந்து ஆராய்ந்து வந்தோம் இதன் முடிவில் நீங்கள் "கால பயணம் சாத்தியம் தான்" என்பதை உணர்ந்தால் அது சரி தான் ..
"சாத்தியம் அல்ல" என்று உணர்ந்தால் அதுவும் சரிதான் .
காரணம் அதன் சாத்தியகூறு ஊசலாட்டத்தில் இன்னமும் இன்றைய மஹா விஞ்ஞாணிகளே தடுமாறி கொண்டு தான் இருக்கிறார்கள்..
என்னை பொறுத்தவரை கால பயணம் சாத்தியமா இல்லையா என்றால்... சாத்தியம் தான் ஆனால் அதற்கு நாம் இன்னும் மிக மிக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.

"கால பயணம் " பயணத்தில் இனைந்து பயணித்ததற்கு நன்றி...

அன்பு நண்பன் ..
அறிவியல் காதலன் 

ரா.பிரபு

பின்னூட்டதை waatsapp இல் தெரிய படுத்த ...9841069466.

நன்றி











Comments

  1. நல்ல தகவல் சகோதரர்

    ReplyDelete
  2. படிக்கும் போது கற்பனைகள் பல வருது நண்பரே.
    கண்டிப்பா கால பயணம் சாத்தியம் தான்.
    இப்போ நாம இந்தியாவுல இருக்கோம் இங்க இருக்கிற நேரத்துக்கும்
    அமெரிக்காவுல இருக்க நேரத்துக்கும் வேறுபாடு அதிகமாக இருக்கு உங்களுக்கே தெரியும் கிட்ட தட்ட 9:30 மணி நேரம் வேறுபாடு வருது இங்க இருந்து 1 மணி நேரத்துல அமெரிக்கா போக முடிஞ்சா 8:30 மணி பின்நோக்கி பூறோம்.

    ReplyDelete
  3. ஒரு வினாடிக்கு 3 லச்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் time reverse ஆகும்...

    ReplyDelete
  4. அது எப்படி சித்தர்கள் போல் நாம் இந்த உடலை சிறிய துகளாக மாற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் பூமி ஒரு வட்ட வடிவம் என்பது உண்மையானால் அதற்க்கு ஆரம்பம் முடிவும் இல்லை என்பது உண்மையெனில், எங்கு முடிந்ததோ அங்கேயே தொடங்கும் நிச்சயமாக கால பயணம் சாத்தியமாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"